ஒரு ரசிகனின் கடமை

ரசனைகள் பயணிக்கின்றன
பாதைகள் மாறி..!

டெலிவிஷன் சீரியல்களில்
ரசனைகள் வக்கிரமடைய
படைப்பாளிகளின் பொறுப்பற்ற தன்மை.!

டி.ஆர்.பி. ரேட்டிங் வந்தால் போதும்
காசு கைக்கு வந்து விடும் என்ற கண்மூடித்தனம்.!

ஒரே படைப்பில் காணாமல் போகும்
இவர்கள் வெறும் வீட்டில் பூச்சிகள்!

விளம்பர இடைவேளைதோறும்
விஷயம் இதுவோ அதுவோ என
வெற்றுத்தூண்டல்
விஷமத்தனம் மட்டுமே முழுவதும்
மற்ற படி நீதி பற்றி எந்த வியாக்யானமோ
நேர்மை பற்றி எந்த படிப்புரையோ
எங்காவது தென்பட்டால் ஆச்சர்யம்..!

நல்லவர்களை நோக்கி எந்த
இலக்கியமும் இங்கே பயணிக்கவில்லை!
கெட்டவர்களுக்கு கை காட்டுகிறது,
கெட்டுப்போக வழி சொல்கிறது!

ரசிகர்கள் புறக்கணிக்க இங்கே
வலிய யாரும் அரங்கம் செல்வதில்லை!
அரங்கினுக்குள் வந்து அத்துமீறி
முகம் சுழிக்க வைக்கையில்
அதை கண்டிக்க இங்கே
ரசிகனுக்கு நேரமில்லை.!

பிச்சைக்காரனை
பைத்தியக்காரனை
யாசிப்பதால் இங்கே
அவர்கள் யோசிப்பதில்லை!

சென்சார் என்பது ஓய்வெடுக்கிறது,
அநேகமாக அனைத்து அரசு துறைகளிலும் இதே நிலை தான்,
வயதானவர்கள் வருகைப்பதிவேட்டுக்காக மட்டுமே அலுவலில்.
அரசின் கடமைகள் எந்த துறையிலும் இங்கே செவ்வன இல்லை
செய்ய வேண்டியதெல்லாம் காசு வாங்கி கொண்டு செய்யாமலே.

உண்ண உணவில்லாமல் சிலர்
உடுக்க உடையில்லாமல் வெகு சிலர்
உழைக்க மனமில்லாமல் பலர்
ஒடுங்கி உயிர்த்தெழாமல் மிக சிலர்
எது முக்கியம் எது அவசியம் என்று தெரியாமல் எல்லோருமே.

கலைகள் தழைத்த நாட்டில்
ரசிகர்கள் நசிந்தனர்
குற்றங்கள் மிகுந்த நாட்டில்
தர்க்கங்கள் புரிந்தனர்

பொழுதுகள் இங்கே வீணாகின்றன
பொறுப்புகள் எங்கும் பாழாகின்றன
பணங்காசு மட்டுமே வாழ்க்கையாகி
பரதேசம் போகின்றன இங்கே பார்வைகள்
படைப்பாளிகளே உங்கள் பாவத்தால் இன்று
படைப்புக்கள் சீழ் பிடித்து புரையோடுகின்றன..!

எழுதியவர் : செல்வமணி (17-Aug-16, 11:20 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 107

மேலே