வேறு நிலாக்கள் 37 உருவக கவிஞர்கள்

கடல்
*******
நான்
முத்துக்களின் பள்ளம்
கப்பலின் சமவெளி
நதிகளின் கல்லறை.

நான்
அடிக்கடி குரைக்கிறேன்
காரணம்
நான் புயலின் வேட்டை நாய்..!............( நா. காமராசன்)


மின்னல்
************
ககனப் பறவை
நீட்டும் அலகு
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை
கடவுள் ஊன்றும்
செங்கோல்.------------ (பிரமிள்)


நட்சத்திரங்கள்
********************
இரவும் பகலும்
எதிரெதிர் மோதிட
உடைந்த பகலின்
துண்டுகள் -------------------(ஈரோடு தமிழன்பன்)


மௌனம்
*************
ஊமையின் மொழி
மலர்களின் இலக்கியம்
சம்மத சமிக்ஞை
நடுக்கடல் ஒலி
எழுத்துகளின் ஏக்கம் ......... ......(அகன்)


மௌனம்
*************
சப்தத்தின் நிழல்..
தென்றலில் மிதக்காத
தேவ கீதம்
உதட்டுச்சீமையின்
ஊமையழகி

வார்த்தை வரம் கிட்டாத
சாபமொழி - இல்லை
வார்த்தைகளையே
தியானித்துப் பெற்ற
மொழியின் வரம் (1994)--------------------(கவித்தாசபாபதி )


முதுமைப்பருவம்
*************************
நிமிஷக் கறையான்
அரித்த ஏடு
இறந்த காலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு
ஞாபகங்களின்
குப்பைக் கூடை
வியாதிகளின்
மேய்ச்சல் நிலம்..----------------- (அப்துல் ரகுமான் )


மரணம்
***********
மௌனத்தின் கனவு
உறக்கங்களின் அரங்கேற்றம்
இதயத்தின் வாழ்நாள் ஆசை
சொர்க்கத்தின் நிழல்
உயிரின் புன்னகை (1988) .......(கவித்தாசபாபதி)




குறிப்பு :
**********

இது ஒரு சோதனை பதிவு. தொடரின் வாசிப்புக்கு மட்டுமே. நூலில் இடம் பெறாது )

நல்ல உருவகங்கள் நீங்கள் ரசித்தவை, படைத்தவை பகிர்ந்தால பொருத்தமானவை இதில் இணைக்கப்படலாம்.

எழுதியவர் : உருவக கவிஞர்கள் (3-Apr-16, 6:45 pm)
பார்வை : 331

மேலே