பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - சங்க இலக்கியங்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் :

நாலடியார் (Naaladiyar)
நான்மணிக்கடிகை (Naanmanikadikai)
இனியவை நாற்பது (Iiniyavainarpadhu)
இன்னா நாற்பது (Innanarpadhu)
திரிகடுகம் (Thirikadugam)
ஆச்சாரக் கோவை (Acharakovai)
சிறுபஞ்சமூலம் (Sirupanchamoolam)
முதுமொழிக்காஞ்சி (Mudhumozhikanchi)
பழமொழி நானூறு (Pazhamozhinaanooru)
ஏலாதி (Elathi)
திருக்குறள் (Thirukural)
கார் நாற்பது (Kaarnarpadhu)
ஐந்திணை ஐம்பது (Iiynthinaiiympadhu)
திணைமொழி ஐம்பது (Thinaimozhiiympadhu)
ஐந்தினை எழுபது (Iynthinaiezhupadhu)
திணைமாலை நூற்றைம்பது (Thinaimaalainootruiympadhu)
கைந்நிலை (Kainilai)
களவழி நாற்பது (Kalavazhinarpadhu)
இன்னிலை (Innilai)


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் :

நாலடியார் (Naaladiyar)

நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாவால் இயற்றப் பட்டதால் நாலடியார் எனப்பட்டது. இந்நூல் சமண முனிவர் நானூறு பேரால் பாடப்பட்டது. திருக்குறளைப் போலவே நாலடியாரும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்று பகுப்பாக உள்ளது. சமண மாமுனிவர்கள் அருளிய இவ்வரிய நூலுக்கு உரை எழுதியவர் ஜைன தத்துவ நூலாசிரியர் ஸ்ரீபுராணச் செம்மல் பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன், M.A., அவர்கள் ஆவார்.



அறத்துப்பால்
துறவற இயல்
1. செல்வம் நிலையாமை
2. இளமை நிலையாமை
3. யாக்கை நிலையாமை
4. அறன் வலியுறுத்தல்
5. தூய் தன்மை
6. துறவு
7. சினம் இன்மை
8. பொறையுடைமை
9. பிறர்மனை நயவாமை
10. ஈகை
11. பழவினை
12. மெய்ம்மை
13. தீவினை அச்சம்
பொருட்பால்
துறவற இயல்
14. கல்வி
15. குடிப்பிறப்பு
16. மேன் மக்கள்
17. பெரியாரைப் பிழையாமை
18. நல்லினம் சேர்தல்
19. பெருமை
20. தாளாண்மை
நட்பியல்
21. சுற்றம் தழால்
22. நட்பாராய்தல்
23. நட்பிற் பிழை பொறுத்தல்
24. கூடா நட்பு
இன்பவியல்
25. அறிவுடைமை
26. அறிவின்மை
27. நன்றியில் செல்வம்
துன்பியல்
28. ஈயாமை
29. இன்மை
30. மானம்
31. இரவச்சம்
பொதுவியல்
32. அவையறிதல்
33. புல்லறிவாண்மை
34. பேதைமை
35. கீழ்மை
36. கயமை
பன்னெறியியல்
37. பன்னெறி
காமத்துப்பால்
இன்ப துன்ப வியல்
38. பொது மகளிர்
இன்ப வியல்
39. கற்புடை மகளிர்
40. காம நுதலியல்






நான்மணிக்கடிகை (Naanmanikadikai)

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.

நிலவானது நிலைத்த பேறுடைய திருமாலின் முகத்தை ஒத்திருக்கும். ஒளிரும் ஞாயிறு அவனது சக்கரத்தை ஒத்திருக்கும். வயலில் காணப்படும் தாமரை அவனது கண்களை ஒத்திருக்கும். காயாம்பூவானது அவனது திருமேனி நிறத்தை ஒத்திருக்கும்.

உலகத்தைத் தன் வயிற்றுக்குள் அடக்கியவனான திருமால் தன் திருவடிகளால் மூவுலகத்தையும் அளந்தான். பசுக்களின் குளிரைப் போக்குவதற்காகக் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தான். பாணாசுரனது நெருப்பு மதிலை அழித்து அநிருத்தனை மீட்டான்.

எவரையும் எளியவர் என்று எண்ணி இகழ்ந்து விடாதே. மிகச் சிறந்த பொருளாக இருந்தாலும் தகுதியற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாதே. செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும் ஏழை மக்களிடம் கோபம் கொள்ளாதே. சொல்லத் தகாத சொற்களைக் கோபத்திலும் கூறிவிடாதே.

கேகயப் பறவைகள் பறையோசையைக் கேட்டால் இறந்துவிடும். சான்றோர்கள் தன்மானக் குறைவு ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள். நெல்லுண்டான முதிர்ந்த மூங்கில் உடனே பட்டுப் போவது போல சான்றோர் தன் மீது பழி ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள்.

மாணிக்கம் முதலான உயர் மணிகளின் நல்லியல்பை அதைக் கழுவிய பின் அறிவார்கள். குதிரையின் நல்லியல்பை அதன் மேற் சேணமமைத்து ஏறிய பின் அறிவார்கள். பொன்னின் தரத்தை அதனை உருக்கிப் பார்த்து அறிவார்கள். உறவினர்களின் இயல்பைத் தன் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற போது அறிவார்கள்.
கள்ளிச்செடியில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலுள் பிறக்கும். அவ்வாறே நல்லியல்பு கொண்டோர் பிறக்கும் குடியையும் எவராலும் அறிய முடியாது.
ஒளியுள்ள உயர்ந்த மணிகள் எல்லாம் மலையில் உண்டாகும். காதலியின் இனிய மொழிகள் மிகுந்த களிப்பை ஏற்படுத்தும், மென்மையான அருளுள்ளம் கொண்டவர்களிடத்து அறநெறி தோன்றும். இவை எல்லா இன்பமும் செல்வத்தினால் உண்டாகிவிடும்





இனியவை நாற்பது (Iiniyavainarpadhu)

பூதஞ்சேந்தனார் இயற்றியது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நானகு பாடல்களில் இன்பம் தருவன நான்கினைக் கூறியுள்ளார். மற்ற பாடல்களில் மூன்று மூன்று இன்பங்களை கூறியுள்ளார்.

மூன்று கண்களையுடைய சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது.

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்துணர்ந்து முற்றும் துறத்தல் இவை அனைத்திலும் மிக இனிது.

சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.

