வடிகால்
திறந்து வைத்து காத்திருப்பது
தென்றலின் வருகைக்கா
வெப்பத்தின் வெளியேற்றத்திற்கா
எதுவாய் இருப்பினும்
எனதாய் இருக்கும்
என் செல்லச் சாளரமே
வடிகாலாய் உயிர்பெரும் வார்த்தைகள் யாவும்
விடியாத இரவுகளின் ஒளிபடர்ந்த யாகம்
உனை பாதி திறந்து
பாதி மூடிவைத்து இருப்பதும் கூட
காரணமாகத்தான்
அடுக்கடுக்காய் அழுந்திவளரும் மனத்துகள்கள்
மலையாகி கனத்திடும் நேரம்
சற்று வெளியேறி காற்றுவாங்கி வரும்
அனைத்தையும் அனுப்பிவிட்டால்
என்னுடன் யார் இருப்பார் கனவெளியில்
சில சொற்கள் உள்ளிருந்தே விசிறிக்கொள்ளும்
எது எப்படியோ
நீ இருப்பதால்
இதய இயக்கம்
இனிதாய் உளது
விடைபெற்ற பின்னும்
நினைவுகளாய் நிற்கும்
கவிதைகளில்
வாழ்ந்துகொள்ளும்
என்
செல்லச் சாளரம்!