பார்த்த ஞாபகம் இல்லையோ

பார்த்த ஞாபகம் இல்லையோ?
---------------
சென்னை புறநகர்ப் பகுதியில் ஒன்பது மாடிகளுடன் பிரமாண்டமாய் நின்று கொண்டிருந்தது அந்தத் தனியார் மருத்துவமனை. இதயம், சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்குப் புகழ் பெற்ற அங்கு கூட்டத்துக்கு எப்போதும் குறைவே இல்லை. இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மத்திய அமைச்சர் பரணீதரன் அங்கு ஓய்வில் இருக்கவே விஐபி-க்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சிறுநீரக மருத்துவத்துறை தலைவரும், மருத்துவமனையின் இயக்குநர்களில் ஒருவரும் தனது பால்யகால நண்பனுமான சரவணனை சந்தித்து மகனின் திருமணத்துக்கு நேரில் பத்திரிகை தர அதிகாலையிலேயே கோடம்பாக்கத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தான் விஸ்வநாதன். 9 மணிக்கு மேல் ஆகிவிட்டால் சரவணன் ஆபரேஷன் தியேட்டருக்குப் போய் விடுவானே என்ற பரபரப்பு விஸ்வநாதன் முகத்தில் பிரதிபலித்தது. அமைச்சரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு தனது 10 வயது மகனை வலது கையால் அணைத்தவாறு வழக்கத்துக்கு மாறாக எளிமையான உடையில் வந்து கொண்டிருந்தாள் தேன்சுவை எம்.பி.

சோதனைகள் முடிந்து மூன்றாவது மாடியில் டாக்டர் சரவணனின் அறையை விஸ்வநாதன் அடைந்த போது மணி 8.30. ஆறு அடி உயரமும் அதற்கேற்ற உடல்வாகுமாய் அழகன் என்று சொல்லத்தக்க தோற்றத்தில் ஐம்பது வயதை சமீபத்தில் தொட்ட சரவணன் மற்றொரு லிப்டில் வந்து கொண்டிருந்தார். அவரது வருகையை அடுத்து அந்த மூன்றாவது மாடியே சுறுசுறுப்பானது. ‘அய்யா எப்படி இருக்கீங்க, அம்மா எப்படி இருக்கீங்க, தம்பி எப்படி இருக்கீங்க. சிஸ்டர் எப்படி இருக்கீங்க’ என்று காத்திருந்த நோயாளிகளை விசாரித்துக் கொண்டே வந்தவர் விஸ்வநாதனைக் கண்டதும், ‘வாடா விசு’ என்று தோளில் கை போட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

தான்சானியாவைச் சேர்ந்த இளம்பெண் காத்திருப்பதாக ரிசப்ஷனிஸ்ட் இன்டர்காமில் சொன்னாள். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தனது டாக்டர் தந்தைக்கு சிறுநீரகம் தர முன் வந்திருக்கும் அவளை உள்ளே அனுப்பச் சொன்னார் சரவணன். நீங்களும் உங்களது தந்தையும் ஒரே ரத்தப் பிரிவை கொண்டவராக இருப்பதால் அறுவைச் சிகிச்சையில் சிக்கல் ஏதும் இருக்காது. பீரியட் டைம் ஏதும் இல்லையே, நாளைக்கு ஆபரேஷனுக்குத் தயாராயிருங்கள் என்று ஆங்கிலத்தில் தெரிவித்தார் சரவணன். ‘தேங்க் யூ’ என்பதற்கு இணையான ஸ்வாஹிலி மொழி சொல்லான ‘அசான்டே’ என்று கூறி விடை பெற்றாள் இளம்பெண்.

‘என்னடா விசு, ரொம்ப நாள் ஆச்சு பாத்து. தொலைபேசியிலே கூட பேசலையே?’

‘நீ மட்டும் என்னவாம்? பார்த்திபனோட கல்யாணப் பத்திரிகை. நீ எங்களோடவே கல்யாணத்துக்கு கூட வந்து நடத்திக் கொடுக்கணும். ஏற்கெனவே வாக்கு கொடுத்திருக்கே. மறந்துடாதே’.

‘தவளையும், கரப்பான் பூச்சியும் வரைய முடியாது தவித்த எனக்கு ரெகார்டு நோட்டில் முழு படத்தையும் நீ வரைந்து கொடுத்ததை மறக்கலே. பிரதிபலனா உன்னோட மகன் திருமணத்துக்கு எங்கு இருந்தாலும் கட்டாயம் வருவேன்னு அப்போ சொன்னதை தசரதனிடம் கைகேயி வாங்கிய வரமா இப்போ பயன்படுத்தறீயா?’