கொல்லாமை முன் இனிது. அரசன் நடுவு நிலைமை தவறி சிறப்பு செய்யாமை இனிது. செங்கோலனாக இருப்பது இனிது. யாவரிடத்தும் திறமையால் கூடியமட்டும் குற்றம் கூறாமை மிக இனிது.



இன்னா நாற்பது (Innanarpadhu)

ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது. இந்நூலை இயற்றியவர் கபில தேவர்.


முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்குத் துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திருமாலை மறத்தல் துன்பம் தரும். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்குத் துன்பம் உண்டாகும்.

சுற்றமில்லாத மனையின் அழகு துன்பம். தந்தையில்லாத மகனின் அழகு துன்பம். துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பம். அவ்வாறே மந்திரங்கள் பயன் தராவிடில் துன்பம்.

பார்ப்பாருடைய வீட்டில் நாயும், கோழியும் இருத்தல் துன்பம். கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பம். பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பம். அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பம்.

கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பம்.

எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும், திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.

வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம். மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய மனையில் வாழ்தல் துன்பமாம். நீதி இல்லாமல் ஆளுகின்ற அரசரது ஆட்சி துன்பமாகும். வெளிப்படையாகச் செய்யும் வேலை துன்பமாகும்.



திரிகடுகம் (Thirikadugam)

திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளை குறிக்கும். மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைப் போன்று, இந்நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இதனாலேயே இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் நல்லாதனார்.

உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.

அருந்ததி போன்று கற்புடைய பெண்ணின் தோளும், நல்ல குடியில் தோன்றிய பெருமை உடையவரது நட்பும், சொற்களினிடத்தே குற்றங்களை அகற்றும் கேள்வி உடையவரது நட்பும் இம்மூன்றும் திருகடுகம் போன்று சிறந்ததாம்.
தனது குடிப்பிறப்பின் சிறப்பு குறையாத ஒழுக்கமும், இனிய குணத்தையுடையோர் ஏவிய தொழில்களைச் செய்வதும், வேதங்கள் கூறிய வழியில் நடத்தலும், மேன்மையானவர் செய்யும் தொழில்களாகும்.

கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.

பகைவருக்கு முன்னே தன் செல்வத்தைக் காட்டுவதும், மாட்டு மந்தையில் கோல் இல்லாமல் செல்வதும், பகைவரோடு நட்பு பாராட்டுவதும் கெடுதியை உண்டாக்கும்.

பழகாத துறையில் இறங்கிப் போதலும், விருப்பமில்லாத பெண்ணைச் சேர்வதும், வருந்திப் பிறர்க்கு விருந்தாளியாவதும் துயரத்தைத் தரும்.


ஆச்சாரக் கோவை (Acharakovai)

ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்.

தனக்குப் பிறர் செய்த நன்றியறிதலும், பொறையும், இன்சொல்லும், எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும், கல்வியும், ஒப்புரவை மிக வறிதலும், அறிவுடைமையும், நல்லினத்தாரோடு நட்டலும் என இவ்வெட்டு வகையும் நல்லோராற் சொல்லப்பட்ட ஆசாரங்கட்குக் காரணம்.

கருத்துரை: நன்றியறிதல் பொறையுடைமை முதலிய எட்டும் நல்லொழுக்கங்கட்குக் காரணம்.

நற்குடிப் பிறப்பு, நெடிய வாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்குரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டினையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல் ஓழுகுவார்.

கருத்துரை: ஒழுக்கந் தவறாதவர்கள் மேற்கூறிய எட்டு வகையையும் எய்துவர்.

குரவர்க்குத் தக்கணை கொடுத்தலும், யாகம் பண்ணுதலும், தவஞ்செய்தலும், கல்வியும் என்ற இந்நான்கினையும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு பாதுகாத்துச் செய்துவருக. மாறுபடுமாயின் எவ்வுலகத்தின்கண்ணும் தனக்குப் பயனாகாவாய் இந்நான்கும் கெடும்.

கருத்துரை: தக்கணை முதலியவைகளைக் காலதாமதமின்றி ஒருமனதோடு செய்து முடிக்கவேண்டும்.

வைகறையாகிய பின்யாமத்திலே துயிலெழுந்து தான் பிற்றைஞான்று செய்யும் நல்லறத்தையும் ஒள்ளிய பொருட்கு வருவாயாகிய காரியத்தையும் ஆராய்ந்து சிந்தித்து, பின்னைக் கங்குல் புலர்ந்தால் பழுதின்றித் தந்தையையும் தாயையும் தொழுதெழுந்து ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குக என்று சொல்லப்படும் ஒழுக்கம், அறிவுடைய பழையார் சொல்லிய முறைமை.

கருத்துரை: மறுநாட் செய்யப்புகுங் காரியத்தை வைகறையிலெழுந்து சிந்தித்துப் பின் பெற்றோரை வணங்கி அச்செயலைத் தொடங்குக.

பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலையோடே கூட இவையிற்றை எச்சிலையுடையராய் யாவரும் தீண்டார் என்று சொல்லுவர்; எல்லோரும் யாப்புற எச்சிலோடு தீண்டப்படாத பொருளும் இவை.

கருத்துரை: பசு முதலிய ஐந்து பொருள்களை எவரும் எச்சிலுடன் தீண்டலாகாது.




சிறுபஞ்சமூலம் (Sirupanchamoolam)

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலம் பேணுமாறு போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர்.


காமாதி மூன்றையு மொழித்து முற்றுமுணர்ந்து, முப்பில்லாதான் பாத மனக்குற்ற நீக்கி மிகவும் வணங்கிப் பல குணங்களைப் புகழ்ந்து மண்பரந்த வுலகில் மக்கட் கெல்லாம் உறுதியாகிய பொருள்மேற் றொடுத்து வெண்பாவாகிய சில செய்யுட்களை யுரைப்பேன்.

கருத்துரை: நிலைபெற்ற கடவுளின் அடிகளை வணங்கிப் போற்றி இந்நிலவுலகினர்க்கு நன்மை யுண்டாகுமாறு இந்நூலை யான் கூறுவேன்.

பொருளுடையான் கண்ணதே யாகும் இன்பம்; அறவினையும் உயிர்கள்மேல் அருளுடையான் மாட்டேயாகும்; அவ்வருளுடையான் பழியைச் செய்யான், பாவத்தை யடையான், பிறர் செவியின்கட் செலுத்திப் பிறரைப் பழிபடக் கூறும் புறமொழிகளையும் நடத்தான்.

