சந்தோஷக் கேடு

........................................................................................................................................................................................
தன் நண்பன் சேகரை பரிதாபமாகப் பார்த்தான் ரகு. டிரிம் செய்த மீசையும் இஸ்திரி போட்ட சட்டையும் மெல்லிய நறுமணமுமாய் எப்போதும் இருப்பவன் இப்போது முள்ளுத்தாடியும் சாராய நாற்றமுமாய் இருக்கிற கோலம் சகிக்கவில்லை.
“டேய்..! என்னடா இது? கல்யாணமாகி எட்டு வயசுல பையன் இருக்கிறபோது எவனோ ஜோசியக்காரன் சொன்னான்கிறதுக்காக கட்டின பெண்டாட்டியையும் கூடப் பிறந்த தம்பியையும் சந்தேகப்பட்டு உன் வாழ்க்கையை இப்படி நரகமாக்கிக்கிறே?”
“ முடியலியேடா... முடியலியேடா... ” தன் நெற்றியில் தட்டிக்கொண்டு அரற்றினான் சேகர். பையனுக்கு எட்டு வயதாகும்போது அப்பாவுக்கு ஒரு கண்டம் வரும்; அந்த கண்டத்திலிருந்து தப்பித்தால் அப்பனின் ஆயுள் எண்பது வயதுக்கு மேல் போகும்..! என்று ஒருஜோசியக்காரர் பையன் செந்திலின் ஜாதகத்தை கணித்து சொல்லியிருந்தார்.
இரண்டு மாதம் முன்னாடிதான் செந்திலின் பிறந்த நாளை குதூகலமாகக் கொண்டாடி அவனுக்கு ஆடைகளும் சைக்கிளும் பரிசாகக் கொடுத்தான் சேகர். எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்த போது சேகரின் தம்பிக்கு சாலை விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர நேர்ந்தது. உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது என்று டாக்டர்கள் ஆரம்பத்தில் எழுதி வாங்கிக் கொண்டாலும் ஒரு வழியாக உடல் தேறி ஒரு வாரத்துக்கு முன்புதான் வார்டுக்கு மாற்றினார்கள்.
குடும்பம் கடவுளுக்கு நன்றி சொல்லி அப்பாடா என்று பெருமூச்சு விட்டபோது சேகரின் மனதில் அந்த சந்தேகக் கீற்று புறப்பட்டது.
செந்திலுக்கு எட்டு வயது ஆன பிறகு அவன் அப்பனுக்கு வர வேண்டிய கண்டம் தம்பிக்கு வந்து விட்டதா?
திடீரென்று தம்பிக்கு சாலை விபத்து ஏன் ஏற்பட்டது? அதுவும் சரியாக பையனின் எட்டாவது வயதில்? ஆபத்து எனக்கல்லவோ வர வேண்டும்?
இதன் பொருள்...? செந்தில் யாருக்குப் பிறந்தவன்?
கல்யாணமான புதிதில் சேகரின் தம்பி வல்லபன் சேகர் வீட்டில்தான் தங்கியிருந்தான். சேகருக்கு இருந்த வேலைப் பளுவில், அவன் கம்பெனி அவுட்- ஹவுசில் பல இரவுகள் தங்க நேர்ந்திருக்கிறது.. அப்போதெல்லாம் சேகரின் மனைவி வைசாலியும் வல்லபனும் தனியாகத்தான் இருக்க நேரிட்டிருக்கும்.....
அவன் மனதைக் குத்தி குத்தி ரணமாக்கிய சந்தேகம் இதுதான்..!
ரகசியமாகப் பையனை அழைத்துக் கொண்டு போய் ஒரு மூன்றாம் மனிதனைப் போல தனக்கும் அவனுக்கும் டிஎன்ஏ பரிசோதனை கூட செய்து விட்டான். மருத்துவர் இருவரின் ரத்த மாதிரிகளையும் பரிசீலித்து இரண்டுமே நன்றாக ஒத்துப் போகிறது என்று அறிவித்த பிறகாவது அவன் நிம்மதியாக இருந்திருக்கலாம்...
“ டாக்டர், இந்த டெஸ்ட்டுல இன்னாருக்கு இன்னார் என்ன உறவுன்னு சொல்லுங்க” என்று கேட்டிருக்கிறான்.
