காதலை தேடி-26

காதலை(லே) தேடி -26

உன் விரல்கள் கோர்கையிலே
என் உலகம் தொலைத்தேனே
உன் இமைகள் காத்துநிற்கும்
கருவிழிகள் இரண்டு மட்டும் என்
உலகமென நினைத்தேனே......

அவ்வப்போது நான் பொய் சொல்வேன்
அது பொய் இல்லை என் கண்ணே
உன் கண்கள் கலங்காது இருக்க
நான் சொல்லும் பொய்கள் கூட
நம் காதல் வடிக்கும் அழகு சிற்பமே.....
அதை புரிந்து கொள் என் சகியே......

"சார், என்ன ஆச்சு, பெரிய சார் என்ன சொன்னாரு, நாம அவர் ரூம்க்கு போய் பாக்கலாமா சார்?"

"இல்லப்பா, அவருக்கு இன்னைக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல, அதனால நாளைல இருந்து வெளிய போற வேலைய பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு, நீ நாளைல இருந்தே வரலாம், காலைல இதே நேரத்துக்கு நீ இங்க வந்திடு, நானும் வந்துடறேன் மீதியை நாளைக்கு பேசிக்கலாம், இப்போ நீ போகலாம்"

"சார், நான் பெரிய சார பாத்து பேசிட்டு போய்டறேனே"

"அதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம், இப்போ அவரை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு சொல்லிருக்காரு, நீ கிளம்புப்பா, நாளைக்கு பாத்துக்கலாம்"

"சரிங்க சார், நான் கிளம்பறேன்"

"வர சொல்லிட்டு இப்படி திருப்பி அனுப்பறாங்க, இதெல்லாம் பெரிய இடத்து பழக்கமாச்சே, சரி எப்படியோ இன்னைக்கு வேலை இல்லனு ஆயிடுச்சு, வீட்டுக்கு போய் அம்மாக்கு உதவியாவது செய்யலாம்..... "

அந்த ட்ரைவர் என்ன பத்தி என்ன நினைச்சிருப்பானோ, வர சொல்லிட்டு மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை பேசல, அப்படியே திருப்பி அனுப்பிட்டான், எல்லாம் பணக்கார திமிர்ன்னு கூட நினைச்சிருப்பான்....என்ன செய்ய, இந்த மனநிலையில நான் என்ன செய்தாலும் எவ்ளோ தூரம் போனாலும் என்னால சகியின் நினைவுகளை விட்டுட்டு அவளை தேட கூட முடியாதே, எப்பவும் அவள் நினைவுகளோடு தான் இருக்கேன், ஆனா இன்னைக்கு இவ்ளோ வித்தியாசமா அவளோட நினைவுகள் நிகழ் உலகத்துல கூட என்ன இருக்க விடாம மூழ்கடிக்குதே......

சகி நீ எங்க இருக்கியோ.....எங்க இருந்தாலும் ஒரே ஒரு முறை என் கண் பார்வைல பட்ரும்மா, உன்ன ஆசை தீர ஒரே ஒரு முறை கண்ணால பாத்து மனசுக்குள்ள நிரப்பி வச்சிக்கினும்......அதுக்கப்புறம் உன்னோட புது வாழ்க்கைல எந்த இடைஞ்சலும் செய்யாம நானே விலகி போய்டுவேன்மா, அன்னைக்கு செஞ்சேனே, அதே போல.......நீ அவ்ளோ தூரம் சொன்னியே இப்படிலாம் யோசிக்காதிங்க, என்ன விட்டு போகணும்னு நினைப்பு கூட உங்களுக்கு வர கூடாதுனு, உன்னோட வார்த்தை எதையும் கேட்காம நான் உன்ன விட்டு வந்தது உனக்கு வலிய தந்துருக்கலாம், ஆனா அது தான் இன்னைக்கு உன்ன புது வாழ்க்கைய வாழ வழிய காட்டிருக்கு ... அது போதும் சகி எனக்கு.....

என் சகி எனக்காக இதே மாதிரி உருகிய தருணங்கள் தான், அவள் மனச நான் காயப்படுத்திய தருணங்கள் தான், இப்போ என் வாழ்க்கைல வலிய தந்துட்டு இருக்கு.....அவளோட அன்பை நான் நிராகரிச்ச அந்த பொய்யான நிமிஷங்கள் தான் இன்னைக்கு விதியா வந்து அவளோட நினைவுகளோடே பொய்யான வாழ்க்கையை வாழ வச்சி விளையாடுது....ஆனா அன்னைக்கு அது நான் வேணும்னு செய்யலையே என் சூழ்நிலை தானே அன்னைக்கு நடந்ததுக்கெல்லாம் காரணம்.....

