27 பிறக்கப் போவது ஆணா பெண்ணா
மகனோ மகளோ வரப்போறான்!
***மடியில் தவழ்ந்து விழப்போறான்!
அகமும் புறமும் நிறைந்தவளே!
***அன்னை யானாய் ஆருயிரே!
பூத்துக் குலுங்கும் மரமானாய்!
*** புன்னகை வழங்கும் முகமானாய்!
காத்துக் கிடந்த எங்களுக்குக்
*** கண்முன் கடவுள் நீயானாய்!
காலால் உதைப்பது தெரிகிறதா?
*** கனிவாய் நகர்வது இனிக்கிறதா?
மேலே துடிப்பது ரசிக்கிறதா?
*** மேனி சிலிர்த்துச் சிவக்கிறதா?
கற்பனை யில்முகம் தெரிகிறதா?
*** கண்களில் ஜீவன் ஒளிர்கிறதா?
பற்களில் லாத புன்னகையில்
*** பாசம் பொங்கி வழிகிறதா?
ஆசைப் பட்டதைக் கேளம்மா!
*** அள்ளித் தருவேன் வாங்கம்மா!
பேசிச் சிரித்து மகிழம்மா!
*** பிள்ளைக்கும் சேர்த்தே உண்ணம்மா!
பாரம் தூக்கக் கூடாது!
*** படிகள் ஏறக் கூடாது!
தூரப் பயணம் ஆகாது!
*** துக்கம் அச்சம் கூடாது!
பாதி வேலை நான்செய்வேன்!
*** பக்கத் துணையாய் நானிருப்பேன்!
பாத பூஜை செய்கின்ற
*** பக்தன் போல அருகிருப்பேன்!
நிலவை மலரைப் பாரம்மா!
*** நிறைந்த மனதோ டிருஅம்மா!
உலவிக் காற்றில் மகிழம்மா!
*** உயர்ந்த நினைப்பே நினையம்மா!
வீரக் கதைகள் படியம்மா!
*** வேந்தனைப் பெற்றுக் கொடுஅம்மா!
ஞானக் கதைகள் படியம்மா!
*** நல்லவ னைப்பெற்றுக் கொடுஅம்மா!