குருவல்ல, வியாபாரி நீர்

காட்சி: பாண்டவர் ஐவரும் வித்யை கற்று கொடுத்த குருவையே ஏமாற்றும் நிலை வந்ததே எனும் தர்ம சங்கடத்தில் ஆழ்திருந்தனர். கண்ணன் தனது திட்டம் வெற்றி பெறுவதை காண சித்தமாக பார்த்திருந்தான். அஸ்வத்தாமன் இறந்தான் எனும் செய்தியை கேட்டதில் எரிமலையாய் மனம் கொதித்து போனார் குரு துரோணர். அதை ஏற்றுகொள்ளமுடியாமல் தன் வேதனையை கொட்டி தீர்த்தார் குரு .

துரோணர்: இந்த அகிலத்தையே அழிக்க தோன்றுகிறது; எரித்து சாம்பலாக்க தோன்றுகிறது. எனது அன்பு புதல்வனை மண்ணில் சாய்த்த பாண்டவர்களே! இவ்வுலகில் எவரும் பிழைக்க கூடாது அனைவரும் அழிய வேண்டும். அனைவரையும் நான் அழித்து காட்டுவேன். பகவான் பரசுராமர் தன்னிடம் இருந்த அஸ்திரங்களை அன்று என்னிடம் வழங்கினார். அந்த அஷ்திரங்களை கொண்டு ஒரு சமயம் பரசுராமர் ஷத்திரிய உலகம் அனைவரையும் 21 முறை அழிக்க வல்லவராய் விளங்கினார். சிந்தனைகெட்டாத அந்தணன் கோபம் வெளிப்படும், துரோணனின் வாயிலாக பரசுராமரின் கோபத்தை காண்பீர்கள். நான்… பகவான் பரசுராமர் அளித்த அஸ்திரங்களால்... அகிலம் அனைத்தையும் அழித்து காட்டுவேன். இந்த அகிலம் அனைத்தும் அழிந்து போகட்டும்!!!

கிருஷ்ணன்: விரைந்து அகிலத்தையே அழித்து காட்டுங்கள் குரு துரோணர்ரே!! காலன் கண்ணணின் கட்டளையால் நிற்கிறான்) அஸ்திரத்தை தாம் ஏந்துவதற்கு முன்னால் நான் கூறும் கருத்தையும் சற்றே சிந்தித்து பாருங்கள். ஒருவேளை தம்மிடத்தில் அஸ்வத்தாமன் என்னும் பெயர் கொண்டு இறந்தது தம்முடைய புதல்வனல்ல ஒரு யானை என்று கூறினால்? இனி உள்ள வாழ்வு உண்மையில் தமக்கு இன்பத்தினை வழங்குமா? தம்முடைய ஹிருதயம் தனில் மீண்டும் கருணையானது பிறக்குமா?

துரோணர்: தாம் கூறுவது உண்மையா வாசுதேவரே? உண்மையில் எனது புதல்வன் மரணிக்கவில்லையா?

கிருஷ்ணன்: ஒருவேளை இன்று தமது புதல்வன் மரணிக்கவில்லை எனில், நாளை மரணிப்பான். பிறந்தவர் அனைவரும் இறக்கத்தான் வேண்டும். ஆனால் வினவப்பட்ட கேள்வி அதுவல்ல. தம்முடைய வாழ்வில் சுக துக்கம், ஆசை நிராசை, ஞானம் அஞ்ஞானம், அனைத்தும் தம் புதல்வனோடு பின்னி பிணைந்ததா? தம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது வேறெதுவும் இல்லையா? தம்முடைய அணைத்து சக்திகளும், அணைத்து ஞானமும், தம்முடைய புதல்வனையே சார்ந்ததா?

துரோணர்: நிச்சயமாக. அவன் அகிலத்தில் ஜனித்தது என்னால், அவனால் சுகத்தையும் சிநேகத்தையும் பெற்றேன். எனது வாழ்வில் அவனைவிட மகத்துவம் வாய்ந்தது வேறேதுமில்லை. தந்தையாகப் பட்டவன் புதல்வன் மீது அன்பு கொள்வது தவறா?

கிருஷ்ணன்: சற்று சிந்தித்து பாருங்கள் குரு துரோணரே! அகண்ட அகிலத்தையே எதிர்த்து தம் புதல்வர் மீது அன்பு கொண்டீர்கள், அவனுக்கு உண்மையில் தாம் என்ன அளித்தீர்கள்?

துரோணர்: ராஜ்ஜியம், சுகம், அதிகாரம் தந்தேன்.

