பூமியின் வடிவம் சதுரம்

விஸ்வநாதன் என்ற என் பெயரை சுருக்கி விச்சுவென்றே நீங்கள் என்னை அழைக்கலாம். ஒரு காலத்தில் பூமியின் வடிவ அமைப்பில் எனக்கு ஒரு குழப்பம் இருந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை பூமியின் வடிவம் சதுரம்தான். அதில் எந்தவிதமான மாற்றக் கருத்தும் கிடையாது. சதுரம் என்றால் சரியான சதுரம் என்றோ அல்லது செவ்வகம் எனறோ நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு வடிவம். ஒவ்வொரு மூலையின் கோணமும் நிச்சயம் 90 டிகிரி இருக்கும். நீங்கள் நினைப்பது போல நீள் சதுரம் என்று கூட வைத்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் ஆரம்பப் பள்ளியில் நீங்கள் மனப்பாடம் செய்தது போல நானும் விழுந்து விழுந்து பூமியின் வடிவம் வட்டம் என்று மனப்பாடம் செய்தவன்தான். பின்னாளில் அது எவ்வளவு தவறான புரிதல் என்று எனக்குத் தெரியவந்தது. பூமி வட்டமில்லை, அது சதுரம்தான் என்று என் கண்டுப்பிடிப்பை இது நாள் வரை யாரிடமும் நான் பகிர்ந்து கொண்டதில்லை. என் அப்பாவிற்கு மட்டும் அரசல் புரசலாகத் தெரியும் என்று நினைக்கிறேன்.
ஒரு நாள் அப்பா “ஆமாம் விச்சு, நான் நல்லா யோசிச்சுப் பார்த்தேன். நீ சொல்றது சரிதான்” என்றார். என்னுடைய முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. மகிழ்ச்சியில் ஒரு பறவையைப் போல இந்த பூமியை சுற்றி வந்தேன். கைகள் இரண்டையும் நன்றாக விரித்து கண்களை இறுக மூடிக்கொண்டேன். பூமியின் மேல் கால்கள் பாவாமல் அப்படியே உயரங்களைத் தீண்டும்போது அப்பாவிற்கு கொஞ்சம் மேகங்களை கைகளில் ஏந்திக்கொண்டு வந்தேன். அப்பாவும் என் கைகளில் இருக்கும் துளி மேகத்தை கலைக்க மனதில்லாமல் அதில் தன் கன்னத்தை வைத்துக்கொண்டு அதன் குளிர்ச்சியை ரசித்தார். குளிர்ச்சியான மேகத்தை உள்ளங்கைகளில் அதிக நேரம் பிடிக்க முடியாமல் நான் தடுமாறிய போது, சிரித்துக் கொண்டே அவரின் கைகளுக்கு மாற்றச் சொன்னார். அதை ஒரு பொக்கிஷம்போல பாதுகாத்து வீடு வரை எனக்காகக் கொண்டு வந்தார். இப்படியாகத்தான் விச்சு என்ற நான் மேக சேமிப்பை ஒரு பொழுது போக்காக ஆரம்பித்தேன் என்பது வரலாறு.
விடிந்தவுடன் முதலில் வருவது பால்காரர் அண்ணா பாலாஜிதான். வழக்கமாக நாம் திரைப்படத்தில் பார்ப்பது போல தலையில் துண்டைச் சுற்றிக்கொண்டு அரைக்கை பனியனுடன் இருக்கமாட்டார். அவருடைய மகன் போட்டுக் கழித்த (கிழித்த) ஜீன்ஸுடன் ஒரு சாயம் போன சட்டையையும் போட்டுக்கொண்டு சைக்கிளில் வருவார். எங்கள் வீட்டு வாசல் கேட்டை வலது கையால் பிடித்துக்கொண்டு, வலது காலை தரையில் ஊன்றி இடது காலை பெடலில் வைத்துக்கொண்டு குரல் கொடுப்பார். “என்னா விச்சு, எப்படி இருக்கே?” வழக்கமான் விசாரிப்பு என்றாலும் ஒவ்வொரு தடவையும் அதை மிகவும் ஆர்வத்துடன் கேட்பார். அப்படி அவர் கம்பீரமாக நிற்பதைப் பார்ப்பதற்காகவே அவருக்காக