கருத்துரை: பொருளுள்ளவனுக்கு இன்பம் பெருகும்; அருளுள்ளவனுக்கு அறம் விளையும்; அருளுள்ளவன் பழியையும், தீவினையையும் புறங்கூறுதலைஞ் செய்யான்.

கற்புடைய பெண் தனது கொழுநற்கு அமிர்தோ டொக்கும், கற்றுவைத்துப் பொறிகளைந்தையும் அடக்கினான் உலகத்தார்க்கு அமிர்தோ டொக்கும், நற்செயல்களையுடைய நாடுகள் அந்நாடாளும் அரசரக்கு அமிர்தோ டொக்கும், அந்நாட்டிற்கு மழைபோல நன்மையைச் செய்யும் மேகத்தைச் சேர்ந்த கொடி வேந்தனமிர்தோ டொக்கும், அவன் சேவகனும் அவ்வரசற்கு நன்மையாகவே செய்யின் அமிர்தோ டொக்கும்.

கருத்துரை: கற்புடைப் பெண், கற்றடங்கினான், நாடு வேந்து, சேவகன் இவர்கள் முறையே கணவன் முதலியவர்களுக்கு அமிர்தம் போல் நின்று உதவுவார்கள்.

கல்லாதா னொருவன் தான் ஆராய்ந்து காணும் நுண்மைப்பொருளும், காதிரண்டும் இல்லாதாள் அழகுடையேன் என்றெடுத்த முகத்தினளா யொழுகலும், பொருளில்லாதவன் இல்லாதார்க் கீய்த்தளியா னென்றாலும், ஒருவன் தான் தனக்கியன்ற பொருளன்றி யியலாத பொருளை ஈயாதா னென்றலும் அறிவுடைய நல்லோர் கேட்பின் நகையாம்.

கருத்துரை: கல்லாதான் நுட்பம் முதலானவை அறிஞர்க்கு நகைப்பினையே விளைவிக்கும்.


பிறப்பான் வரும் உடம்பை நீக்க வேண்டினானாயின் உயர்தவத்தை செய்க, இவ்வுலகத்தினிடமெல்லாந் தன்புகழால் நிறைய வேண்டினானாயின் ஈகையைச் செய்க, மெல்லிய வீரம் தனக்கு நிறைய வேண்டினானாயின் அறிவின்கண் அடங்கி யொழுக, பிறர் மனையாளை விரும்பா தொழிக, சிறிதாயினும் வருவாய் நாடோறும் ஈண்டிற் செல்வம் ஒருவற்கே கூடும்.

கருத்துரை: பிறவி யொழியத் தவமும், புகழ் நிறைய ஈகையும், உள்ளம் தூய்மையாய் நிரம்ப அறிந்தும் அறியாமையும், பிறர்மனை நயவாமையும், வருவாய் நாடோறும் சிறிதாகச் சேர உண்டாகும் செல்வமும் ஒருவற்கு வேண்டற்பாலனவாம். ‘ஈதலிசைபட வாழ்தலதுவல்ல தூதியமில்லை யுயிர்க்கு‘ என்ற மையால் ஈகை ஆற்று எனப்பட்டது. மடம் என்பது மென்மை. ஈண்டு மென்மையின் பயனாகிய இணக்கத்தை யுணர்த்துகின்றது. தான் கூறுவது அறியமாட்டாதாரிடத்து, அவரறியாமையைக் கூறின் அவரோடிணங்குவதற்குத் தடையுண்டாமாதலின், “மடம் பொழிய வேண்டி னறிமடம்,“ என்றார். அறிமடமாவது - தான் கூறுவது அறியும் அறிவில்லார் மாட்டு அவரறிய மாட்டாமையைத் தானறிந்தும் அறியாதான் போன்றிருத்தல். அவர் அறியாமையை அவருக்குத் தெரிவிப்பின் பயனில்லை என்றவாறாயிற்று. பாவங்களிற் கொடியது பிறர்மனை விரும்பல் ஆதலின், பிறர்மனை வேண்டேல் என்றார். வள்ளுவரும், “பகைபாவ மச்சம் பழியென நான்கும், இகவாவா மில்லிறப்பான் கண்,“ என்றனர் - ஆற்று என்பது தீபகமாக மூன்றிடங்களிலும் கூட்டப்பட்டது. மனை - மனையாள்; இடவாகு பெயர்.


படைக்கு வனப்பாவது யானை, பெண்ணிடைக்கு வனப்பாவது நுண்மை, ஒழுக்கத்துக்கு வனப்பாவது ஒருவற்காகப் பாங்குரையாமை, செங்கோலுக்கு வனப்பாவது ஒருவர்க்குப் பாங்குரையாமை, சேவகரக்கு வனப்பாவது கெடாத வன்கண்மை.

கருத்துரை: சேனைக்கு யானைப்படையும், பெண்கள் இடைக்குச் சிறுமையும், ஒழுக்கத்துக்கு அரசன் செங்கோலுக்கும் நடுவு நிலை பிறழாத சொல்லும், படை வீரர்க்கு அஞ்சாமையும் அழகாகும்.










முதுமொழிக்காஞ்சி (Mudhumozhikanchi)

மதுரைக் கூடலூர் கிழார் என்பவரால் பாடப்பெற்றது. பத்து அதிகாரங்களையும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து பத்து குறட்டழிசைகளையும் கொண்டது.அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறுவது.

1. சிறந்த பத்து

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை

கடல் சூழ்ந்தஉலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்துஆசாரமுடைமை.

2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்

பிறர் தன்மேற் செய்யும்காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல்.

3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை

தானாக ஒன்றை மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்கசிறப்புடைத்துத் தான் கற்றதனைக் கடைப்பிடித்திருத்தல்.

4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை

செல்வத்தினும் மிக்கசிறப்புடைத்து மெய்யுடைமை.

5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை

இளமையினும் மிக்கசிறப்புடைத்து உடம்பு நோயின்மை.

6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று

அழகுடைமையினும் மிக்கசிறப்புடைத்து நாணுடைமை.

7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று

நல்ல குலமுடைமையினும்கல்வியுடைமை சிறப்புடைத்து.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று

தான் ஒன்றைக் கற்குமதனினும்சிறப்புடைத்துக் கற்றாரை வழிபாடு செய்தல்.

9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று

பகைவரைச் செலுத்தலினும் மிக்கசிறப்புடைத்துத் தன்னைப் பெருகச்செய்தல்.

10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று

செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின்அழிதலின் நின்ற நிலையிற் சிறுகாமை சிறப்புடைத்து.



