கணவனின் கடமைகள்

கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இதோ, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) ஆண்களை எச்சரிக்கிறார்கள்:

“பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

“பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி(ஸல்) அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

நபி(ஸல்) அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.

சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி(ஸல்) அவர்கள் , ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி(ஸல்) அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!

பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

நபி அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)

சில முஸ்லிமல்லாத சகோதரர்கள் ''நபிகள் நாயகம் பெண்களை அடிக்க அனுமதித்துள்ளார்களே இது சரியா?'' என கேள்வி எழுப்பலாம், இதை நாம் கொஞ்சம் நடைமுறையோடு ஒப்பிட்டு சிந்தித்தால் அதில் உள்ள நியாயங்கள் புரியும், இயற்கையிலேயே ஆண்கள் உடல் பலத்தில் பெண்களை விட கூடியவர்களாக இறைவன் படைத்துள்ளான், ஆண்களுக்கு கோபம் ஏற்படும்போது அவன் செய்வதறியாது பெண்களை தாறுமாறாக அடித்து விட வாய்ப்பு உள்ளது, அதற்கு ஒரு நெறி முறையை சொல்லாவிட்டால் அவர்களுக்கு அந்த நேரத்தில் என்ன தோணுதோ அதை செய்துவிடுவார்கள், இது பெண்களுக்கு அதிகம் பாதிப்புடையதாக ஆகிவிடும், அதனால் இஸ்லாம் அவனுடைய கோபத்தை பல படித்தரங்களாக குறைக்கிறது, முதலில் தெளிவான மானக்கேடான விஷயங்களை அவர்கள் செய்யும்போதுதான் கோபப்பட வேண்டும் என்பதிலிருந்து சின்னச்சின்ன விஷயங்களை புறக்கணித்து விட வேண்டுமென்பதை புரிந்து கொள்ளலாம், அதற்கு வேறு பல சான்றுகளையும் மேலே கூறிய பல சம்பவங்களில் பார்த்தோம், அப்படியே கோபம் வந்தாலும் முதலில் அறிவுரை சொல்ல வேண்டும் அதன் பிறகும் மனைவி அந்த தவறிலிருந்து திருந்திக்கொள்ளாவிட்டால் பின்பு படுக்கையிலிருந்து சிறிது நாட்கள் விலகி இருக்க வேண்டும், இவ்வாறு அவனுடையை கோபத்தை தள்ளிப்போட வைத்து இருவரும் பிரிந்திருக்கும் சில நாட்களில் அவனுடைய கோபம் வெகுவாக தணிந்து விடும், அந்தப்பெண்ணும் திருந்திவிட ஒரு வாய்ப்பு உள்ளது, அதுக்கு பிறகும் கூட அந்தப்பெண் திருந்தாவிட்டால்தான் இலேசாக காயம் ஏற்படாதவாறு அடிக்குமாறு சொல்லப்பட்டுள்ளது அது கூட முகத்தில் அடிக்க கூடாது, உடம்பில் காயம் ஏற்படும் படி அடிக்ககூடாது என்றெல்லாம் பல நிபந்தனைகள் உள்ளன, கணவன் எடுத்த எடுப்பில் கோபத்துடன் அடிப்பதை இஸ்லாம் பல நாட்கள் தள்ளிப்போட வைத்து இயல்பாகவே கோபத்தை குறைக்கிறது, அதன் பிறகு வெறுமனே சடங்குக்கு லேசாக ரெண்டு அடி அடித்துக்கொள் என்ற அளவுக்கு ஆண்களின் கோபத்துக்கு ஒரு அதிக பட்ச வெளிப்பாடாக இதைத்தான் கூறுகிறது இஸ்லாம், எனவே இது மனித நேயத்துக்கு எதிரானதாக கருத வேண்டிய அவசியமில்லை, மாறாக இது பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு சட்டமாகவே உள்ளது, அவர்களுக்கும் நாம் ஒரு தப்பு செய்கிறோம் என்பதை உணர போதிய அளவு கால அவகாசம் கிடைப்பதால் அவர்களும் திருந்திக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இதை இஸ்லாம் கூறுகிறது. இன்னும் சொல்லபோனால் நபிகள் நாயகம் தனது கடைசிபத்தாண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தால் கூட அரசு பணத்தில் சொந்த செலவுக்கு எடுக்ககூடாது என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்ததால் அவர்களின் வாழ்கை மிகவும் வறுமையில்தான் ஓடியது, நூறு ஆடுகளைகொண்ட ஒரு ஆட்டுப்பண்ணையின் மூலம் வரும் வருமானத்தை வைத்தே வாழ்கைச்செலவுகளை செய்து வந்தார்கள் இதனால் பல சமயம் அவரின் மனைவிமார்கள் ''நீங்கள் செலவுக்கு தருவது பத்தவில்லை'' என்று நபிகள் நாயகத்துடன் சண்டை போட்டுள்ளார்கள், என்பதை பல சம்பவங்களின் மூலம் காண முடிகிறது, ஒரு கட்டத்தில் ''என்னால் உங்களுக்காக அல்லாஹ் தடைவித்தித்துள்ள செயல்கள் மூலம் செல்வத்தை திரட்ட முடியாது. வேண்டுமானால் நான் உங்களை விவாகரத்து செய்கிறேன் நீங்கள் விரும்பியவர்களை மணந்து கொள்ளுங்கள்'', என்று கூறுகின்ற அளவுக்கு நிலைமை சென்றது, ஆனாலும் அதற்காகவெல்லாம் நபிகள் நாயகம் எந்த ஒரு மனைவியையும் கைநீட்டி ஒரு அடி கூட அடித்தத்தில்லை என்பதை இங்கு குறிப்பிட்டால் அடிக்க வேண்டிய நிலைமை எவ்வளவு இறுதி கட்டமான நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ளலாம்,

நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி(ஸல்) அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.

பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!”(ஜாமிவுத் திர்மிதி)

சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி(ஸல்) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)

நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.

மேலும், “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19) இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது.


இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கும்.

எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.

“முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்துஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தைவெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்திகொள்ளட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் ௨௯௧௫

உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலேதவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் ௧௯௧௬௦

”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவுஉட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி ௫௬

ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார்அதற்கு நபி அவர்கள்,’நீ உண்ணும் போதுஅவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் கண்டிக்கும் போது முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் (ஏதும் வெறுப்பு இருப்பின்) வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162”இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம்கொண்டவரே!

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082

எழுதியவர் : (23-Jan-18, 5:10 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 408

மேலே