ஐந்தறிவும் மிஞ்சிடும் ஆறறிவை
பாசமெனும் உணர்வும் பொங்கிடும்
காட்டிடும் அன்பால் கரைந்துபோகும்
ஐந்தறிவும் மிஞ்சிடும் ஆறறிவை !
வீதியெனும் வீட்டிலே இடமின்றி
அமர்ந்துள்ள முதியவர் அலசுகிறார்
கடந்திட்ட வாழ்க்கையின் நிகழ்வுகளை
கையிலே அணைத்துள்ள நாய்களுடன் !
கட்டியவளும் உடனில்லை ஆதரவாய்
பெற்றெடுத்த மக்களும் கைவிட்டநிலை
பாசத்தையும் பகிர்ந்திட எவருமில்லை
நன்றியுள்ள நாய்கள்தான் அணைப்பிலே !
வளர்த்து ஆளாக்கி உருவாக்கினோன்
வசதியுடன் வாழ்ந்திட வழிசெய்தேன்
காலத்தே கடமைகளை ஆற்றினேன்
இருப்பதோ வீதியிலே அனாதையாய் !
நாயன்றோ காக்குது என்னையும்
ஈன்றிட்டக் குட்டிகளோ சுற்றிவருது !
அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துது
அடியேனின் துயரையும் அகற்றுகிறது !
பழனி குமார்
-------------------------------------------------