2. அறிவுப்பத்து

11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப

கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப்பிறந்தமையை அவன் ஈரமுடைமையானே அறிவர்.

12. ஈரம் உடைமை ஈகையின் அறிப

ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக்கொடுக்கும்கொடையினானே அறிவர்.

13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப

ஒருவன் தப்பாதகடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன்நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர்.

14. கற்றது உடைமை காட்சியின் அறிப

ஒருவனது கல்வியைஅவன்றன் அறிவினானே அறிவர்.

15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப

ஒருவன் ஆராய்ந்து துணியவல்லன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானேஅறிவர்.

16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப

சிறுமையுடைய குடியின்கண் பிறந்தான் என்பதனை அவன் செருக்கினானேஅறிவர்.

17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப

ஒருவனை ஒருவன்படிறுசெய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர்.

18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப

சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடையஎல்லாச் சோர்வையும் அறிவர்.

19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப

ஒருவன் தன்னறிவின்கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுடையன்என்ப தறிவர்.

20. சீருடை யாண்மை செய்கையின் அறிப

ஒருவன் புகழுடைய ஆண்வினைத்தன்மையை அவன் செய்கையான் அறிவர்.


பழமொழி நானூறு (Pazhamozhinaanooru)

இந் நூலிலுள்ள பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர் பாடியிருத்தலின், பழமொழி என்னும் சிறப்புப்பெயர் பெற்றது. மேலும் இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இதனால் பழமொழி நானூறு" என்றும் இது குறிக்கப் பெறும். இதன் ஆசிரியர் மூன்றுறை அரையனார்.


அசோக மரத்தின் நிழலில் எழுந்தருளியிருக்கும் அருகக்கடவுளின் திருவடிகளைத் தொழுது பழைய பழமொழிகள் நானூறைத் தழுவி மூன்றுரை அரசர் இனிய பொருட்முறைகள் அமைந்த வெண்பாக்களாக்கி இந்நூற்பாட்டுக்களின் நான்கடியும் சுவை தோன்ற பாட்டமைத்தார். இறைவனை வணங்கி இப்பழமொழி நானூறும் பாடப்பெற்றன.

காமம்,வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களையும் அருமைகாக கெடுத்தலான்.குற்றமின்றி முற்றும் அறிந்த கடவுளின் திருவடிகளையே அகன்ற கடலால் சூழப்பெற்ற அகன்ற இடத்தினையுடைய பெரிய இவ்வுலகில் உரிமைப் பொருளைப் போலக் கருதி அறிந்தவர்களது உயர்வே பேருடம்பினையுடைய ஆவியைப் போன்று பெரிது

கருத்து: கடவுளின் திருவடிகளை உரிமையாக வணங்கியவர்களது உயர்வே மிகச்சிறந்தது.

மிகவும் வழியைக் கடக்கவிட்டு தீர்வைப் பொருள் அடைபவர்கள் இல்லை ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெறுபவர்கள் இல்லை. (அவைபோல) கல்வியைக் கற்றற்குரிய இளமையில் கல்லாதவன் முதுமையின்கண் கற்று வல்லவனாவான் எனவும் புணருமோ என்று சொல்லுதலும் கூடுமோ?இல்லை.

கருத்து: கற்றற்குரிய இளமைப் பருவங் கழிவதற்கு முன்னேகல்வி கற்கவேண்டும்.

(கற்றார் முன்பு) ஒன்றைச் சொல்லுந்தோறும் குற்றம் உண்டாதலால் மனத்தளர்வின்றி கற்குந்தோறும் நான் கல்லாதவன் என்று கருதி கல்லா தொழிந்த நாட்களுக்கு வருந்தி மனம் பொருந்தி ஒருமைப்பட மீண்டும் மீண்டும் நினைத்து; உழன்று ஒன்று அறியுமேல் - வருந்தி அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின் பின்னும் நூல்களைக் கற்குந்தோறும் தான்கல்லாதவனாகவே நினைத்துக் கற்கக் கடவன்.

கருத்து: படிக்குந்தோறும்அறியாதவனாக நினைத்து ஒவ்வொருவனும் படிக்கவேண்டும்.



மலைநாட்டையுடையவனே விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை விலைப்பணம் கொடுத்துக் கொள்வது விளக்கினால் பொருள் வேறுபாடு இல்லை என்று விளக்கின் தன்மை முழுமையும் ஆராய்ந்தேயாகும் விளக்கு தெளிவாகக் காட்டாது தானே மழுங்குதலைச் செய்யின் பொருள்கொடுத்துப் பெற்ற அதனால் அவர்க்கு வரும் பயன் யாது? (ஆதலால்) பொருளைக்கொடுத்து இருளைக் கொள்ளார்.

கருத்து: ஞானநூல்களைக் கற்றல் வேண்டும்.

மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார் அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுக ளில்லை அந்த நாடுகள் அயல் நாடுக ளாகா அவ்வறிவுடையோர் நாடுகளேயாம் அங்ஙனமானால் வழியில் உண்பதற்கு உணவு (கட்டமுது) கொண்டுசெல்ல வேண்டியதில்லை.

கருத்து: கற்றாருக்குச்சென்ற இடமெல்லாம் சிறப்பு.


டித்தற்கு இனிய உவர்ப்பில்லாத நன்னீர் வேறு இடங்களில் இல்லையென்று நினைக்கும் கிணற்றினுள்ளே வாழும் தவளையைப்போல் தாமுங் கருதாமல் நூல்களை நாள் முழுமையும் வெறுப்பின்றி இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும் (அறிஞர்களிடம்) விரும்பிக் கேட்டலே நன்று. (கற்றலிற் கேட்டலே இனிது.)

கருத்து: தேரைபோ லாதலாவது தாம் விரும்பிச் செய்யும் கற்றதனாலன்றிக் கேட்டறிதலினாற் பயனில்லை என்று கருதுதல்.




ஏலாதி (Elathi)

ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர் மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.

மந்திரி முதலிய இருபத்து நால்வரும் குற்றமற்றபுகழமைந்த தனது சிவந்த பாதங்களாலிட்ட பணியைச்செய்யாநிற்க, ஒழுக்கத்தின் பயனைப் பெறுகின்றபிரமச்சாரி முதலிய நால்வர் விரும்பிய பொருளைக்கொடுத்துக் கற்றுணர்ந்தடைந்த நான்மறையொழுக்கத்தை விரும்பி நடந்து ஒருவன்வாழ்வானானால், பூமியினின்று நீங்கித் தேவர்க்குஅரசனாகிய இந்திரனால் விரும்பப்பட்டு வாழ்தல்உண்மையாம்.


