மழையாலானவள்

மழை பெய்து கொண்டிருக்கிறது. மரங்கள் சூழ்ந்த உன் வீட்டு முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்திருக்கிறாய் நீ. உன் வீட்டு மண் சுவற்றில் ஆங்காங்கே காரை பெயர்ந்திருக்கிறது. இந்த அடைமழைக் காலத்தில் உன் வீட்டுக் கூரைகள் கருணையோடு மழையை உன் வீட்டினுள்ளும் பெய்ய அனுமதிக்கும் என்று முன்பொரு நாள் நீ கூறியிருந்தாய்...ஊறிப் போன மண் சுவற்றையும் நீ சாய்ந்திருக்கும் முற்றத்து ஈர மரத்தூணையும் பார்த்தபடி உன் வீட்டு வாசலில் இருக்கும் ஒரு மரத்தின் பின் நின்று நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

ஆள் அரவமற்று இருக்கும் இந்த முற்பகலில் குடை கூட எடுக்கக் மறந்து போய் நான் இங்கு வந்து நிற்பது மழையையும் உன்னையும் பார்க்க மட்டுமே என்பதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை அடித்துப் பெய்து இந்த மழை சொல்லிக் கொண்டிருந்ததை நீ கவனிக்கவே இல்லை..., மழை நனைத்திருந்த அள்ளிச் சொருகிய பாவடையுடன், காற்று கலைத்துக் கொண்டிருந்த உன் கேசத்தை சரிப்படுத்திக் கொள்ளாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாய்... நீ...

யாருமற்ற இந்த தனிமையோடு அடர்த்தியான மழையை, அந்தமழையால் நனையும் சுற்றி இருக்கும் தாவரங்களை, மரங்களை, இந்த இரைச்சலை, இந்தக் குளுமையை, மண்ணை கரைத்தபடி சுழித்து நுரைத்து ஓடும் நீரின் சலசலப்பினை, குளிர் தாங்காமல் சிறகு ஒட்டிப் போய் தத்தித் தத்திச் செல்லும் அந்த காகத்தை, ஏதோ ஒரு மரத்திலமர்ந்து இந்த சூழலை இன்னும் அழகாக்க கூவிக் கொண்டிருக்கும் அந்தக் குயிலை....
என்று எதையும் விட்டுவிடாமல் விழி விரித்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காதலென்பது யாரோ ஒரு பெண்ணை காதலிப்பது மட்டுமல்ல, அவளின் அழகினை, அவளின் அவலட்சணத்தை, அவளின் சூழலை, அவளின் கோபத்தை, அவளிடம் பிடித்ததை, பிடிக்காததை என்று அந்தப் பெண்ணைச் சுற்றியிருக்கும் யாவற்றையும் உள்வாங்கி நேசிப்பது. பேசினாலும், பேசாவிட்டாலும், கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் மனக்கிளர்ச்சியைக் கொடுப்பவளாய் அவள் இருப்பாளாயின் அவளை விட்டு விடாதே...அவளை தொடர்ந்து கொண்டே இரு. தூர நின்றாவது அவளை விழிகளால் விழுங்கிக் கொண்டே இரு. நல்ல கவிதைகள் எல்லாம் வாசித்து கிரகித்து அந்த உணர்வில் ஊறிப்போய் திளைத்து,எப்படி மயங்கிக் கிடக்க வைக்கிறதோ அப்படித்தான் ஒரு பெண்ணோடான காதலும் இருக்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் காதலென்ற பேருணர்வுப் பெருவெளிக்குச் செல்ல வேண்டுமானல் பெரும்பாலும் பெண் என்னும் பெருங்கதவைத் தட்ட வேண்டிதானிருக்கிறது....என்பது ஆண்களுக்கான விதி. பெண்களின் காதல் எப்படியிருக்கும் என்று ஆராய ஒன்று எனக்கு பிடிக்கவில்லை அல்லது நேரமில்லை. ஆணாய் இருந்து உலகத்தைப் பார்க்கும் போது பெண்ணை ஆணுக்குரியவளாய் மட்டும் பார்க்கும் போது ஏற்படும் அபத்தங்களுக்குள் நான் எப்போதும் போக விரும்பவதேயில்லை...
நான் ஆணாயிருந்து பெண்ணை ஒரு பெண்ணாகவே பார்க்கிறேன்...அதில் உன்னைப் போன்று என் உணர்வுகளை உரசி தீப்பிடிக்க வைப்பவளை காதலியாகப் பார்க்கிறேன்...

மழை நீரில் கை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தாய். மழை உன்னை நனைத்தது....நீ என்னை நனைத்தாய்....
காற்று வெகு உக்கிரமாய் அடித்து மேகங்களை கலைக்க முயன்று கொண்டிருந்தது... அங்குமிங்கும் தடுமாறிக் கொண்டிருக்கும் என் மனதை போலவே மேகங்களும் கனத்து கருத்து இங்குமங்கும் அலைமோதிக் கொண்டிருந்தன....

தலையை உதறி மீண்டும் ரிப்பனால் தூக்கிக் கட்டியபடி ...
நீ வாசலுக்கு வந்தாய்...
ஒரு கவிதையில்
இன்னொரு கவிதை
நனையத் தொடங்கி இருக்க...
விழிகள் விரித்து....
அந்தக் காவியக் காட்சியினை
பார்க்கத் தொடங்கி இருந்தேன் நான்....
என்னுள்ளும் அடித்துப் பெய்ய
ஆரம்பித்தது மழை...
உன் வாசத்துடன்....




தேவா சுப்பையா...

எழுதியவர் : (22-Feb-16, 3:49 pm)
பார்வை : 457

மேலே