கிருஷ்ணன்: நல்லொழுக்கம் தந்தீர்களா? ஞானத்தை வழங்கினீர்களா? தர்மத்தை அவனுக்கு போதித்தீர்களா? அவனை காக்க தமது உதவி அவனுக்கு தேவை இல்லை எனும் நிலையை அவனுக்கு வழகினீர்களா?.... நான் அறிவேன், அர்ஜுனன் மற்றும் கர்ணனுக்கு இணையான மாவீரர்கள் தோன்றவில்லை என்பது உண்மை. ஆனால் தம்மால் தமது புதல்வனுக்கு உசிதமான முடிவெடுக்க கூடிய ஞானத்தை வழங்க இயலவில்லை. அந்த ஞானத்தை தாம் வழங்கியிருந்தால் இன்று அவன் தர்மத்திற்கு விரோதியாகி இருக்க மாட்டான். தாமும் அதர்மத்தின் தரப்பில் நின்று யுத்தம் புரிந்திருக்க மாட்டீர்கள்.

துரோணர்: எனது புதல்வன் அஸ்வத்தமனுக்கு சுகங்கள் அனைத்தையும் அளிக்கவே எண்ணினேன். எனது புதல்வன் அஸ்வத்தாமன் மீது அளவற்ற அன்பினால்...

கிருஷ்ணன்: தவறு. அன்பு உன்னதத்தை தருவது. சரி எது தவறெது எனும் ஞானத்தை வழங்க வல்லது. அன்பினை அறிந்திருந்தால் தாம் அதர்ம வலையில் சிக்கி இருக்க மாட்டீர்கள். தம் புதல்வனும் அதர்ம கடலில் மூழ்கியிருக்க மாட்டான். உண்மையில் இது அன்பல்ல, தம் ஹிருதயம் வெளிப்படுத்திய மோகம். அன்பிற்கும் மோகத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை, தாம் எப்போதாவது அறிந்ததுண்டா?

துரோணர்: அன்பிலிருந்து தோன்றுவது தானே மோகம் வாசுதேவா?

கிருஷ்ணன்: தவறு. உண்மையில் அன்பு குடிகொண்ட இதயத்தில் மோகமானது தோன்றுவதில்லை. அன்பெனும் பாவம் கருணையிலிருந்து பிறப்பது. மோகம் அகங்காரதிலிருந்து பிறக்கிறது. அன்புள்ளமானது எனது புதல்வனுக்கு இறைவன் கிருபையால் அனைத்தும் கிட்டும் என கூறும். ஆனால் மோகமானது என் புதல்வனுக்கு நான் அனைத்தையும் வழங்குவேன் என்றுரைக்கும். அன்பின் பாவமானது பொது நலத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது. ஆனால் மோகமனதோ சுயநலமே முக்கியம் என்றெண்ணுவது. அன்பானது முக்தியை நல்கும் குருதேவா, மோகமானது பேராசையை அளிக்கும். அன்பு தர்மமாகும் குருதேவா அதோடு மோகம்,.... மோகம் அதர்மம்.

உண்ணுவதற்கு வயிறார உணவு கிட்டாததால் சரியான வழியை காட்ட தவறினீர்கள். அன்று தமது புதல்வனுக்கு வறுமையை வெல்ல தர்மத்தின் வழியை போதித்திருந்தால், அவன் பெருமை சேர்த்திருப்பான். மனதில் மோகத்தை விதைபதற்கு பதிலாக, சிறுவயதுமுதலே அவன் ஹிருதயத்திற்கு தர்ம ஞானத்தை போதித்திருந்தால், இன்றைய தினத்தில் தாமுடைய நிலை புனிதத்துவம் பெற்றிருக்காதா? புதல்வன் எதிர்காதை ஒளிமயமாக்கவேண்டும் என்னும் முயற்சியில், தாம் அறியாமலேயே அவனது வருங்காலத்தினை இருல் மயமாக்கினீர்கள். தம் மனதை மோகம் வியபித்ததால் அவன் மனதை அதர்மம் பாதித்தது. லோபத்தையும், பேராசையையும் அச்சத்தையும் அவன் ஹிருதயத்தில் தாம் விதைதீர்கள். துரோணாச்சாரியரே, உண்மையை சொன்னால் கொண்டிருந்த மோகம், இன்றுவரை குரு ஸ்தானத்தை தமக்கு வழங்கவில்லை. ஆசான் எனும் ஸ்தானத்தையே தமக்கு நல்கியது.

துரோணர்: என் மனமானது பதை பதைக்கிறது. நான் கற்ற கல்வி அனைத்தையும், கல்வி கற்க வந்த மாணவர்கள் அனைவருக்கும் அவர்கள் உயர்நிலை பெற வேண்டும் என்று போதித்தவன் நான்.

