காதலிக்கு ஒரு கடிதம்

[இரண்டு காதலர்கள் காதலித்து கொள்கிறார்கள்.ஆனால்,விதியின் சதியால் ஒரு கட்டத்தில் பிரிந்துவிடுகிறார்கள்.அவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது ஒரே நேரத்தில் ஆனால் வெவ்வேறு திசைகளில்!ஒரு பௌர்ணமி இரவில் அவளது நினைவுகளால் அவன் சூழப்படுகிறான்,அவள் விட்டு சென்ற காயங்களை மட்டும் மனதில் வைத்து தன் பழைய காதலிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான்.அவன் எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பே எனது இந்த படைப்பு .]




என்னவளே!

எப்படி இருக்கிறாய் என்ற சம்பிரதாய வார்த்தைகளோடு நான் என் கடிதத்தை ஆரம்பிக்க விரும்பவில்லை,காரணம் இந்த கடிதம் உன்னை வந்தடைவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.3500 உறவுகளுக்கு பிறகு என் பேனா உனக்காக தலை குனிகிறது!

எனக்கு மணம் முடிந்திருந்தாலும் என் மனதில் உன் அத்தியாயம் இன்னும் முடியவில்லையடி!உன்னை நினைக்கலாமா என்று என் மூளை பரிசீலனை செய்து கொண்டிருந்த வேளையிலே என் இதயம் தீர்மானமே போட்டுவிட்டது!என்னவளே!உன் பெயரை கூட நான் எழுத விரும்பவில்லை,காரணம் என் மைத்துளிகளை என் கண்ணீர்த்துளிகள் அழித்து விடக் கூடாது என்பதற்காக!10 ஆண்டு பாலைவன வருடங்களுக்கு முன்பு உன்னை நான் முதல் முதலாய் சந்தித்த போது நினைத்து பார்க்கவில்லை,என் 20 களின் முற்பகுதியில் மட்டுமே உனக்கு இடம் உண்டு என்று!எங்கிருக்கிறாய் அன்பே?உன் புதிய வாழ்க்கையில் நீ வசதியாகவே இருப்பாய் என்று எண்ணுகிறேன்...!அன்பே!உனக்கு நினைவிருக்கிறதா நம்முடைய முதல் சந்திப்பு அந்த கல்லூரி வாசலில்,அதே கல்லூரி தான்,இன்னும் தன் கம்பிரத்தை இழக்காமல் இருக்கிறது.பாடங்கள் கற்றுக்கொள்ளும் கல்லூரிக்கு என் வாழ்க்கை பாடமாய் வந்தவள் நீதானே!நான்கு கண்கள் சந்தித்து கொண்ட அந்த வேளையில்,இரு இதயங்கள் மௌன மொழியால் பேசிக்கொண்ட நேரத்தில்,இரு உயிர்கள் ஒன்றாகி போன அந்த காதல் உலகத்தில்,என் மனதினை கட்டிபோட்டவள் நீதானே!பிறகு கல்லூரி நாட்களோடு நம் காதல் நாட்களும் வேகமாகவே நகர்த்தனவே!தோல்வியின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி வெற்றியின் விலாசம் கொடுத்தவளே !வாழ்க்கையின் அர்த்தத்தை புரியவைத்தவள் நீ!வார்த்தைகளால் என்னை வசியம் செய்தவள் நீ!



உயிரே!அந்த வசந்த கால மாலை பொழுதுகளின் நினைவுகள் இன்னும் உன் இதயத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றதா?அந்த மாலை பொழுதின் மயக்கத்தில் அழகிய சாலையோரம் நம் நான்கு கால்கள்
உரையாடி கொண்டிருந்த போது உன் புன்னகை மழையினால் நான் ஆசைதீர நனைந்த நாட்களையெல்லாம் இப்பொது எடைபோட்டு பார்க்கிறேன்.பூக்களை நேசிப்பவளே!பூமகளே !உனக்கும் எனக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை நீ பூக்களின் அழகை ரசித்தாய் ,நானும் உன்னுடைய அழகை ரசித்தேன்!என்னவளே!புன்னகை மலை பொழிந்தவளே !நீ எங்கிருக்கிறாய்?