நிறைந்த பூவையணிந்த கூந்தலையுடையாய்! திசையெங்கும் பரந்த புகழ், செல்வம், மேன்மையாகக் கொள்ளுஞ் சொல், வீரத்தில் அசையாது நின்ற நிலை, கல்வி, வரையாது கொடுத்தல் ஆகிய இவ்வாறும் தொன்மையுடைய குடிப்பிறந்து திருநான்மறை நெறியிலொழுகுவோரது இலக்கணம்,

கருத்து: புகழ் முதலிய ஆறும் நற்குடியிற் பிறந்து நான்மறையொழுக்கம் உடையாரிடத்திலேயே அழகு பெறும்.


தேன் பொழியும் பூவை யணிந்த கூந்தலையுடையாய்! பிறர் புரியுங் கொலைத்தொழிலை விரும்பாதவனும், கொல்லாதவனும், தசையை அறிவு மயங்கித் தின்னாதவனும், மிகுந்த வருத்துந் தொழிலைச் செய்யாதவனும், பொய்யொழுக்கமில்லாதவனும், யாது காரணம் பற்றியும் தன்னிலைமையினின்று விலகாதவனும், பூவுலகத்தாரது வணக்கத்துக் குரியனாவதுடன் வானுலகத்தார் வணக்கத்துக்கும் உரியவனாவது திண்ணம்.

கருத்து: கொலை விரும்பாமை முதலிய ஆறு நல்லியல்புகளையுமுடையவன் மக்கட்குந் தேவர்க்குந் தலைவனாவான்.


யாவர்க்குந் தவஞ் செய்தல் எளிது, கைப்பொருள் வழங்கல் அரிது பெரியோர்க்குக் குற்றத்துக்குள்ளாதல் அரிது; நன்னெறியி லொழுகுதல் எளிது. கெடுதலில்லாத இன்பநெறி தடுமாறிச் சென்றால்பிறப்பிற் பொருந்துதல் எளிது. அவ்வாறு பிறந்ததின்கணுண்டாகுந் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல் அரிது.

கருத்து: மக்கட்குத் தவம் எளிது, ஈகை அரிது; தக்கார்க்குத் தீமை அரிது, நன்மை எளிது; திருவருள் நெறி தவறின் பிறவி எளிது; ஆனால் அதன் நீக்கம் அரிது.

பிறர்க்கு நேரிட்ட துன்பந் துடைத்தலும், பிறரை இகழாமையும், கீழ்மக்களோடு பழகாமையும், யாவர்க்கும் பசித்துன்பம் போக்குதலும், உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதலும், தன்னை யெதிர்ப்பட்டவர் விரும்பும் இன்சொல்லும் ஒருவன் தானே கண்டுகொண்டானெனில் கற்றறிந்தோராற் சொல்லப்பட்ட நூல்களைப் பார்த்து அறிய வேண்டிய பொருள் ஒன்றுமில்லாதவன் ஆவன்.

கருத்து: இடர் தீர்த்தல் முதலிய ஒழுக்கங்களையுடையவன் கற்றவர்க்கு ஒப்பாவான்.


தனக்கென்றும் தன்னைச் சார்ந்தவனுக்கென்றும் பொய்யுரையாதவனாய், உண்மையையே யுரைப்பவனாய், யாதொரு பொருளையும் எனக்குரியதென அன்பு வையாதவனாய், முல்லை நிலத்திலுள்ள கொன்றை மலரை ஒக்கும் அணிகளையணியும் மாதர் சொல்லைப் பேணாதவனாய், செல்வச் செருக்கில்லாதவனாய் ஒருவன் வாழ்வானாயின், அவனிடத்து அறநூல்களிற் கூறப்பட்ட மேன்மையான பொருள்களெல்லாம் வந்து நிரம்பும்.

கருத்து: பொய்யாமை முதலியன உடையானுக்கு நூல்களால் உணர்தற்குரிய ஏனைய நல்லியல்புகளுந் தாமே வந்து நிரம்பும்.





திருக்குறள் (Thirukural)


திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். உலக இலக்கிய அரங்கில் தமிழனின் பெருமையை நிலைநாட்டும் உயர்வுடையது இந் நூல். இது ஏழு சீர்களைக் கொண்ட 'குறள்' என்னும் யாப்பில் அமைந்தது. 'உலகப் பொதுமறை' என அழைக்கப்படுகிறது. 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது. இதில் கொடுக்கப்பட்டுள்ள உரை திரு. மு.வரதராசனார் அவர்களால் எழுதப்பட்டதாகும்.

அறத்துப்பால்
1. பாயிரவியல்
1. கடவுள்வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன் வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம
7. மக்கட் பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை கூறல்
11. செய்நன்றி அறிதல்
12. நடுவுநிலைமை
13. அடக்கமுடைமை
14. ஒழுக்கம் உடைமை
15. பிறனில் விழையாமை
16. பொறையுடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங் கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினையச்சம்
22. ஒப்புரவறிதல்
23. ஈகை
24. புகழ்
3. துறவறவியல்
25. அருளுடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னா செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்
4. ஊழியல்
38. ஊழ்
பொருட்பால்
1. அரசியல்
39. இறைமாட்சி
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
43. அறிவுடைமை
44. குற்றங் கடிதல்
45. பெரியாரைத் துணைக் கோடல்
46. சிற்றினம் சேராமை
47. தெரிந்து செயல்வகை
48. வலியறிதல்
49. காலம் அறிதல்
50. இடன் அறிதல்
51. தெரிந்து தெளிதல்
52. தெரிந்து விளையாடல்
53. சுற்றந் தழால்
54. பொச்சாவாமை
55. செங்கோன்மை
56. கொடுங்கோன்மை
57. வெருவந்த செய்யாமை
58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்கம் உடைமை
61. மடி இன்மை
62. ஆள்வினை உடைமை
63. இடுக்கண் அழியாமை
2. அங்கவியல்
64. அமைச்சு
65. சொல்வன்மை
66. வினைத் தூய்மை
67. வினைத் திட்பம்
68. வினை செயல் வகை
69. தூது
70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
71. குறிப்பறிதல்
72. அவை அறிதல்
73. அவை அஞ்சாமை
74. நாடு
75. அரண்
76. பொருள் செயல்வகை
77. படை மாட்சி
78. படைச்செருக்கு
79. நட்பு
80. நட்பாராய்தல்
81. பழைமை
82. தீ நட்பு
83. கூடாநட்பு
84. பேதைமை
85. புல்லறிவாண்மை
86. இகல்
87. பகைமாட்சி
88. பகைத்திறம் தெரிதல்
89. உட்பகை
90. பெரியாரைப் பிழையாமை
91. பெண்வழிச் சேறல்
92. வரைவின் மகளிர்
93. கள்ளுண்ணாமை
94. சூது
95. மருந்து
3. ஒழிபியல்
96. குடிமை
97. மானம்
98. பெருமை
99. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில் செல்வம்
102. நாணுடைமை
103. குடிசெயல் வகை
104. உழவு
105. நல்குரவு
106. இரவு
107. இரவச்சம்
108. கயமை
காமத்துப்பால்
1 களவியல்
109. தகையணங்குறுத்தல்
110. குறிப்பறிதல்
111. புணர்ச்சி மகிழ்தல்
112. நலம் புனைந்துரைத்தல்
113. காதற் சிறப்புரைத்தல்
114. நாணுத் துறவுரைத்தல்
115. அலர் அறிவுறுத்தல்
2. கற்பியல்
116. பிரிவாற்றாமை
117. படர் மெலிந் திரங்கல்
118. கண் விதுப்பு அழிதல்
119. பசப்புறு பருவரல்
120. தனிப்படர் மிகுதி
121. நினைந்தவர் புலம்பல்
122. கனவு நிலை உரைத்தல்
123. பொழுது கண்டு இரங்கல்
124. உறுப்பு நலன் அறிதல்
125. நெஞ்சொடு கிளத்தல்
126. நிறையழிதல்
127. அவர் வயின் விதும்பல்
128. குறிப்பறிவுறுத்தல்
129. புணர்ச்சி விதும்பல்
130. நெஞ்சொடு புலத்தல்
131. புலவி
132. புலவி நுணுக்கம்
133. ஊடல் உவகை







