சில்லறை
அண்ணன் ஆறுமுகம், தம்பி குமரன் இருவரும் அருகருகே மளிகைக்கடை வைத்திருந்தனர். இருவர் கடையிலும் ஒரே மாதிரி பொருள்கள்.ஒரே மாதிரி விலை.ஆனால் ஆறுமுகம் கடையில் அமோக வியாபாரம்.குமரன் கடையோ வெறிச்சோடிக் கிடந்தது.
குமரன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு ,கடைசியில் அண்ணனிடமே கேட்டுவிட்டான்.
“ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் கடைவச்சிருக்கோம்.உன் கடையில மட்டும் வியாபாரம் நல்லா நடக்குதே அது எப்படி?”
”தம்பி! பத்து ரூபாய்க்குப் பொருள்வாங்க ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் ,நான் முகம் சுளிக்காம சில்லறை தர்றேன்.ஆனால் நீயோ சில்லறையா இருந்தாக் கொடுங்கன்னு திருப்பிக் கேக்கறே. சில்லறை இல்லாதவங்க நேரா எங்கடைக்கு வர்றாங்க.அதுதான் காரணம்” என்றான் ஆறுமுகம்.
குமரனுக்கு அண்ணனின் வியாபார ரகசியம் புரிந்தது .

