அஃது யாதென அதுவே சொல்லும் – 2

இருள்மறை இளம்பகல்
பொழுதினில் துயில்களைந்
தெழுந்ததும் முகம்நுகர்
நறுந் தேநீர்...!

*****

இளம்பிறைக் கருஇமை
இரண்டதன் நடுவினில்
சுடர்ந்தெழும்‌ கதிரென
திகழ் சாந்து!

*****

பசித்திருச் சிறுமலர்
இடையினில் தவழ்ந்திட
முழுமதி யிரவினில்
தரும் சோறு...!

*****

சுடர்பவன் சுடுந்தழல்
சிரந்தனை வறுத்ததும்
படர்ந்திரு மரம்தரு
குளிர் நீழல்...!

*****

புதைகுழி சதுப்பதில்
பிறப்பது முளைப்பினும்
நுகர்நறு மணந்தரும்
மலர்க் கமலம்!

*****

இவரவர் செய்குவர்
எனுங்குர லெழுங்கணம்
விரைந்துயிர்த் துயர்த்துடைப்
பெருந்தொண்டு!

*****

குருஉரை மறைபொருள்
இடர்தனில் புரிபட
உளந்தனில் பெருகிடும்
உணர் வாறு!

*****************************************
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (1-Jun-15, 10:41 pm)
பார்வை : 139

மேலே