காத்துக்கொண்டிருப்பேன். அதற்கடுத்து என் தங்கை பள்ளிக்குக் கிளம்பத் தயாராகிவிடுவாள். பள்ளி வேன் வந்ததும் குரல் கொடுப்பேன். என்னிடம் கை அசைத்தபடியே வாசலைத் தாண்டி வீட்டிற்கு முன் நிற்கும் பள்ளி வண்டியில் ஏறுவாள். இன்று பள்ளியில் விளையாட்டு தினம் என்பதால் வெள்ளை யூனிஃபார்மும் வெள்ளை கான்வாஸ் ஷூவும் அணிந்திருந்தாள். பள்ளி வேனை நோக்கி அவள் ஒரு முயல் குட்டி போல ஓடுவதை நானும் அப்பாவும் சேர்ந்து ரசிப்போம்.
அப்பாதான் அலுவலகம் போவதற்கு முன்பு என்னை குளிப்பாட்டிவிடுவார். எனக்கு எந்த நிறம் பிடிக்கும் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும். எனக்கும் என் தங்கைக்கும் அப்பாதான் அனைத்தும். உணவு சமைப்பது, குளிப்பாட்டுவது, பாடம் சொல்லிக் கொடுப்பது என தொடங்கி, படுக்கைக்குப் போகும் முன் கதை சொல்லுவது வரை அப்பாதான்.
நான் பெரியவனான பிறகு என்னவாக ஆக ஆசை என்று என்னிடம் அப்பா அடிக்கடி கேட்பார். அதிக தடவை நான் ஒரு பைலட்டாக வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறேன். ஓரிரு சமயம் ஒரு சிறந்த பாலே டான்ஸராகவோ அல்லது ஓட்டப் பந்தய வீரனாகவோ இருக்க ஆசை என்று கூறியதாக ஞாபகம் இருக்கிறது. அப்பா என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். என்னால் நிச்ச்யம் முடியும் என்ற அவரின் நம்பிக்கையில் இதுவரை எந்த மாற்றமும் இருந்ததில்லை.
புதன் கிழமை அப்பா ஆபீஸுக்கு போகவில்லை. முழு நாளும் என்னுடனேயே இருந்தார். தங்கை பள்ளிக் கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் மூவரும் பீச்சிற்கு போனோம். கடற்கரை மணலில் தங்கையின் பாதப்பதிவுகள் அழகாகவும், அப்பாவின் பாதப் பதிவுகள் மிகவும் அழுத்தமாகவும் இருந்தது. வழி நெடுக மணலில் கிடக்கும் சிப்பிகளை சேகரித்த தங்கை அதை ஊதித் துடைத்து என் நீட்டிய கைகளில் வழிய வழிய நிரப்பினாள். இருவரின் பாதப் பதிவுகளை ஏக்கமாக நான் பார்ப்பதைக் கவனித்த அப்பா, என்னை கீழே இறக்கி மணலில் நிற்க வைத்தார். பிறகு என்னை மார்போடு சேர்த்தெடுத்து அணைத்துக் கொண்டார். கடற்கரையை நெருங்கிவிட்டோம். அருகில் இருக்கும் மணல் திட்டில் என்னை உட்காரவைத்து என் அருகில் அமர்ந்து கடலையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். “இப்போ சொல்லு, பூமியின் வடிவம் என்ன?” உடனே நான் பதில் அளித்தேன். “பூமியின் வடிவம் வட்டம்”. இந்தப் பதிலில் எனக்கு துளியும் சம்மதம் இல்லை எனினும், அப்பாவின் மகிழ்ச்சிக்காக ஒரு பொய் சொல்வதில் தவறில்லை என்று எண்ணினேன். வீட்டிற்கு வந்தவுடன் கட்டிலில் என்னை படுக்க வைத்தார். பாதி செயலிழந்த என் கால்களை நம்பிக்கையுடன் தடவிக் கொடுத்தார். கட்டிலின் அருகில் இருக்கும் ஜன்னல் வழியாகப் பார்க்க இந்தப் பூமி மீண்டும் சதுரமானது அப்பாவிற்குத் தெரியாது..

எழுதியவர் : பிரேம பிரபா (20-Sep-15, 7:40 pm)
பார்வை : 178

மேலே