‘அப்படிதான் வச்சிக்கோயேன்’

‘கடலூருக்கு வர தயங்குவேன்னு தெரிஞ்சும் அங்கேயே மகனின் திருமணத்தை வச்சு என்னை வந்தாகணும்னு கட்டாயப்படுத்துவது எந்த விதத்திலேடா நியாயம்?’

‘காரணமாய்தான் வரச் சொல்றேன். ஏமாத்திடாதே’

‘விசாலியைக் கேட்டதாய் சொல். கல்லூரி ஆசிரியர் பணி எல்லாம் எப்படி இருக்கு? கல்யாணத்தில் சந்திப்போம். வாக்கு தவறமாட்டேன்’ – நண்பனை வழியனுப்பி விட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு செல்லத் தயாரானார் சரவணன்.

திருமண சத்திரத்தில், தனது அறையில் பத்தாம் திருமுறையான திருமந்திரம் பாடலில் மூழ்கியிருந்தார் டாக்டர் சரவணன்.

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டா

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்

இயக்கில்லை போக்கில்லை யேயென்ப தில்லை

மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே

-கருப்பை பற்றிய எத்தனை யதார்த்தமான பாடல். திருமந்திரத்தின் பெருமையை எனக்கு விளக்கி அதனை படிக்கத் தூண்டிய எனது பேஷன்ட் நாகராஜனை நெஞ்சார வாழ்த்தினேன்.

காலிங் பெல் சத்தம் கேட்கவே எரிச்சலுடன் எழுந்து ரூம் கதவைத் திறந்தேன். முதியவர் மற்றும் 12 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் விஸ்வநாதன் நின்று கொண்டிருந்தான்.

‘சாரிடா! எனக்கு வேண்டியவங்க. ராத்திரிக்கு இவங்க இங்க தங்கிக்கட்டும்’ தர்மசங்கடத்துடன் நகர்ந்தான் விசு.

என்னதான் நண்பன் வருந்தி அழைத்தாலும் அதற்காக அவனது மகன் திருமணத்துக்கு கல்யாணக் குழுவினரோடு அவர்கள் வந்த பஸ்ஸிலேயே வந்ததும் இல்லாது, கல்யாணச் சத்திரத்திலும் தங்கியது பெரும் தவறு என்று நொந்துகொண்டேன். கடிகாரத்தைப் பார்த்தேன். 11 மணிக்கு பத்து நிமிடம் இருந்தது. படிக்கும் மூடு போய்விட்டதால் புத்தகத்தை மூடிவிட்டு கட்டிலில் படுக்கையை சரிசெய்து படுத்துக் கொண்டேன்.

‘நீங்க படுக்கும்போது லைட்டை அணைச்சுடுங்க’ உள்ளே வந்தவர்களிடம் முகம் கொடுத்து பேசாது கண்களை மூடிக்கொண்டேன்.

முதியவரும், அந்தச் சிறுமியும் தரையில் ஜமக்காளத்தை விரிக்கும் சப்தம் கேட்டது. தலையணை அவர்களுக்கு இருக்கிறதா என்று கூட கேட்கத் தோன்றவில்லை. ‘அங்கிளுக்கு நம்ம மேலே கோபம் போல இருக்கு’ என்று முதியவரிடம் சிறுமி காதோடு ரகசியம் பேசுவது நன்றாகவே எனக்கு கேட்டது.

அதிகாலை 5.30 மணிக்கு கண்விழித்தபோது குட்டிப் பிசாசு இரட்டை ஜடை அலங்காரத்துடன் பச்சைப் பாவாடை சட்டை போட்டுக் கொண்டு ஜன்னலைத் திறந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஓசைப்படாது பின்னால் நின்றேன்.

கடலூர் -சிதம்பரம் செல்லும் சாலையில் காட்டு பங்களா கணக்காய் அமைந்திருந்த அந்தத் திருமண சத்திரத்திலிருந்து விடியலைப் பார்ப்பது ரம்மியமாய்தான் இருந்தது. சில்லென்ற காற்று இதமாய் உடலை வருடியது. வயல்வெளிகள், தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் என கண்ணுக்கு எட்டியவரை பசுமை. பறவைகள் பல்வேறு குரலில் கச்சேரி செய்து கொண்டிருந்தன.

