வெண்பாவில் விளாங்காய்
குறிப்பு: வெண்பாவின் இடையில் விளாங்காய்ச்சீர் அமைவது குற்றமோ தவறோ அல்ல. தவிர்க்கப் படவேண்டிய ஒன்று.
விளாங்காய்ச்சீர் வெண்பாவிற்குரிய இயல்போசையைக் கெடுத்து விடுகிறது.
என்னுடைய வெண்பா ஒன்றில் விளாங்காய் அமைந்திருப்பதாகவும், அவ்வாறு அமைப்பது தவிர்க்க வேண்டியது என்றும் இன்னொரு புலவர் சொன்னதாக நம் நண்பர் கந்ததாசன் என்ற திரு.சு.அய்யப்பன் கோவில்பட்டியிலிருந்து தெரிவித்தார்.
கண்டவுடன் காதலியைக் கட்டி யணைத்தபடி
அண்டிநின்று செவ்விதழில் ஆர்வமுடன் – வண்ணமாக
முத்தமிட்டேன்; வாலெயிறு தொட்டுவிட்ட என்நாவில்
தித்திப்பு; பால்தேன் கலந்து! - வ.க.கன்னியப்பன்
என்ற பாடலை கீழேயுள்ளவாறு மாற்றினேன்.
கண்டவுடன் காதலியைக் கட்டி யணைத்தபடி
அண்டிநின்று செவ்விதழில் ஆர்வமுடன் – கொண்டவளை
முத்தமிட்டேன்; வாலெயிறு தொட்டுவிட்ட என்நாவில்
தித்திப்பு; பால்தேன் கலந்து! - வ.க.கன்னியப்பன்
வண்/ணமா/க - கூவிளாங்காய்
கொண்/டவ/ளை - கூவிளங்காய்
கண்டவுடன் காதலியைக் கட்டி யணைத்தபடி
அண்டிநின்று செவ்விதழில் கள்ளுண்ணும் – வண்டெனெவே
நானுமவள் வாலெயிறு என்நாவால் தொட்டிடவே
தேனொடு பால்கலந்தற் றே! - வ.க.கன்னியப்பன்
வண்டெனெவே - கூவிளங்காய்
அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வலைத்தளத்தில் ’விளாங்காய்!’ என்று பதிந்து தேடியதுமே அகரம் அமுதன் அவர்களின் கீழேயுள்ள விளக்கம் கிடைத்தது; சந்தேகமும் தீர்ந்தது.
அகரம் அமுதன் அவர்களின் ’வெண்பா எழுதலாம் வாங்க!’ கட்டுரையின் 38 வது அத்தியாயமாக விளாங்காய் என்ற தலைப்பில் உள்ள கருத்துகள் வெண்பா எழுதுவோர்க்கு பயனுள்ளது.
அகரம் அமுதன் அவர்களின் பதிவு
பொதுவாக வெண்பா எழுதும் நம்மில் பலர் தம்மையறியாமலேயே விளாங்காய்ச்சீரை அமைத்து எழுதிவிடுகிறார்கள். புதிதாக வெண்பா எழுதுபவர்களுக்கு இவ்விளாங்காய்ச்சீர் மிக அதிகமாக அமைந்துவிடுகிறது.
அதென்ன விளாங்காய்? அசை பிரித்துச் சொல்கையில் விளங்காய்ச்சீர் என்றல்லவா எழுதுகிறோம். அப்படியே அல்லவா படித்தும் இருக்கிறோம் என்கிறீர்களா? உண்மைதான். அதென்ன விளாங்காய்ச்சீர்? பார்த்துவிடுவோமா?
ஈரசைச்சீர்கள்:
நேர்நேர் - தேமா
நிரைநேர் - புளிமா
நிரைநிரை - கருவிளம்
நேர்நிரை - கூவிளம்
மூவசைச்சீர்கள்:-
நேர்நேர்நேர் - தேமாங்காய்
நிரைநேர்நேர் - புளிமாங்காய்
நிரைநிரைநேர் - கருவிளங்காய்
நேர்நிரைநேர் - கூவிளங்காய்
வெண்பாவைப் பொருத்தவரை இவ்வெட்டுச் சீர்களே இயன்று வரும் என்பது யாவரும் அறிந்ததே.
பூவரசு - இச்சொல்லைப் பிரித்துப் பார்ப்போம்.
பூ/ அர/ சு - நேர் நிரை நேர் - கூவிளங்காய் (பூ - நெடில், அர - குறிலிணை, சு - குறில்) ஆக இணைந்து கூவிளங்காயாயிற்று.
சொன்னதாரோ - இச்சொல்லை அசை பிரிக்கும் போதும் நாம் "சொன்/ னதா/ ரோ" -நேர் நிரை நேர் - கூவிளங்காய் என்றே அசைபிரிக்கிறோம். (சொன் - குறிலொற்று, னதா - குறில்நெடில், ரோ - நெடில்) ஆக கூவிளங்காய் என்றாயிற்று.
ஆயினும் வெண்பாவிற்குள், "சொன்னதாரோ" என்பன போன்ற சொற்கள் (நடுவசை குறில்நெடிலாக அமைவது) பெரும்பகுதி வராமல் தவிர்ப்பதே நன்று.
காய்ச்சீராக அமைந்த ஒருசொல்லின் நடு அசை 'குறில்நெடிலாக' அமைவதை விளாங்காய் என்கிறோம்.
