பயணம்

ஒரு சராசரி நாளின்
சாதாரணமான அவசரமான
அலுவலகம் நோக்கிய
பயணம் அது....
கரியமில வாயுவில்
கரைந்துவிடாமலிருக்க
போருக்கு போவதுபோல்
கண்களை மட்டும் தெரியவிட்டு
முழுதும் போர்த்திக்கொண்டு நான்.....
அதிகாலையிலிருந்தே
மழையைக் கருத்தரித்து
பிரசவிக்க தயாராய் திரண்டிருந்தது
கார்மேகக் கூட்டம் ....
விசில் ஊதுவதற்கு முன்பே
ஓடிவிடும் ஓட்டக்காரர் போல்
முந்திக் கொண்டு வந்தது
ஒரு சின்ன மழைத்துளி ....
அந்த பாலத்தின் ஓரத்தில்
வண்டியை திருப்பும் நேரத்தில்
எதேர்ச்சையாய் நான் நிமிர
நிகழ்ந்தது ஆனந்த விபத்து ...
ஓடி வந்த ஒற்றை துளி
கண்ணில் பட்டு
என்னில் கரைந்தது
இனிதே முடிந்தது
இருவரின் பயணமும் .....