கார் நாற்பது (Kaarnarpadhu)
நாற்பது செய்யுட்களை உடைமையாலும், கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும் இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது.இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.


கரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல, இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க, வருவேன் என சொல்லிப்போன தலைவர், மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ? என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

வளைந்த குழையையுடையாய், சூரியனின் வெங்கதிர் குறைந்து, கார்பருவம் துவங்கி, நெடிய காடெல்லாம் மிக்க அரும்புகளைத் தர, நமது தலைவர் இப்பொழுதே வருவார் என்று மேகம் தூது அறிவித்தது என்று தோழி தலைவியிடம் கூறினாள்.


வரி நிறத்தினை உடைய பாதிரிப் பூக்கள் வாட, இள மணலையுடைய குளிர்ந்த காட்டில், ஆலங்கட்டிகள் புரள, வானம் இடி இடித்து, நேற்று முதல், ஒருத்தி தனித்திருப்பதால், அவளை வருத்துவதற்காக மழை பெய்தது.

கூத்தாடும் மகளிர் போல மயில்கள் அழகுபெற, கொன்றைகள் அழகு பெற பூத்தன. பாடுகின்ற வண்டுகளும் அப்பூக்களின் மீது நிற்கும். மூங்கில் போன்ற தோளை உடையவளே! இப்பருவமானது வாடுகின்ற நின் பசலைக்கு மருந்தாகும்.

அம்பு போலும் மையுண்ட கண்களையுடையாய்! பவழம் சிந்தியவைபோலக் காடுகள் இந்திர கோபங்கள் பரக்குந் தன்மை உடையவையாயின. ஆதலால் பிறர் கூறும் பழிக்கு அஞ்சிப் பொருள் தேடச் சென்ற தலைவர், மீண்டும் வருதல் பொய்யல்ல; மெய்யாம்.




ஐந்திணை ஐம்பது (Iiynthinaiiympadhu)

இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது. இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார்.


மெய்யம்மையான இலக்கப் புள்ளி யிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள மாறன் பொறையன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற புலவர் பெருமான், மக்கட் பண்புகளை, ஆராய்ந்தறிய அவாவிக் கொண்டிருக்கும் படியான, உயர்ந்தோராகிய உலகமக்கள், நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, நன்குணரும்படியாக, அகப்பொருட்டுறைகள் பலவற்றை சேர்த்து, செய்யுள் வடிவமாக இயற்றிய, முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்தொழுக்கங்களினையும் தம்முள் அமைத்துக் கொண்டுள்ள ஐம்பது செய்யுட்களையும், விருப்பத்துடன், படித்து அறியாத மக்கள், செவ்வையான தமிழ் மொழியின் பெரும் பயனை, அடையப்பெறாதவர்களாவார்கள்.

1. முல்லை

இடம் - காடும் காடு சேர்ந்த இடமும்
ஒழுக்கம் - ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய்
இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார். 1


"(தலைவியே!) மல்லர்களை அழித்த திருமாலின் கரிய நிறம் போன்று கருத்து எழுந்து சிறப்புப் பொருந்திய கடம்ப மரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய முருகப் பெருமானுடைய வேலாயுதத்தைப் போல் மின்னி விளங்குகின்ற மூன்று கோட்டைகளாய் நின்ற அரக்கர்களை அழித்த சிவபெருமானுடைய மாலைபோல் பூத்து இப்பொழுது மயங்கி வெற்றியைத் தரும் கார்காலம் வந்துவிட்டது. ஆதலின் நம் தலைவர் இன்றே வந்துவிடுவார். நீ வருந்த வேண்டாம்" என்று தலைமகளுக்குத் தோழி கூறினாள்.

அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி
மணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி !
கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்
பீர்நீர்மை கொண்டன தோள். 2


"மென்மையான சொற்களைப் பேசும் தோழியே! அழகிய மயில்கள் கூவியழைக்கும்படி இடித்து முழங்கிப் பெரிய மலைகளில் படிந்து மழைபெய்யும் போல் காணப்பட்ட கார்மேகத்தை நான் காணும்போது ஆற்றாமை மிகுந்து என் தோள்கள் பீர்க்கம்பூ நிறத்தில் பசலை பெற்று விளங்கின" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

மின்னும் முழக்கும் இடியும்மற் றின்ன
கொலைப்படை சாலப் பரப்பிய முல்லை
முகைவென்ற பல்லினாய்! இல்லையோ? மற்று
நமர்சென்ற நாட்டுள்இக் கார். 3


"தலைவியே! மின்னலும், இடியும், இடியின் முழக்கமும் இவைபோன்ற இன்ன பிறவுமாகிய பிரிந்தாரைக் கொல்லும் படைக்கலங்கள் மிகுதியாகப் பரப்புவதற்கு இல்லாமல் போய்விட்டதோ? முல்லைப் பூவினை வென்ற பற்களை உடைய பெண்ணே! நம்முடைய தலைவன் சென்ற நாட்டில் இக்கார்காலம் இல்லையோ?" என்று குறிப்பாகக் கேட்கிறாள்.

உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம்திறம்
வள்வார் முரசின் குரல்போல் இடித்துரறி
நல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்த(து)இக் கார். 4


"ஒளிமிக்க அழகிய வளையல் அணிந்த தலைவியே! இந்த மேகக் கூட்டமானது தோல்வாரினால் கட்டப்பட்ட முரசின் ஒலியைப் போன்று இடியினை வீழ்த்தி முழங்கித் தலைவரைப் பிரிந்த நங்கையரின் உள்ளம் வேறுபடுமாறு தோன்றித் தலைவரால் நமக்குக் கூறப்பட்ட இன்சொற்களைச் சிதைப்பது போன்று மிகுந்து காணப்படுகின்றது. நம் காதலர் நம்மியல்பை நினைத்துப் பார்க்க மாட்டாரோ? நிச்சயம் நினைப்பர். ஆதலின் இன்றே வருவார்" என்று கார்ப்பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி தேற்றினாள்.

கோடுயர் தோற்றம் மலைமேல் இருங்கொண்மூக்
கூடி நிரந்து தலைபிணங்கி - ஓடி
வளிகலந்து வந்துறைக்கும் வானம்காண் தோறும்
துளிகலந்து வீழ்தருங் கண். 5


என் இனிய தோழியே! உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடி, ஒன்றோடொன்று மோதி, காற்றோடு கலந்து மழைபொழியத் துடிக்கும்படியான, வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்.



திணைமொழி ஐம்பது (Thinaimozhiiympadhu)

இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என ஐந்திணை ஐம்பதிலிருந்து வேறுபட்டு பெயர் பெற்றுள்ளது. இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார்.

1. குறிஞ்சி


புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்
புகைகொடுக்கப் பெற்ற புலவோர் - துகள்பொழியும்
வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா
யானை யுடைய கரம். 1


புகழ்மிகுந்த சந்தனங்களை வெட்டிப் புல்லும்படி எரியூட்டியமையானே புகையினைக் கொடுக்கப் பெற்ற அண்டர் துகள் பொழிகின்ற வானளவு முயர்ந்த வெற்பனே! இரவின்கண் வரல்வேண்டா, நீ வருகின்ற வழி யானை வருகின்ற சுரங்களாதலான்.

கணமுகை கையெனக் காந்தள் கவின
மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்
விறன்மாலை நாட! வரிஅரிதாங் கொல்லோ
புனமும் அடங்கின காப்பு. 2


திரட்சியையுடைய மொட்டுக்களைக் கையென்று கருதும்படி காந்தள் அழகுபெற அரும்ப, அதன் மணத்தையுடைய முகைகளென்று கருதி மந்திகள் கொண்டாடுகின்ற மிகுதியையுடைய மலை நாடனே! நீ இங்கு வருதலரிதாங்கொல்லோ; புனங்களும் தினையரியப்பட்டுக் காவலொழிந்தன.

ஓங்கல் இறுவரைமேல் காந்தள் கடிகவினப்
பாம்பென ஓடி உரும்இடிப்பக் கண்டிரங்கும்
பூங்குன்ற நாடன் புணர்ந்தஅந் நாள்போலா
ஈங்கு நெகிழ்ந்த வளை. 3


மலையினது பக்கமலைமேற் காந்தள் புதிதாக அழகுபெறுதலால், அவற்றின் முகைகளைப் பாம்பென்று கருதிச் சென்று உருமு இடித்தலான், அவற்றைப் பிறர் கண்டிரங்குகின்ற பூங்குன்ற நாடன் புணர்ந்த அந்நாள் போலாவாய், இக்காலத்து நெகிழ்ந்து கழன்ற வெள் வளைகள்.

ஏனல் இடத்திட்ட ஈர்மணிகொண்(டு) எல்லிடைக்
கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்
வானுயர் வெற்பன் வருவான்கொல் என்தோழி
மேனி பசப்புக் கெட. 4


ஏனலிடத்திட்ட குளிர்ந்த மணிகளைக் கொண்டு இரவின்கட் குறவர்மக்கள் தங்குளிர் நீங்கக் காயும் வானின் கண்ணே யுயர்ந்த வெற்பன் ஈங்கு வருவான் கொல்லோ? என்னுடைய தோழி மேனியிற் பசப்புக்கெட..

விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்
வரையிடை வாரல்மின் ஐய! உரைகடியர்
வில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்
கல்லிடை வாழ்நர் எமர். 5


விரை கமழாநின்ற சாரலின்கண் விளைபுனங் காப்பர்கள், இம்மலையின்கண் வரவேண்டா ஐயனே! கடுங்சொல்லினர், வில்லினர், வேலர், விரைந்து செல்லுமம்பினர் மலையின்கண் வாழ்வாராகிய வெமர்.





ஐந்தினை எழுபது (Iynthinaiezhupadhu)

ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளதால், ஐந்திணை எழுபது என பெயர் பெற்றது.இந் நூலை அருளியவர் மூவாதியார்.

கண்ணை நெற்றியிலுடைய தலையினையுடையவனும். இவ்வுலகமாகிய அண்டத்தினைத் தனது வடிவமாகக் கொண்டவனும் எல்லாவற்றிற்கும் முதற் காரணனாய் உள்ளவனும் ஆலகால விஷமாகிய நஞ்சு பொருந்தியிருக்கும்படியான கழுத்தையுடையவனுமான சிவபெருமான் பெற்றெடுத்த யானைமுகக் கடவுள் யாம் விரும்பும் பொருள்கள் எல்லாவற்றையும் நன்றாக முடிவுபெறச் செய்து எங்களுக்கு (இவ்வுலகத்தே) பொருந்தியுள்ள கல்விப்பொருள்கள் எல்லாவற்றையும் கொடுக்கும்.

நூல்


1. குறிஞ்சி


அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
கவரி கடமா கதூஉம் படர்சாரல்
கானக நாட! மறவல் வயங்கிழைக்(கு)
யானிடை நின்ற புணை. 1


(பழைய வுரை) அவரை பொருந்திய கதிரையுடைய பசுந்தினையைக் கவரிமடமா கதுவாநின்ற படர்ந்த சாரலினையுடைய கானகநாடனே! மறவாது நினைப்பாயாக; வயங்கா நின்ற அணியினையுடையாட்கு யான் நடுவுநின்ற புணையினை.

