‎நூறு_ரூபாய்‬

திருமண வயதாகியும் ஒரு இளைஞன் எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பிக் கிடந்தான். வெறுத்துப் போன அவன் தந்தை கோபமாக ஒரு நாள், ''இன்றிலிருந்துதினசரி நூறு ரூபாய் கொண்டு வந்தால் தான் உனக்கு சாப்பாடு,'' என்றார்.

இளைஞன் நொந்து போய் விட்டான். என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. தாயிடம் புலம்பினான். தாயும் இரக்கப்பட்டு, ''நீ வெளியில் போய் வா. நான் உன்னிடம் நூறு ரூபாய் தருகிறேன். நீ அதை அப்பாவிடம் கொடுத்து விடு'' என்று சொல்ல அவனும் சம்மதித்தான்.

அன்று நூறு ரூபாயை அப்பாவிடம் கொடுத்த போது அவர் அதை வாங்கி, ''நீயும் உன் ரூபாயும்,'' என்று கூறி தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்று விட்டார். இளைஞன் அமைதியாக இருந்தான்.

சில நாட்கள் இப்படியே போயிற்று. ஒரு நிலையில் தாயிடம் கொடுக்கப் பணமில்லை. சில நாட்கள் கடன் வாங்கிக் கொடுத்தாள் .

ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் தந்தை , ''நீயும் உன் ரூபாயும், ''என்று கூறி விட்டெறிந்து கொண்டிருந்தார்.இப்போது தாய்க்கு கடன் யாரும் கொடுக்கத் தயாராயில்லை. மேலும் கொடுத்த பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர்.

தாய் வேறு வழியில்லாது, ''மகனே, இனி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. இனி நீ போய் ஏதாவது வேலை செய்து பணம் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. உன் தந்தையும் இவ்விசயத்தில் பிடிவாதமாக இருக்கிறார். நான் என்ன செய்ய முடியும்? என்று கூறி கை விரித்து விட்டார்.

இளைஞன் வேறு வழியின்றி வெளியே சென்று மூட்டை தூக்குவதிலிருந்து எந்த வேலையானாலும் செய்து அன்று நூறு ரூபாய் சம்பாதித்து விட்டான்.
அன்று பெருமையாகத் தந்தையிடம் ரூபாயைக் கொடுத்தான்.

அன்றும் வழக்கம் போலத் தந்தை, ''நீயும் உன் ரூபாயும், ''என்று கூறித் தூக்கி எறிந்தார்.

இளைஞனுக்கு வந்ததே கோபம்! ''அவனவன் மூட்டை தூக்கி கல் சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் இப்படித் தூக்கி எறிகிறீர்களே, என்ன நியாயம்?'' என்று கேட்டு விட்டு சென்று விட்டான்,

தந்தை சிரித்துக் கொண்டே கீழ குனிந்து எறிந்த பணத்தை எடுத்து, அதை முத்தமிட்டு தனது பைக்குள் வைத்துக் கொண்டு, ''இது என் மகன் உழைப்பில் வந்த பணம், இனி அவனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை'' என்று கூறி மகிழ்ச்சியுடன் வெளியே சென்றார்.

‪#‎கதையின்_கரு‬

உழைக்காத வரை உங்கள் மீது யாருக்கும் நம்பிக்கை வராது,
உழைப்பை இப்படியும் கற்று கொடுக்கலாம்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (25-Mar-16, 6:16 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 368

மேலே