ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவையானது ஒற்றுமை. அதற்கு அடிப்படை மனிதநேயம். இவற்றைத் தம் பாடல்கள் மூலம் அறிவுறுத்தினார் பாரதியார்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த
ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும்

(வந்தே மாதரம் - 4)

எனப் பாரத சமுதாயத்தின் மேம்பாட்டுக்குத் தேவை ஒற்றுமையே என்று கூறுகின்றார். ஒற்றுமை தேவை என்பதை அறிய வேண்டும் என்று கூறாது ஞானம் வந்தால், (அதாவது அறிவுத் தெளிவு ஏற்பட்டால்) போதும் வேறு எதுவும் வேண்டாம் என வலியுறுத்துகிறார். இது நம் சிந்தனைக்கு விருந்தாகும்.

இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்,

எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்தநிலை பொதுவாகும்!
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்.

(வந்தே மாதரம் - 5)

என வாழ்விலும் சாவிலும் கூட ஒற்றுமையுடன் இருப்போம் என்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் இந்திய மக்கள் தொகை முப்பது கோடி என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இந்திய ஒற்றுமைக்குப் பாரதியார் அணுகிய பாதையே சரியானது எனக் கூறலாம். ஒவ்வொரு மாநிலத்தின் தனிச் சிறப்புகளை மற்ற மாநிலத்தவர் போற்றிப் பாராட்ட வேண்டும், பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் ஒற்றுமை ஓங்கும்; வேற்றுமை அகலும் என்கிறார்.

‘பாரத தேசம்’ என்ற பாடலில் சிங்க மராட்டியரின் கவிதைக்கு ஈடாகச் சேரநாட்டு யானைத் தந்தங்களைப் பரிசளிப்போம்; வங்காளத்தில் உள்ள நீர்வளத்தைக் கொண்டு மத்தியப் பிரதேசத்தில் விவசாயத்தைப் பெருக்குவோம்; கங்கையாற்றுப் பகுதியில் விளையும் கோதுமைக்கு ஈடாக காவிரியாற்றுப் பகுதியில் விளையும் வெற்றிலையைக் கொடுப்போம் எனக் கூறுகின்றார்; மாநிலங்களுக்கு இடையேயான, மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகளைத் தகர்த்துப் பாரத ஒற்றுமையை வலியுறுத்துகிறது இப்பாட்டு. மாநிலங்களுக்குரிய பொருண்மைகளைப் பாரத நாட்டின் உடைமைகளாக மாற்றுவதின் வழியே ஒரு தேசிய ஒற்றுமையை உருவாக்க வழிகாட்டும் வகையில் இப்பாட்டுப் பாடப்பெற்றது. இப்பாட்டின் ஏனைய பகுதிகளிலும், மொழிவாரியான மக்களுக்கு இடையே கொண்டும் கொடுத்தும் வாழ்கின்ற ஒரு பரிவருத்தனை உறவுமுறை சித்தரிக்கப் பெறக் காணலாம்.

மனித நேயம்

அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கள்பண் புஇலா தவர்

(திருக்குறள். 997)

என்பது திருக்குறள். கூர்மையான அறிவு இருந்தாலும் மனிதப் பண்பு இல்லாதவன் மரம் போன்றவனே என்பது இதன் கருத்து. எனவே ஒருவன் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதும், இரக்கம் காட்டுவதும், மற்றவர் துன்பம் கண்டு வருந்துவதும், இன்பம் கண்டு மகிழ்வதும் மனிதப் பண்புகளாகும். இவை அனைத்தும் அன்பின் அடிப்படையில் நடப்பவை. நேயம் என்ற சொல்லுக்கு அன்பு என்று பொருள். மனிதன் மற்றவர்மீது செலுத்தும் அன்பு என்ற மனிதப்பண்பே மனித நேயம் எனப்படும். இதனைப் பாரதியார்,

பக்கத் திருப்பவர் துன்பம் - தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி

(உயிர்பெற்ற தமிழர் பாட்டு - 16)

எனக் கூறுகிறார். யார் ஒருவன் தன் அருகில் இருப்பவன் துன்பத்தைக் காணப் பொறுக்காது வருந்துகிறானோ, யார் ஒருவன் அடுத்தவர் துன்பம் போக்க உதவி செய்கிறானோ அவனே சிறந்த புண்ணியம் செய்தவன் என்பது அவர் கருத்து. ஆகையால்,

உற்றவர் நாட்டவர் ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம்

(உயிர்பெற்ற தமிழர்பாட்டு. 15)

என்று பாடுகிறார். தன்னைச் சார்ந்தவர்கள், தன்னாட்டினர், தன் ஊரினர் இவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவதும் அவர்களுக்கு இன்பந்தரும் செயல்களைச் செய்வதுமே நல்ல தவமாகும் எனத் தவத்துக்கு மனிதநேய அடிப்படையில் புதுவிளக்கம் தருகிறார் பாரதியார்.

எழுதியவர் : (8-Sep-15, 11:41 am)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 36867

சிறந்த கட்டுரைகள்

மேலே