"சகி இப்போ எதுக்கு கால் பண்ண, நான் தான் உனக்கு வேண்டாத புருஷன் தான, அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப கால் பண்ணி என்ன இப்படி டிஸ்டர்ப் பன்ற"

"என்னங்க ப்ளீஸ், இப்படிலாம் பேசி என்ன கஷ்டப்படுத்தாதீங்க, ஒரு வாரம் வேலைனு சொல்லிட்டு இப்போ முழுசா ஒரு மாசம் முடிய போகுது, இன்னும் நீங்க வீட்டுக்கு வந்து சேரல, அப்டி இருக்கும் போது நான் எப்படிங்க இங்க நிம்மதியா இருக்க முடியும், நீங்க போகும்போது என் மனசுல கொஞ்சமா ஒட்டிட்டு இருந்த கோவம் கூட எப்பவோ காணாமலே போச்சு, நீங்க வந்ததும் உங்க முகத்தை பாத்து உங்களோட ஸ்பரிசத்தை சுவாசிச்சி சொல்லணும்னு இருந்த என்னோட மனச இப்போவே சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க, நீங்க இல்லாம இந்த ஒரு மாசம் நான் எப்படில்லாம் கஷ்டப்படறேனு நீங்க யூஸ் பண்ண உங்க தலையணைக்கு தான் தெரியும், இந்த ரூம்ல தனிமையோட நீங்க இல்லா ஒவ்வொரு இரவையும் அழுகையை மட்டுமே தான் துணையா வச்சிக்கிட்டு தூங்கிட்டு இருக்கேன், இதுக்கு பேர் தான் காதல்னா நான் உங்களை காதலிக்கிறேன், காதல் அந்த ஒருவார்த்தையோட என்னோட இந்த உணர்வுகள் முடிஞ்சி போய்டாது, நான் உங்களை காதலுக்கும் மேலா உயிரா என்னோட எல்லாமுமா விரும்ப ஆரம்பிச்சிட்டேன், உங்களுக்கு என் மேல என்ன கோவம்னு தெரியல, அத்தைகிட்டயும் மாமாகிட்டயும் சகஜமா பேசற நீங்க என்கிட்ட மட்டும் ஏன் இப்படி எறிஞ்சி விழறீங்கனும் புரியல....எதுவா இருந்தாலும் ப்ளீஸ் சீக்கிரம் ஊருக்கு வாங்க, உங்க கோவத்தை எல்லாம் நேர்ல வந்து காட்டுங்க, என் மேல நிஜமா கோவம் இருந்தா என்ன நாலு அடி கூட அடிச்சிடுங்க, ஆனா எனக்கு உங்களை பார்க்கணும், இந்த பிரிவு என்னால தாங்கிக்கவே முடியல...."

அவளது விசும்பலும் கண்ணீரும் அவளின் பேச்சினூடே உயர்ந்துகொண்டே போக அதற்க்கு மேலும் அவளது அழுகையை கேட்க முடியாமல் போனை கட் செய்ய வேண்டியதாய் ஆகிவிட்டது....

அவளை இந்த அளவுக்கு அழ வைக்கணும்னு நான் எப்போதுமே நினைச்சதில்லை, அவளோட காதலை வெளிக்கொண்டு வரணும்னு தான் பல திட்டங்கள் போட்டேன், எல்லாமே சொதப்பல் ஆனது, என் திறமையை புரிஞ்சிகிட்டு கடவுள் அவரா ஒரு திட்டம் போட்டு அதை இந்த ஒரு மாத காலமா செயல்படுத்திட்டு இருக்காரு, அவர் போட்ட திட்டப்படி சகி கூட அவள் காதலை உணர்ந்து அதை என்கிட்டயும் சொல்லிட்டா......ஆனா, அவளோட கண்ணீரை துடைக்கவோ இல்லை அவள் காதலை பருகவோ உடனே என்னால போக முடியாதே, நான் இப்போ கிளம்பணுமா, வேண்டாமான்னு முடிவு பண்ற உரிமை வேற ஒருத்தர் கைல தானே இருக்கு......

"மிஸ்டர் சாரதி, எப்படி இருக்கீங்க, நல்லா தூங்கினீங்களா, நீங்க முன்னைவிட இப்போ ரொம்பவே தேறி வரீங்க, சோ இப்போ உங்களுக்கு எல்லாத்தையும் விட தூக்கம் தான் மிக பெரிய மருந்து, அதனால நாங்க தர்ற மறந்து மாத்திரையை விட நீங்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கிட்டா தான் சீக்கிரம் குணம் ஆக முடியும்"

"டாக்டர் நான் இப்போவே நல்லா தான் இருக்கேன், முன்ன விட நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியுதுனு நீங்களே சொல்றிங்களே, நான் இங்க அட்மிட் ஆகி ஒன் மன்த் ஆக போகுது, இந்த ஒரு மாசமும் எங்க வீட்ல என்ன பாக்காம ரொம்பவே கஷ்டப்படறாங்க, வேலை இருக்குனு எத்தனை நாளைக்கு தான் சமாளிக்க முடியும், நான் எவ்ளோ சீக்கிரம் போகமுடியுமோ அவ்ளோ சீக்கிரம் போய் ஆகணும் டாக்டர்"

"ஹலோ சாரதி, ஹை டாக்டர் ரவி........ரெண்டு பெரும் எதோ தீவிர டிஸ்கஷன்ல இருக்கீங்க போல, நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா"

