பிறர் வேதனை அறிக - இது உண்மை கதை
பிறர் வேதனை அறிக!
---------------------------------
இது உண்மை கதை.
-----------------
ஒரு குடும்பத்தில் அம்மாவும், எட்டுக் குழந்தைகளும் இருந்தார்கள். குழந்தைகளின் அப்பா எப்போதோ இறந்துவிட்டார். அம்மா ஒரு நோயாளி. எனவே அவளால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. நாட்கணக்காக எல்லோரும் முழுப்பட்டினி. அழுவதற்குக்கூட சக்தியில்லாமல் சோர்ந்து கிடக்கின்றன சின்னஞ்சிறு குழந்தைகள். என்ன செய்வதென்று தெரியாமல் அம்மா அளவற்ற துயரத்தில் தவித்தாள். பட்டினியால் குழந்தைகள் இறந்துவிடுவார்களோ என்று கூட அவளுக்குப் பயமாக இருந்தது.
இந்தக் குடும்பத்தின் கஷ்ட நிலையை யாரோ அன்னை தெரேசாவிடம் சொன்னார்கள். இதைக் கேட்டு மனம் வருந்திய அன்னை தெரேசா, உடனே கொஞ்சம் அரிசியும் அத்தியாவசியப் பொருட்களும் எடுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றார். அந்த நோயாளித் தாயிடம் அரிசியையும், பொருட்களையும் கொடுத்தார்.
உடனே அந்தப் பெண்மணி, அன்னை தெரேசா கொடுத்த பொருட்களையெல்லாம் இரண்டாகப் பங்கு பிரித்தாள். மூத்தக் குழந்தையிடம், ஒரு பங்கு அரிசியை எடுத்து சோறு சமைக்கச் சொல்லிவிட்டு, இன்னொரு பங்கு பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
அவள் திரும்பி வருவதற்குச் சிறிது நேரமானது. அது வரை காத்திருந்த அன்னை தெரேசா அவள் வந்ததும் கேட்டார்: “”எங்கே சென்றிருந்தீர்கள்? நாங்கள் உங்களுக்காகக் காத்திருந்தோம்.”
அந்த அம்மா சொன்னாள்: “”பக்கத்து வீட்டிலும் வறுமைதான். அங்கும் பசியுடன் இருக்கிறார்கள். பாதி அரிசியையும், பொருட்களையும் அங்கே கொடுப்பதற்காகத்தான் சென்றிருந்தேன்.”
இதைச் சொல்லும்போது அவளது குழி விழுந்த கண்கள் மின்னின. அது கடவுளின் ஒளிபோன்று தெரேசாவிற்குத் தோன்றியது. அந்த அம்மாவின் கண்கள் மூலம் கடவுளே தன்னைப் பார்ப்பதாக அவர் உணர்ந்தார்.
தன் குடும்பமே கொடும் பட்டினியில் துடிக்கும்போதும், பக்கத்து வீட்டு வறுமையை மறக்காத அந்த அம்மாவின் உள்ளம் இருக்கிறதே, அதுதான் இந்த உலகத்திலேயே மிக உயர்ந்தது. பிறர் வேதனை கண்டு துன்புறும், அந்த அன்பிற்கு இணையாக எதுவுமில்லை குழந்தைகளே!
+
வாணிஸ்ரீ சிவகுமார்