கிருஷ்ணன்: குரு என்பவன் கற்ற ஞானத்தை தானம் வழங்குபவன். அற்பனாக மாறி அறிவை விற்பவன் அல்ல. அற்ப எண்ணம் தோன்றுவதால்தான் தாட்சண்யம் இன்றி குரு தட்சிணை கேட்க தோன்றுகிறது. கலையை விற்கும் எண்ணம் எழுகிறது . தாமும் கற்பக விருட்சமான அற்புத கலையை விற்பனை செய்தீர்கள். அளித்த ஞானத்திற்கு பழிவாங்க வேண்டும் என்ற குரு தட்சிணையை வேண்டி தாம் தம்முடைய வாழ்வில் நஞ்சை கலந்ததோடு அல்லாது, தஞ்சம் புகுந்த சீடர் நெஞ்சிலும் நஞ்சை விதைதீர்கள். இவை அனைத்திற்குமே தம் மனதில் குடிகொண்ட மோகம் அகங்காரமே காரணம். தாம் குரு அல்ல துரோணாச்சாரியரே! எவன் தன் ஹிருதயத்தை அகங்காரம், ஆணவம் மற்றும் பேராசைக்கு உட்ற்றதாகுகின்றானோ அவன் தன் கரங்கள் தர்ம காரியம் செய்ய தகுதி அற்றதாகின்றன. ஆகையால் மகரிஷி பரத்வாஜரின் புதல்வரே, கரைபுரண்ட வெள்ளத்தில் சிக்கியவனுக்கு எவ்வாறு ஒரு சிறு மரக்கிளை பெரும் ஆறுதலை அளிக்குமோ, அதுபோல் இறுதி கட்டத்திலாவது தர்மத்தின் கிளையை பற்றுங்கள். நல்லதொரு தீர்மானம் எடுக்க, இப்போதும் அவகாசம் இருக்கிறது. மோகத்தை தியாகம் செய்யுங்கள்! பாவத்தின் பிரயசித்தமாக பிராணனை விடுங்கள்! கருணை என்னும் அன்பினை ஏற்றால், தாம் மேற்கொள்ளவிருக்கும் உசிதமான தீர்மானத்தை அகிலமே போற்றும்.

துரோணர்: உண்மையை எடுத்துரைதீர்கள். அஸ்வத்தாமனின் தண்டனைக்கு காரணம் நான் ஆற்றிய பாவங்களே. ஆம்... நேரம் நெருங்கி விட்டது. தண்டனையை மனமார ஏற்க விரும்புகிறேன்.

ஒரு குருவானவன் தான் குருவெனும் நிலையை பெறவில்லை என்று கேள்வியுறும் போது . அவனது மனது எவ்வாறு உடைந்து போகும். ராஜா ராஜா சோழன் கட்டிய பெரிய கோவில் சுக்கு நூறாய் உடைவது போல் நொருங்கிற்று அவர் மனதும் . கை விட்டு விழுந்தது வில்லும் கால் தளர்ந்து விழுந்தான் குரு துரோணர், இல்லை இல்லை துரோணன். தன் தலையில் கட்டிருந்த கையிற்றை அவிழ்த்தெரிந்தார் . இரு கரம் கூப்பி தன் தீர்மானத்தை முறையிட்டார்.

துரோணர்: நான் தமது அறிவுரையை சுவீகரிக்கிறேன். (தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான் கண்ணன். காலன் மீண்டும் தன் பணியை தொடர்கிறான்) எனது இறுதி காலம் நெருங்கிவிட்டது வாசுதேவரே! தமக்கு இறுதி மரியாதையை செலுத்தி எனது பிராணனை தியாகம் செய்கிறேன். என் புதல்விக்கு இணையான திரௌபதியிடதில் மகரிஷி பரத்வாஜரின் புதல்வன் துரோணன், மண்டியிட்டு மன்னிப்பு வேண்டியதாய் கூறுங்கள். விதிப்படி நிறைவேறட்டும்.

அதோ தூரத்தில் ஓடி வருகிறான் ஒருவன். வேறு யார்? தன் சீடன்தான், திருஷ்டத்யும்னன் "குருதேவரே!!" என்றழைத்துகொண்டு. பிறந்தவன் இறக்கத்தான் வேண்டும், தானும் இறக்கத்தான் வேண்டும் என்று தானே அன்று அவனுக்கு அவர் வித்யையை பயில்வித்தார். அன்றைய துரோணன் எங்கே போனான்? இன்று மாதவன் பிறந்தவன் இறக்கத்தான் வேண்டும் என நினைவுறுத்தும் அளவிற்கு என்ன ஆனது தனக்கு? ஆம் இன்று தெளிவாக்கினான் மதுசூதனன், விதியை ஏற்க வேண்டியது தருணத்தில் நிற்கிறார்.

துரோணர்: வா மகனே உனது ஜனனத்தின் பணியை நிறைவேற்றும் வேளை நெருங்கி விட்டது. வா!

யோக முறையில் தரையில் அமர்ந்து தியானித்தார் துரோணர். தர்மராஜனின் பாத சுவடுகள் தன்னை நோக்கி ஓடிவருவது அந்த போர்கள சப்தத்திலும் தனித்தே காதில் விழுந்தது துரோணனுக்கு.

ஓங்கியது சீடனின் வாள், உருண்டு ஓடியது குருவின் தலை.

தொலைவிலிருந்து வந்தது ஒரு குரல்.

"அன்பு தந்தையே...!!!"

எழுதியவர் : மீள் (2-Jan-16, 11:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 201

மேலே