‘அங்கிள் எழுந்தாச்சா? பாத்ரூமிலே வெந்நீர் வாங்கி வச்சுருக்கேன்’ தேங்ஸ் கூட சொல்லத் தோன்றாது அமுக்கமாய் இருந்தேன்.

‘இங்க பாருங்களேன். நாரை, கொக்கு, குருவி, புறா, கிளின்னு எத்தனை விதமான பறவைக் கூட்டம்’

‘நீ என்ன பறவையியல் நிபுணரா?’

‘வர்ண நாரை, சாம்பல் நாரை, நத்தை குத்தி நாரை, குருட்டுக் கொக்கு, வெள்ளைக் கொக்கு, பொன்னிற மாம்பழக் குருவி, வால் அல்லிக் குருவி, இரட்டை வால் குருவி, தையல்காரக் குருவி, வண்ணாத்திக் குருவி, கொண்டைக் குருவி, தூக்கணாங் குருவி, சூரைக் குருவி, தேன் சிட்டு, வீட்டுப் புறா, பாறைப் புறா, மரகதப் புறா… பறவை வகை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’

என்னால் சிரிப்பை மறைக்க முடியவில்லை. மருத்துவமனையில் எனது அறை ஜன்னலை எப்போதாவது திறக்கும்போது சன் ஷேடுகளில் புறாக்கள் சில சமயம் ஹூ-ஹூ-ஹூன் என்று கூவிக் கொண்டு ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும். சன்ஷேடுகளை எச்சமிட்டு அசிங்கப்படுத்தும் அவற்றைக் கண்டாலே கோபம் கோபமாய் வரும். இயற்கையை ரசிக்கவே நமக்கு மறந்துபோய்விட்டதோ என்ற ஆதங்கத்துடன் பாத்ரூமை நோக்கி நடந்தேன். வெளியே வந்தபோது காப்பியை வாங்கி மூடிவைத்து விட்டு அந்த குட்டிப் பிசாசு காணாது போயிருந்தது.

முகூர்த்தம் முடிந்து நான் சாப்பிடும் போது எதிரில் அந்தச் சிறுமி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நான் கண்டும் காணாதது போல் இருந்தேன். தன் வயதை ஒத்த ஒன்றிரண்டு வாண்டுகளுடன் என்னருகில் வந்தவள், ‘எங்களை திருப்பாதிரிப்புலியூர் கோயிலுக்கும், சில்வர் பீச்சுக்கும் கூட்டிகிட்டு போறீங்களா?’ வம்புக்கு இழுத்தாள். ‘சின்னக் குழந்தை கேட்குது. நம்ம காரிலே போயிட்டுதான் வாயேண்டா’- பரிந்துரை செய்தான் விசு.

வேண்டா வெறுப்பாக இருந்தாலும் போய்தான் வருவோமே என்றும் தோன்றவே குட்டிப்பிசாசு சகிதம் கிளம்பினேன். படிக்கும் காலத்தில் சுற்றுலா வந்தபோது பார்த்த சில்வர் பீச்சில் அந்த வாயாடியுடன் நடந்து கடல்நீர் காலை முத்தமிட நின்றேன். ‘தமிழகத்தில் நாகப்பட்டினத்துக்கு அடுத்தபடியா சுனாமி பெரிய அளவில் பாதித்த கடற்கரை இது. இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாயிட்டாங்க’- புள்ளிவிவரம் தந்தாள்.

‘கோயிலை சாத்திடப்போறாங்க. சீக்கிரம்’ என திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் கோயிலுக்கு விரைவுபடுத்தினாள். ‘சிவன் சுயம்பு மூர்த்தியாய் இங்கு எழுத்தருளியுள்ளார். அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், சம்பந்தரால் தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற ஸ்தலம்’ என்று அர்ச்சகரை முந்திக் கொண்டு விவரம் தந்தாள். நீண்ட நேர நடைக்குப் பின் பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு சென்றோம். பட்டாடை அணிந்து பிரமாண்டமாய் ஓங்கி உயர்ந்து நின்றாள் அம்பாள். கர்ப்பக்கிரகம் அருகே அன்றைய உபயதாரர் குடும்பம் நின்று கொண்டிருந்தது. வாண்டுகளை உபயதாரர் உள்ளே வருமாறு செல்லமாக அழைத்தார். குட்டிப்பிசாசு எனது கையையும் பிடித்து இழுத்துச் சென்றது. எத்தனை நாள்களுக்குப் பின் தெய்வ தரிசனம்! மெய்சிலிர்த்தது.