காட்டுகள் சில:-
சன்/னலோ/ரம் - கூவிளாங்காய்
மங்/கலா/ன - கூவிளாங்காய்
வெத்/துவே/ட்டாய் - கூவிளாங்காய்
சரி. விளாங்காயாக அமைந்தசீர் ஏன் வெண்பாவில் வரக்கூடாது?
இப்படியொரு கேள்வியெழுவதும் இயல்பே. காரணம் என்னவென்றால்,
வெண்பாவில் காய்ச்சீர் இயல்பாக, அதாவது நடுஅசை "குறிலிணை"யாக அமைகிறபோது எழும் ஓசையும்
அதே நடுஅசை "குறிநெடி"லாக அமையும்போது எழும் ஓசையும் மாறுபட்டவை.
அசைப்படி பார்த்தால் இரண்டும் கருவிளங்காய் அல்லது கூவிளங்காய்ச்சீர்களே. ஆயினும் ஓசைஅடிப்படையில் விளாங்காயாக அமையும் சீர் வெண்பாவின் ஒசையை மணித்துளி நேரம் (நிமிடநேரம்) நீட்டித்து வெண்பாவிற்கு உரிய இயல்போசையைக் கெடுத்துவிடுவதாக நம் முன்னோர்கள் கருதுகிறார்கள்.
கீழ்வரும் தஞ்சை இனியனின் வெண்பாவை வாய்விட்டு ஓசையோடு படித்துப் பாருங்கள்.
பங்களா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் - அங்கங்கே
சிங்கிய டிக்கின்ற செந்தமிழா! பஸ்பிடித்து
சிங்கார சென்னைவந்து சேர்! - தஞ்சை இனியன்
இரண்டாமடியின் முதற்சீரும், இரண்டாம் சீரும் ஓசை அடிப்படையில் நீள்வதைத் தங்களால் உணர முடிகிறதா?
மங்/கலா/ன ஆ/டைபோ/தும் - இவ்விரு சொற்களும் காய்ச்சீருக்குரிய ஓசையைச் சற்றே கூட்டிக் காட்டுகிறதல்லவா?
ஆகவே இவ்விரு சொற்களும் அவ்வெண்பாவிற்குரிய இயல்போசையைக் கெடுத்து விடுகின்றன.
ஆகவே நடுஅசை குறில் நெடிலாக அமைப்பதைத் தவிர்க்கவும்.
’சிலவேளைகளில் விளாங்காய்ச் சீராக அமைவதைத் தவிர்க்க முடியாததாகி விடுமானால் முடிந்த வரை வகையுளி செய்தாவது (விளாங்காயாக வருஞ்சொல்லின் மூன்றாவது அசையைப் பிரித்து அடுத்த சொல்லொடு இணைத்து விடுவது) வெண்பா ஆக்குவதே சிறந்த வழியாம்.
கீழுள்ள எனது வெண்பாவைப் பாருங்கள்:-
வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து
தாலிக் கொடியையா 'தா'ங்கற? - மாலையானால்
வீட்டுப் பொருளையெல்லாம் விற்றுக் குடித்துவிட்டு
சீட்டாடப் போறியா? சீ! -அகரம் அமுதா
முதலடியின் மூன்றாம் சீர் "வெத்துவேட்டாய்" கூவிளாங்காய்ச் சீராக வந்துள்ளது.
எனது மற்றொரு வேண்பாவில்...
கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதாகர் பார்!
நான்காம் அடியின் இரண்டாம் சீரைக் கவனியுங்கள். "பேர்/சுதா/கர்" என வந்து ஓசை நீள்கிறது. ஆகையால் இவ்விளாங்காயைத் தவிர்ப்பதற்காக ஈற்றடியை இப்படி மாற்றினேன்,
"பருவமியற் பேர்சுதா கர்!"
* குறிப்பு: வெண்பாவின் இடையில் விளாங்காய்ச்சீர் அமைவது குற்றமோ தவறோ அல்ல. தவிர்க்கப் படவேண்டிய ஒன்று.
நன்றி: அகரம் அமுதன்
கி.வா.ஜ வின் கவி பாடலாம் புத்தகத்தின் கேள்வி பதில் பகுதியில் பக்கம் 228 கேள்வி 15:
வேல்பற்றும் கைக்குகேசன் மேதகைய தாமரைப்பூங்
கால்பற்றிக் காண்போம் கதி.
கேள்வி: இந்த வெண்பாவில் பிழை ஏதேனும் உண்டா.
பதில்: ’முதலடியில் இரண்டாம் சீரில் இடையில் விளாஞ்சீர் வந்தமையால் ஓசை நீள்கிறது. குகே என்று குறில் நெடிலாகிய நிரை வந்தது. அப்படி வருவது தவறு’ என்கிறார் கி.வா.ஜ.
இந்தக் கேள்வி 2013 ல் எழுந்தபோது நானும் நளவெண்பா வெண்பாக்கள் முழுவதும், பாவேந்தர் பாரதிதாசனின் மணிமேகலை வெண்பா, இருபா விருபது, உண்மை விளக்கம், திருக்களிற்றுப்படியார், வினா வெண்பா ஆகிய பாக்களில் பலநாட்கள் தேடினேன்.
ஆகவே, எந்தவகையான பாக்களிலும், விளாங்காய்ச் சீர் வருவது சிறப்பன்று.