எழுக இன்றே
பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களுக்கு
தமிழன்னை விருது
வேலூர் உலகத் தமிழ் வளர்ச்சி மன்றமும், தமிழர் உலகம் இலக்கியத் திங்களிதழும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் எழுக இன்றே என்ற என்னுடைய கவிதை முதல் பரிசு பெற்றது. 24 – 10 . 2015 அன்று வேலூரில் நடைபெற்ற விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் அவர்கள் தமிழன்னை விருதும் பரிசுத் தொகையும் வழங்கி சிறப்பு செய்தார்.
பரிசு பெற்ற கவிதை
எழுக இன்றே
பாவலர் கருமலைத்தமிழாழன்
அன்னையினை இழிவுசெய்யும் தமிழா வீட்டில்
---அருந்தமிழைக் கொலைசெய்யும் தமிழா நாட்டில்
உன்மொழியை ஏளனமாய்ப் பேசிப் பேசி
---உயர்மொழியைத் தாழ்வுசெய்து கீழ்மை யானாய்
முன்னோர்கள் வழிவழியாய்ப் பேணிக் காத்த
---முத்தமிழில் பிறமொழியின் மாசைச் சேர்த்து
விண்வெளியில் ஓசோனைக் கெடுத்த தைப்போல்
---விளைவித்தாய் ஊறுதனைத் தூய்மை நீக்கி !
இறைவனையே மயங்கவைத்த மொழிதான் உன்றன்
---இனியமொழி ! தமிழ்புலவன் சொல்லுக் காக
இறைவன்தான் தூதாகச் சென்ற தைப்போல்
---இங்குவேறு மொழியினிலே வரலா றுண்டோ1
குறைசொல்லி இறைவனுக்கே ஆகா தென்று
---குரைக்கின்றார் பழிக்கின்றார் தட்டிக் கேட்டுக்
கறைகழுவ முயன்றதுண்டா ! சொந்த நாட்டில்
---கனல்கக்கி எழுவதற்கும் தயங்கு கின்றாய் !
அறிவியலைத் தமிழ்மொழியில் கற்ப தற்கும்
---ஆகாதென் றுரைக்கின்றார் ஆமென கின்றாய்
அறிவியலைத் தொகைப்பாட்டில் பத்துப் பாட்டில்
---அன்றேஉன் முன்னோர்கள் சொல்லி வைத்தும்
அறிவிலியாய் அதையெடுத்துச் சொல்வ தற்கும்
---அறியாமல் இருக்கின்றாய்! எடுத்து ரைக்கும்
அறிஞரையும் ஏளனமாய் ஏசு கின்றாய்
---அறிவுபெறும் நினைவுமின்றி உறங்கு கின்றாய் !
வடநாட்டார் தலைமீது கல்லை ஏற்றி
---வானுயர்ந்த இமயத்தில் வில்பொ றித்துக்
கடல்கடந்து நாடுகளை வென்றெ டுத்துக்
---கப்பலிலே சென்றங்கே வணிகம் செய்து
நடனமொடு கட்டடமாய் கலையில் ஓங்கி
---நல்லாட்சி பண்பாட்டில் உயர்ந்து நின்ற
தடந்தோளின் தமிழாஉன் பண்டை மாண்பை
---தரைமீது நிலைநாட்ட எழுக இன்றே !