‘அங்கிள், நீங்க என் பெயரைக் கேட்கவே இல்லையே. அம்மன் பேருதான் என் பெயர்.

முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர… எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்துமு வர்க்கத் தமரரும்… அடிபேண

- மாலையில் திருமண வரவேற்பில் அருணகிரிதாசன் திருப்புகழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்.

கல்யாண சத்திரத்தில் ஓரமாய் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். திடீரென அங்கு ஆஜரான பெரியநாயகி, ‘இது முருகன் அடிஎடுத்துக் கொடுக்க அருணகிரிநாதர் பாடிய பாடல்’ என்றாள்.

‘உனக்கு என்னதான் தெரியாது’

‘பொய் சொல்லத் தெரியாது. போட்டுக்கொடுக்கத் தெரியாது, காக்கா பிடிக்கத் தெரியாது’

‘பெரியநாயகி! கிட்ட வா. உனக்கு ஏதாவது தரணும் போல இருக்கு’

‘முதுகிலே ரெண்டு போடறதுக்குத்தானே’- தப்பித்து ஓட முயன்றவளை அருகில் இழுத்தேன்.

‘திருப்புகழ் பாடறவருக்கு ஏதாவது கொடுங்களேன்’

ஐநூறு ரூபாய் தாளை அவளிடம் நீட்ட, அதை அருணகிரிதாசனிடம் கொடுத்துவிட்டு சிட்டாய் மறைந்துவிட்டாள். கல்யாணம் முடிந்து மறுநாள் கிளம்பும் வரை மீண்டும் அவள் கண்ணில் படவில்லை. விசுவிடமும் அவளைப் பற்றி ஏனோ கேட்கத் தோன்றவில்லை.

புதுமணத் தம்பதியுடன் பஸ்ஸில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். எனது பக்கத்து இருக்கையில் விசு இருந்தான்.

‘கடலூருக்கு வருவதையே பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் தவிர்த்து வந்த என்னை மகனின் திருமணத்துக்கு வரவழைத்து மூன்று நாள் கட்டிப்போட்டுவிட்டாயே? இது நியாயமா?’

‘ஆனாலும் உனக்கு கல் மனசுடா. சௌந்தர்யா பற்றி நீ எதுவுமே விசாரிக்கலையே?’

‘அம்மா, அப்பா இல்லாத குறை தெரியக்கூடாதுன்னு சகோதரனா மட்டுமில்லாது பெற்றோர் ஸ்தானத்திலே இருந்து சௌந்தர்யாவை எவ்வளவு ஆசையாய் வளர்த்தேன். படிக்க வச்சேன். எனது திருமணத்தைக் கூட தவிர்த்தேன். என்னவா எல்லாம் அவளை ஆக்கணும்னு மனக்கோட்டை கட்டினேன். எல்லாத்தையும் நொடியிலே சீர்குலைத்து கடலூர்காரனான ஆட்டோ ஓட்டும் தூரத்து சொந்தக்காரனை மணந்தே தீருவேன்னு பிடிவாதம் பிடிச்சு அற்ப ஆயுசிலே அவனோடேயே விபத்தில் போய் சேர்ந்தவளை பற்றி இப்ப என்னடா வீண் பேச்சு?’

‘மெத்த படிச்ச கிராதகன்டா நீ. நான் அப்பவும் சொன்னேன். இப்பவும் சொல்றேன். ஒருத்தரை உருவாக்கினதா சுயதம்பட்டம் அடிச்சுகிறவனை போல முட்டாள் யாரும் இல்லை. நாம ஒரு கருவி அவ்வளவுதான். நாம இல்லாவிட்டா என்ன? அந்த கருவியா வேறு ஒருத்தர் கட்டாயம் இருப்பாங்க. நினைச்சதெல்லாம் நடக்காது. கேட்டதெல்லாம் கிடைக்காது’

‘கடலூருக்கு உன்னை காரணமாய்தான் கூப்பிடறேன். டாக்டர் தொழிலைக் காரணம் காட்டி ஏமாந்திடாதேன்னு திரும்பத் திரும்ப கிளிபிள்ளையாய் சொன்னேயே. காரணத்தை சொல்லவே இல்லையே?’

‘பெரியநாயகியைப் பத்தி என்ன நினைக்கிறே?’