ரத்த மாதிரியில் ரத்த சம்பந்தம் உண்டா இல்லையா என்பது மட்டும்தான் தெரியும்; உறவையெல்லாம் கண்டுபிடிக்க முடியாது என்ற மருத்துவரின் விளக்கம் அவன் சந்தேகத்தை நீக்கவில்லை.
“ எல்லோருமே ரத்த சம்பந்தம் உள்ளவங்க தானடா..! தம்பியும் ரத்த உறவுதான்; தம்பி மகனா இருந்தா அதுவும் ரத்த உறவுதானடா.. ” என்று பிதற்றி பித்தேறியவனை என்ன சொல்லி சமாதானப்படுத்த?
அந்த ஜோசியக்காரரும் இறந்து போய் விட்டார்.
தன்னை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சந்தேகத்தை மனைவியிடமே கேட்டு விட்டான்.
ஆரம்பத்தில் ஸ்தம்பித்து நின்றவள் அழுது புரண்டு மகன் அவனுக்குப் பிறந்தவன்தான் என்று சத்தியம் செய்தாள். இந்த விஷயம் அவள் பெற்றோருக்குத் தெரிந்து அது சண்டையில் முடிந்தது.
முன் போல் மனைவியுடன் பழக முடியாமலும் மகனிடம் ஒட்ட முடியாமலும் குடிப் பழக்கத்துக்கு ஆளாகிப் போனான் சேகர்.
சேகரின் மனைவி வைசாலி ரகுவிடம் சொல்லி சொல்லி அழுதாள். மகன் “அப்பா” என்று வந்தால் அவனை இரு கைகளாலும் தூக்கி வெறிக்க வெறிக்க பார்க்கிறானாம். அப்படியே அவனைக் கீழே போட்டு விட்டு தரையைக் குத்துகிறானாம். அப்பாவைப் பார்த்தாலே பாவம் சின்னப் பையன் நடுங்குகிறானாம்...
சேகரின் மனதை மாற்ற ரகுவும் என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். “சரிடா.. செந்தில் உன் தம்பி பையன்னே வச்சிக்கோ.. ! இப்ப என்ன பண்றதா உத்தேசம்? அவங்களை வெட்டிப் போடப் போறியா? ”
“இல்லடா..! இல்லடா..! அப்படி ஒருக்காலும் இருக்காது..! ” தணலில் இட்ட புழுவாகத் துடித்தான் சேகர்.
அவனுடைய ஒரே கேள்வி: பையன் மூலம் தந்தைக்கு வர வேண்டிய கண்டம்தான் தன் தம்பிக்குப்
போயிருக்கிறதா...?
“டேய்..! அது உன் தம்பியோட தலையெழுத்துடா..! உன் மகனால வந்ததுன்னு ஏண்டா நினைக்கிறே? அவங்கங்க வினை அவங்களுக்கு..! தீதும் நன்றும் பிறர் தர வாரான்னு கேள்விப்பட்டதில்லையா? முடிச்சுப் போட்டு குழப்பிக்காதேடா....! ”
எந்த விளக்கமும் அவனை சமாதானப் படுத்தவில்லை.
அவனைத் தொழில் ரீதியாகத் திருப்பி, அவ்வபோது ஆசுவாசப்படுத்துவான் ரகு. இருவருமே பெரிய பெரிய கம்பெனிகளின் ஜெனரேட்டர், பாட்டரி, மின் இணைப்பு போன்ற மின் மயமான வேலைகளைச் செய்து தருபவர்கள்.
செந்தில் எட்டே முக்கால் வயதைக் கடந்தான்.
ஒரு முறை தனக்கு வந்திருந்த சேவை அழைப்பை சேகருடன் பகிர்ந்தான் ரகு. நிருபம் கம்பெனியில் மோட்டார் ரூமில் ஏதோ பிரசினை.
“ மொத்தம் பதினெட்டு லைன்..! பெரிய டிரான்ஸ்ஃபார்மர் .! மோட்டார் ரூம் போகலாம், வா..! ”
மோட்டார் ரூமில் கண்டதையும் போட்டு வைத்திருந்தார்கள். கிழிந்த மெத்தை, கார்ப்பெட்..!