என் வாழ்க்கை துணை என்னையும் என் மனதையும் நன்றாக பார்த்துக்கொள்கிறாள்.அவளுக்கு நானே உலகம்.அவள் உலகத்தில் வேறுயாரையும் அனுமதிப்பதில்லை.என் மைத்துளிகளும்,கண்ணீர்துளிகளும் உனக்காக சிந்தி கொண்டிருக்கும் இந்த நள்ளிரவிலும் அமைதியாய் அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள்.வாழ்க்கை மாறிவிட்டது,அனால் உன் நினைவுகள் இன்னும் மறைந்திடவில்லை.சிலசமயம் என் பொய்சிரிப்பை கண்டு பிடித்த என் நண்பர்கள் காரணம் கேட்பார்கள்,எப்படி சொல்வேன் அவர்களிடம் என் உண்மை கண்ணீரை?என் வாழ்க்கையின் முற்றுப்புள்ளி வரை அந்த மர்ம முடிச்சை யாருக்காகவ்வும் அவிழ்ப்பதாய் இல்லை.


இதயமே சில்லு சில்லை உடைந்து போன அந்த தருணத்தை இப்பொது நினைத்தாலும் என் இதயம் துடிதுடிக்கிறதடி!நம் காதலின் கருப்பு நாள் அது,கடைசி நாளும் அதுவே!கண்ணீரோடு பிரிவோம் என்று கண்ணியமாக சொன்னாயே.உன் இதயத்திற்கு யார் அந்த உறுதியை தந்தது?வார்த்தைகள் வசப்படாமல் கண்களால் பிரிவு உபசார விழா நடத்தினாய் !காதலின் முதலும் முடிவும் கண்ணீராகத்தான் இருக்கும் என்று அன்று தான் புரிந்து கொண்டேன்!கண்ணீரை போலவே காதலும் உப்பகத்தான் இருக்குமென்று இப்போது தான் உணர்ந்துகொண்டேன்!தோற்றது நீயுமல்ல,நம் காதலும் அல்ல ஜெயித்தது விதி!



போகட்டும்.உன் வாழ்க்கை பாதையில் இனியாவது வசந்தங்கள் குடிகொள்ளட்டும்!எனக்கு பிறகு உன்னிடம் அதிகம் அன்பு கட்டிய அம்மா எப்படி இருக்கிறார்?வேலையையே வாழ்க்கையாக கொண்டு வேள்விநடத்திய அப்பா எப்படி இருக்கிறார்?பூக்களை காட்டிலும் நீ அதிகமாய் நேசித்த உன் அன்னான் மகள் அந்த குட்டி தேவதை வளர்ந்து விட்டாளா ?விட்டு விட்டு பெய்கின்ற மழை துளிகளை போல் விக்கி விக்கி அழுகின்றேனடி உன்னை நினைத்து.முடியவில்லையடி!ஆதனால் வார்த்தைகளை முடிவுக்கு கொண்டுவருகிறேன்.என் வாழ்க்கையின் கலங்கரை விளக்கமாக ஆனவளே!வெறுங்கலாய் இருந்த என்னை வைரக்கல்லாய் மாற்றியவளே!என்னை சூரியனாக மாற்றியே நிலவே என் வாழ்க்கை விடிந்து விட்டது,ஆனால் நீ ஏன் அஸ்தமனமாகிவிட்டாய் ?

எழுதியவர் : சரவண பிரகாஷ் (13-Feb-17, 3:54 pm)
சேர்த்தது : சரவண பிரகாஷ்
பார்வை : 839

சிறந்த கட்டுரைகள்

மேலே