பச்சைக்கிளிகள்

பச்சை வண்ணக் கிளிகளே!
பழங்கள் தின்னும் கிளிகளே!
சிறகை விரித்து வானத்தில்
பறந்து செல்லும் கிளிகளே!
சிவப்பு வண்ண அலகினுள்
தவழும் சின்ன நாக்கினால்
பேசும் மழலைக் கேட்கவே
ஆசை மனதில் தோன்றுதே!
தத்தி நடக்கும் நடையினால்
மொத்த மனதைக் கவர்கிறாய்
அத்தி மரத்தில் பழங்களை
கொத்தித் தின்று மகிழ்கிறாய்
பட்டுப் போன்ற சிறகினால்
பறந்துப் பறந்து திரிகிறாய்
மெட்டுக் கட்டி அலகினால்
மெல்லிசை நீயும் தருகிறாய்
பச்சைக் கிளிகள் பாடினால்
பஞ்சாய் மனதும் மிதக்குது
இச்சை மனதில் தோன்றியே
இன்ப உணர்வைத் தூண்டுது
மன்னர் வாழ்ந்த நாட்களில்
மங்கை மனதை அறியவே
தூது சென்ற பறவைநீ
தோதாய் சேதி சொன்னாய்நீ
அறிவில் உயர்ந்த மனிதர்கள்
அறிவில் குறைந்த உன்னிடம்
அவரவர் எதிர் காலத்தை
அறிய உன்னை நாடுவார்
கூண்டில் அடைத்து உன்னையே
கொஞ்சிப் பேசும் மனிதர்மேல்
கோபம் கொண்ட தில்லைநீ
குணத்தில் உயர்ந்த பறவைநீ
உன்னைப் போன்று பறவையாய்
உலகில் பிறக்க நினைக்கிறேன்
உந்தன் வாழ்வை எண்ணிநான்
இந்த உலகை வெறுக்கிறேன்.
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்