“ ஸ்டோர் ரூமில போடுறதுக்காக எடுத்துட்டு வந்திருக்காங்க..! ஸ்டோர் ரூம் சாவி எவன் கிட்டயோ மாட்டிடுச்சாம். மழை வர்ற மாதிரி இருக்கவும் அவசர குடுக்கைப் பசங்க இங்கேயே லோடை இறக்கிட்டு போயிட்டாங்க..! ” ரகு விளக்கினான்.
“ சரி, சேகர்.. இது மெயின் போர்டு சாவி..! மானேஜர் ரூமில ஃப்யூஸ் போயிருக்கு..! மெயினை ஆஃப் பண்ணிட்டு அந்த லைனை செக் பண்ணிடு..! ஞாபகமா மெயின் பாக்ஸை பூட்டி சாவியை வச்சுக்க..! ராகவன் வர்றத பார்த்தேன்..! ரெண்டு டீ வடை சொல்லிட்டு வந்துடறேன்..! ”
சொல்லி விட்டு ரகு கிளம்ப, சேகர் உற்சாகமாக மெயின் சுவிட்சை நோக்கி நடந்தான்.
பத்து நிமிடம் சென்றிருக்கும்...
ஆ..!..!
அலறல்..! காதைக் கிழிக்கும் அலறல்..! சேகரின் அலறல்..!
ரகு ஓடி வந்தான்..! ஷாக் அடித்திருக்கிறது..! பக்கத்திலிருந்த மூங்கில் கழியால் நெம்பி சேகரை விடுவிக்க முயற்சித்தான்..!
ஊஹூம்...
அந்த மரண வேதனையிலும் சேகரின் முகத்தில் மலர்ச்சி தென்பட்டது..! “செந்தில் என் மகன்டா...! செந்தில் என் ம...க....ன்ன்ன்ன்... தான்......டா ஆ...ஆ! ”
மல்லாக்க சேகர் விழுந்தபோது அவன் இதயத் துடிப்பு நின்று விட்டிருந்தது..!
வியர்வையில் தெப்பலானான் ரகு..! மயக்கம் வரும் போலிருந்தது..! என்ன விபரீதம் இது?
பதினெட்டு வரிசைகளில் ஒரு வரிசை, மெயின் சுவிட்ச் முடங்கி விட்டால் யுபிஎஸ்ஸிருந்து தானாகவே மின்சாரம் எடுத்துக் கொள்ளும்..! அந்த லைனை செயலிழக்கச் செய்ய மோட்டார் அறைக்கு வெளியே போய் வேறொரு சுவிட்சை அணைக்க வேண்டும். இது ரகுவிற்குத் தெரியும்.
ஆனாலும் ரகு அந்த சுவிட்சை முடக்கவில்லை. சந்தேகப் பேய் பிடித்து அலையும் சேகர் மின்னோட்டமுள்ள வரிசையில் கை வைக்க வேண்டும்.., மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட வேண்டும்..., லேசாக ஒரு கால் முறிவோ கை முறிவோ ஏற்பட்டால் அதையே உயிருக்கு வந்த கண்டம் என்று நம்பி தன் ஆதாரமற்ற சந்தேகத்தை விட்டொழித்து விடுவான் என்று ரகு நினைத்தான்..! பழைய மெத்தைகளையும் கார்பெட்டுகளையும் ரகு அங்கு போட்டு வைத்திருந்தது பலமான காயம் ஏற்படாமல் தடுக்கத்தான்..!
ஆனால் எப்படி?
உயிரைப் போக்கும் அளவு அந்த லைனில் மின்சாரம் பாயாதே?
வேகமாக ஓடிப் போய் சாவி எடுத்து மெயின் பாக்ஸை பார்த்தான்.
பாவி..! அடப்பாவி... படுபாவி..!
சேகர் மெயின் சுவிட்சை ஆஃப் செய்யவே இல்லை..! ஜோசியக்காரனின் கணிப்பு மெய்யானால்தான் தனக்கு நிம்மதி கிட்டும் என்று அப்படியே போயிருக்கிறான்..! மூவாயிரம் வோல்ட்டுக்கும் அதிகமான மின்சாரம்..!
திரும்பிப் பார்த்தான்..!
ரொம்ப நாள் கழித்து வாய் கொள்ளாப் புன்னகையுடன் .... தரையில்......
முற்றும்.