‘படு விஷமக் கொடுக்கு. நானே உங்கிட்ட அவளைப் பத்தி கேட்கணும்னு இருந்தேன். யாருடா அவ?’

‘ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பது சரியாதான் இருக்கு. வருஷக் கணக்கிலே கிட்ட இருந்து பார்த்த சௌந்தர்யா சாயல் அவளுக்கு இருந்தும் கூட அவளை யாருன்னு உன்னாலே கண்டுபிடிக்க முடியலையேன்னு எனக்கு வெட்கமாய் இருக்கு. பார்த்த ஞாபகம் இல்லையோன்னு உன்னை பார்த்து பாடணும் போல இருக்கு’

‘இதை இவ்வளவு சாவகாசமாய் சொல்ல உனக்கு வெட்கமாயில்லையாடா?’

‘சரவணா! பிரிஞ்ச ஒரு குடும்பத்தைச் சேர்த்து வைத்த பாக்கியம் இந்த கல்யாணத்தை சாக்கா வைச்சு கிடைக்கும். அது மூலமா அந்தக் குழந்தைக்கு மறுவாழ்வு கிடைக்கும்னு நம்பினேன். பாவி! நீதான் வலிஞ்சு வலிஞ்சு கிட்ட வந்த அந்தக் குழந்தைகிட்ட பாராமுகம் காட்டி நோக அடிச்சிட்டியே’.

‘நீதிபதி கணக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாம நண்பனா விவரமா சொல்லுடா’

‘பார்த்திபனுக்குப் பெண் பார்க்க போனபோதுதான் பெரியநாயகியை சம்பந்தி வீட்டிலே பார்த்தேன். சௌந்தர்யா சாயல் இருக்கவே விசாரித்தேன். அவர்களுக்கு தூரத்து சொந்தமான பெரியநாயகிக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதையும் தெரிந்து கொண்டேன். திருமணத்துக்கு உன்னை வரவழைத்து எல்லாத்தையும் சொல்ல நினைச்சேன். நீதான் அதுக்கு எனக்கு இடமே கொடுக்கலையே’

‘என்னடா குண்டுகளை கொத்து கொத்தாய் வீசறே?’

‘மாமாவோட பிடிவாதம், கோபம் பற்றி அம்மா நிறைய சொல்லி இருக்கா. ஆனா அவர் ஒரு முசுடுன்னு சொல்லாம விட்டுட்டா. மாமாவை பார்த்ததே போதும். அவரோட போக எனக்கு விருப்பம் இல்லை. நான் யாருன்னு அவருக்கு தெரியாமலே இருக்கட்டும் என்று பெரிய மனுஷியாய் அந்தக் குழந்தை சொன்னதைக் கேட்டு நானே ஆடிப்போயிட்டேன்’

‘என்னை ஒரு அரக்கன்னே முடிவு செஞ்சிட்டியா விசு. குழந்தையோட விலாசத்தைக் கொடு. புதுச்சேரியிலே நான் இறங்கிக்கிறேன். கடலூர் திரும்பி அவளை சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வரேன். கருவில் நான்காவது மாதத்திலிருந்து தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது தொடர்ந்து இயங்குகின்ற உறுப்பு சிறுநீரகம். அது அந்த குட்டிப் பிசாசுக்கு பாதிக்கப்பட்டிருக்குன்னு கேட்டும் பதறாமல் இருக்க நான் ஒன்றும் மரக்கட்டை இல்லை. சிறு நீரக அறுவைச் சிகிச்சைக்கு அவசியமிருக்காதுன்னு நினைக்கிறேன். மாற்று ரத்தப் பிரிவு சிறுநீரக அறுவைச் சிகிச்சையும் இப்போ சாத்தியமாகியிருக்கு. தேவைப்பட்டா என்னோட சிறு நீரகத்தை அவளுக்கு தரவும் தயாராய் இருக்கேன்’

‘இப்போ நீ டாக்டரா பேசினாயா, குழந்தையின் சொந்தக்காரனாய் பேசினாயா என்பதை நான் ஆராய விரும்பவில்லை. என் நண்பன் மனுஷனாயிட்டான்னு பெருமையாயிருக்கு’- சரவணனை ஆரத் தழுவிக் கொண்டான் விஸ்வநாதன்.

புதுச்சேரியில் சரவணன் இறங்கிக் கொள்ள பஸ் சென்னை நோக்கி விரைந்தது.


+
வாணிஸ்ரீ சிவகுமார் -

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (28-Oct-15, 10:28 pm)
பார்வை : 113

மேலே