"அதெல்லாம் இல்லை தீபக், உங்க பிரெண்ட்க்கு இங்க இருந்து சீக்கிரம் போய் ஆகணுமாம், அத தான் சொல்லிட்டு இருக்காரு, அதுவும் இல்லாம எத்தனை நாள் வேலை இருக்கறதா பொய் சொல்லி சமாளிக்க முடியும்னு கேட்கறாரு"

"ஓஹ், அப்டியா சொல்றாரு, விடுங்க டாக்டர் அவர்கிட்ட நான் பேசிக்கிறேன்....ஏன் சாரதி எத்தனை தடவ உன்ன கெஞ்சி கேட்டேன் வீட்ல இந்த ஆக்சிடென்ட் பத்தி சொல்லிடலாம்னு, நான் மட்டுமா, நீ இப்படி தனியா கஷ்டப்படறத பார்த்து ரெகுலரா உன்ன பாத்துக்குற டாக்டர், நர்ஸனு எல்லாருமே இத தான சொன்னோம், ஆனா நீ தான் பிடிவாதமா மறுத்துட்ட"

"ஆமா தீபக், இப்பவும் நான் அதையே தான் சொல்வேன், என் வீட்ல சொன்னா என்ன நடக்கும்னு நினைக்கிற, அம்மாவும் அப்பாவும் பதறி போவாங்க, அம்மாக்கு ஆல்ரெடி மைல்டு அட்டாக் வந்துருக்கு, இத கேட்டவுடனே அவங்களுக்கு அகைன் அட்டாக் வர சான்ஸ் இருக்கு, அப்புறம் அப்பா என்ன தான் தெளிவானவரா இருந்தாலும் எனக்குன்னு ஒன்னுனா பதறி தான் போவாரு, ஒரு பக்கம் அம்மா, இன்னொரு பக்கம் நான் அவரோட நிலைமை ரொம்ப மோசமாகிடும்.....சகிய பத்தி சொல்லவே வேணாம், அவ இன்னமும் சின்ன பொண்ணு தான், அவளால இதெல்லாம் சமாளிக்க முடியாது, நான் உண்மைய சொன்னா என் ஒட்டு மொத்த குடும்பமும் மனசளவுல பலகீனமாகி உடைஞ்சி போயிருக்கும்....அது மட்டுமில்லாம எங்க சொந்தம்னு சொல்லிட்டு இருக்கவங்க சகியோட ராசி மேல வீணா பழி சொல்லுவாங்க.....இதெல்லாம் நடக்க கூடாதுனு தான் நான் உண்மைய மறைச்சேன்"

"எல்லாம் சரி தான், ஆனா சகிகிட்ட மட்டும் எதுக்கு இப்படி கோவமா எறிஞ்சி விழுந்து பேசணும், அப்புறம் அதுக்காக வருத்தப்பட்டு உன்னையே நீ வருத்திக்கணும்...."

"சகிக்கு அவளோட காதல் புரியனும், அது ஒரு காரணம் தான், ஆனா சகி கிட்ட நான் நல்லபடியா பேசினா அவளோட கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியாகணும், அப்டி சொல்லும்போது என்னையும் மீறி நான் எல்லா உண்மையையும் உளறிட நிறைய வாய்ப்பு இருக்கு"

"இப்படி கோவமா பேசினா மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா, இப்போ ரெண்டு பெரும் தானே மனசு கஷ்டப்படறீங்க"

"நான் கோவமா பேசறதால அவளுக்கு என்கிட்டே கேள்வி கேட்கற வாய்ப்பு கிடைக்காது, அதே சமயம் அவளுக்கு என்னோட உடல்நிலை பத்தின சிந்தனையே வராது, அது மட்டும் இல்லாம எல்லாமே இன்னும் ஒரு வாரத்துக்கு தானே, அதுக்குள்ளே நான் முழுசா குணமாகிட்டா போதும், அவளை நேர்ல போய் பாத்து அவளை அழவச்சதுக்கெல்லாம் ஒட்டு மொத்தமா கணக்கு போட்டு சந்தோசம் மட்டும் தான் அவளோட வாழ்க்கையா இருக்கற மாதிரி பாத்துப்பேன்,அவளை விட்டு இனி இப்படி ஒரு விலகல் இல்லாம எப்பவும் அவளோட கை கோர்த்துக்கிட்டு வாழ்நாள் எல்லாம் அவளுக்கு துணையா இருப்பேன்"

இது எவ்ளோ பெரிய பொய் என்று அப்போது எனக்கு புரியவே இல்லை, உருக உருக பேசும் இதே சாரதி தான் என்னவளை தவிக்க விட்டு விலகி போவேன் என்று என் மூளைக்கு விளங்கவே இல்லை.....

நிகழ் காலமும், எதிர் காலமும் என்னை வருத்தி எடுக்க, என் கடந்த காலம் எல்லாவற்றிற்கும் காரணமாக நின்றது.....

எழுதியவர் : இந்திராணி (22-Oct-16, 12:46 pm)
பார்வை : 485

மேலே