முதல் காதல் பூக்கள் ஒட்டிக்கொண்டன

தாய்ப்பால் குடித்ததின்
சுவை நினைவிலில்லை
குடித்ததின் பிணைப்பு
தொடர் இணைப்பு
அதனால் தானோ
அண்டத்தின் மேலாக
அத்தனை பேருக்கும்
அன்னை மேல் மட்டும்
தனி அன்பு தானே...

தாய்ப்பால் குடித்ததின்
சுவை மறந்த எனக்கு
தாய்ப்பால் கொடுத்தலின்
சுவை சொல்ல
கண்ணன் அவன்
கருவிலே வந்தான்

கண்ணனின் பூ முகம்
காண காத்திருந்த
என் கைகளில்
ஒரு இரவில்
சிறு பூவாகவே
வந்து சேர்ந்தான்....

வெண்ணிற ஆடை
தேவதை ஒருத்தி
என் கைகளில்
குழந்தையை கொண்டு
வந்து தந்தாள்
மெல்ல கொஞ்சம்
ஏந்த சொன்னாள்

பாலூட்ட சொன்னாள்
புரிந்தும் புரியாமல்
கொக்காய் விழித்த
என்பார்வை புரிந்து
அருகில் வந்தாள்
அறையில் இருந்தவர்களை
வெளியே போக சொன்னாள்...

அப்பாவும் அண்ணனும்
ஆணாக இருந்ததால்
அந்நியமாக அங்கு ஆக
வெளியேபோக சொல்லி
அம்மா மட்டும் இருக்க
கை அசைத்தாள் ...

இமை விரிக்காத
இளம் பிஞ்சின்
இதழ் பிரித்து
வாய் விரித்து
அந்த காம்புகளோடு
இணைத்து விட்டாள்
பூக்கள் ஒட்டிக்கொண்டன
அதற்கான காம்புகளில்!!!

அறுத்து விடப்பட்ட
தொப்பிள்கொடி
பிரிவின் போது
அழுது மடிந்த
என் உயிரணுக்கள்
இப்போது உயிர்பெற்று
எப்போதும் கண்டிராத
பூரிப்பை உணர்ந்து
கொண்டாடி சிலிர்த்தன....

வெண்ணிற ஆடை
தேவதை அவள்
குழந்தை தலையை
ஏந்தி பிடிக்க சொன்னாள்...

குடிக்கிறதா இல்லையா
என யோசித்த என்னிடம்
விழிக்கும் உன்னை போல
குழந்தைக்கும் இது
புதிது என்றாள்...

முதலில் ஒன்றுமிருக்காது
போல தோன்றும்
குழந்தை குடிக்க குடிக்க
கடவுளின் படைப்பில்
அது நிற்காது சுரக்கும்
என்று சொல்லியபடி
தன விரல் கொண்டு
பிஞ்சின் காதுகளை
மெல்ல இழுத்து
கலையாத அதன்
தூக்கம் கலைத்தாள்....

குழந்தை வாயசைக்க
மெல்ல தொடங்கியது
என்னில் அமிர்தம்
சுரக்க துவங்கியது

என் பெண்மை
எவரும் அறியாமல்
தனக்குள் வெட்கி
எனக்குள்ளாக சிரித்தது....

சில மணி நேரம் முன்
பல மணி நேரமாய்
துடி துடிக்கச் செய்த
பிரசவ அறையின்
தாங்கா வலியை
மறக்க சொன்னது
சிறு இதழ்கள் ....

இன்னும் என்னில்
இருக்கும் வலி
என்னை இருக்கவும்விடாமல்
தடுக்கும் வலி
மெல்ல மெல்ல குறைய
தொடங்குகிறது அந்த
இதழ் முத்தத்தில் ....

நீ வந்த வழிகொண்ட
கீறல்கள் தந்த
தையலின் வலிமறந்து
மையல் கொள்கிறேன்
திறவாத இந்த விழிகள்மீது !!!

முதல் காதல் தந்த முத்தான நினைவுகளோடு

யாழினி வளன் ..

எழுதியவர் : யாழினி வளன் (9-Aug-17, 1:58 am)
பார்வை : 228

மேலே