கல்லறைகளின் மகிழ்ச்சி

பெண் கருவே
உன் வருகையை எதிர்பார்த்து
பெருத்த மார்புக் கிளைகளில்
சுரந்திருக்கும் பாலை
பருக்கிவிடுவதற்காக
பருத்தக் காம்புகளுடன்
காத்துக்கிடக்கும் கள்ளி மரங்கள்.

தீராத மோகங்களுடன்
தெருநாய்ப்போல் திரிகின்றக்
குறிக்கோள் கொண்டு
புணர்தலுக்கான வன்முறைகளுடன்
வரைமுறை கடந்து
திக்கெட்டும் மறைந்துகிடக்கும்
காமப் பிசாசுகள் உன்னை
ஆட்டிவைக்கக் நாள் குறித்து
விட்டிருக்கும்.

உனது பருவத் தேன்வதைகளை
பிழிந்து பருகிவிடும் நோக்கத்தை
உன் தேவைகளை தீர்க்கின்ற
திருத்தேவையாக்கி
பாலியல் இலஞ்சம் வாங்கி
பசி தீர்க்கக் காத்திருக்கின்றன
பதவி நாற்காலிகளும்

உன் வளர்ச்சி பாதைகளின்
வல்லூறுகளிடமிருந்து
தப்பித்து வந்து
தாம்பத்திய வாழ்வுக்கான
தர்ம பத்தினியாக நிற்கும்
உன் கொள்ளை அழகை
கொள்ளை அடிப்பதற்கும்
காத்துக்கிடக்கின்றார்கள்
சீதன முகமூடியணிந்த
மாப்பிள்ளைத் திருடர்கள்.

தொடருகின்ற
புலி ஆடு புல்லுக்கட்டு
விளையாட்டில்
உன்னோடு மல்லுகட்டக்
மாமியார்த் தாடகை
யுத்தகாண்டத்திற்கான இடம்பார்த்து
உன் வருகைக்காய்க் காத்திருக்கக் கூடும்

இச்சை நார்களில்
பூவாய் சூடி
சருகாக்கி விடுவதற்கு
வாய்பிளந்து பல்லிளித்து
வரவேற்கக் காத்திருக்கும் இந்த
சமுதாயத்தின் தீ நாக்குகளின்
பசிக்கு இரையாகுவதற்குப் பதில்
கருவறைக்குள் கரைந்து போ ...
கல்லறைகளாவது மகிழ்ச்சி கொள்ளட்டும்.


*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Nov-15, 2:21 am)
பார்வை : 225

மேலே