மன்றத் துறுகல் கருங்கண முசுஉகளும்
குன்றன நாடன் தெளித்த தெளிவினை
நன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளி
ஒன்றுமற்(று) ஒன்றும் அனைத்து. 2


(ப-ரை.) மன்றங்களிலே நெருங்கிய கல்லின்கண் கருங்கண் முசுக்கள் குதிபாயுங் குன்றகநாடன் என் மனத்தைத் தெளிவித்த தெளிவினைப் பிழையாதென்று தேறினேற்கு அவன் செய்த தலையளி யொன்று ; அவ் வொன்றும் அப்பெற்றித்தாய்ப் பழுதாகாது.

மன்றப் பலவின் களைவிளை தீம்பழம்
உண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந்(து)
ஆமா சுரக்கும் அணிமலை நாடனை
யாமாப் பிரிவ(து) இலம். 3


(ப-ரை.) மன்றின்கண் நின்ற பலவின் சுளைமுதிர்ந்த இனிய பழத்தைத் தின்றின்புற்று வந்து ஆமாவின் முலையை மந்தி வருட அவ்வாமாத் தன் கன்றிற்குப்போல அன்பு பட்டுப் பாலைச்சுரக்கும் அணிமலைநாடனை யாமுளேமாகப் பிரிவதிலம்.

சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி
வலியாகிப் பின்னும் பயக்கும் மெலிவில்
கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மை
நயந்திகழும் என்னும்என் நெஞ்சு. 4


(ப-ரை.) அமைந்தாருடைய நட்புச் சிதைதலின்றி நிலைபெற்று அடைந்தார்க்கு வலியாகி மறுமையின்கண்ணும் பயனைச் செய்யும்; அதுபோல, நீராற்றிகழாநின்ற சோலையையுடைய மலைநாடனுடைய நட்பு மெலிவின்றி இன்பத்தைத் திகழ்விக்கும் என்னாநின்றது என்னெஞ்சு.

பொன்னிணர் வேங்கை கமழும் நளிசோலை
நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு
நின்னல(து) இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்(து)
இன்னுயிர் தாங்கும் மருந்து. 5


(ப-ரை.) பொன்போன்ற பூங்கொத்தையுடைய வேங்கை கமழாநின்ற குளிர்ந்த சோலையையுடைய நன்மலை நாடனே! மறவாதொழிவாயாக ; வயங்கிழைக்கு நின்னல்லது ஓரரணில்லையாதலால், நின்கண்ணோட்டத்தான் இன்னுயிரைத் தாங்கு மருந்து நல்காயோ?




திணைமாலை நூற்றைம்பது (Thinaimaalainootruiympadhu)


ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார்.


1. குறிஞ்சி

நிலம் : மலையும் மலைசார்ந்த இடமும்.
ஒழுக்கம் : புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.

நறைபடர் சாந்தம் அறஎறிந்து, நாளால்
உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல் - பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்!- காணீரோ
ஏமரை போந்தன ஈண்டு. 1


(பழையவுரை) நறைக் கொடி படர்ந்துயர்ந்தசந்தனங்களை அற வெட்டி நல்ல நாளால் மழை பெய்யுங்காலத்தையேற்றுக்கொண்டு வித்தி முதிர்ந்த ஏனலின் கண்,பிறையை யேற்றுக்கொண்டதொரு தாமரை மலரைப்போலும் வாண்முகத்தையும், தாழ்ந்த குழலையு முடையீர்!கண்டிலீரோ? ஏவுண்ட மறை போந்தனவற்றை இவ்விடத்து.

சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி
இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை
உதணால் கடிந்தான் உளன். 2


நறவ மலரையுஞ் சுனை நீலமலரையும் அசோக மலரையும் கொய்துமுடித்து நின்மகள்குழலின் மேலே ஆராய்ந்து புனைவதுஞ் செய்து பின்னொருநாட்டுணிந்துபரணாற் காவலமையாத ஈர்ங்கடா யானையை மொட்டம்பாற்கடிந்து காத்தும் இப்பெற்றி யுதவி செய்தான்ஒருவனுளன்.

சாந்தம் எறிந்துழுத சாரல் சிறுதினைச்
சாந்தம் எறிந்த இதண்மிசைச் - சாந்தம்
கமழக் கிளிகடியும் கார்மயில் அன்னாள்
இமிழக் கிளியொழா ஆர்த்து. 3


சந்தனங்களை வெட்டியுழுத சாரலின்கண்,வித்திய ஏனலின்கட் படிந்த கிளிகளை, சந்தனங்களைக்காலாக எறிந்து செய்த, பரண்மிசை யிருந்து, பூசியசாந்தம் எங்கும் பரந்து கமழ உலாவி, கடிகின்றகார்மயி லன்னாள் தான் வாய்திறந்து 'ஆயோ' என்றியம்புதலாற் றம்மின மென்று கிளிகள்ஆர்த்துப்போகா.

கோடா புகழ்மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினும் காணேன்போர் - வாடாக்
கருங்கொல்வேல் மன்னர் கலம்புக்க கொல்லோ
மருங்குல்கொம் பன்னாள் மயிர். 4


கோடாத புகழையுடைய மாறன்மதுரை யனையாளை அடாத பண்ணையுளுங் காண்கின்றிலேன்;போரின்கண் வாடாத கருங்கொற் றொழிலையுடைய வேல்மன்னர் அணிகலமாகிய முடிகூடின கொல்லோ! இடை யாற்கொம்பையனையாள் மயிர்கள்.

வினைவிளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்
பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் - தினைவிளைய
மையார் தடங்கண் மயிலன்னாய்! தீத்தீண்டு
கையார் பிரிவித்தல் காண்! 5


கெடாத பனை யென்னுமளவு போன்ற அளவினையுடைய இன்ப விளைவினை நாமெண்ணியிருப்ப அதற்கிடையூறாக, நல்வினை விளையச் செல்வம்விளைவது போலப், பாத்தியின்கட் டினைவிளைதலான்,மையார் தடங்கண் மயிலன்னாய்! தினைகொய்ய நாட்சொல்லிவேங்கையார் நம்மை இங்குநின்றும் பிரிவித்தலைப்பாராய்.



கைந்நிலை (Kainilai)


'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றிக் குறிப்பிடுவதால் கைந்நிலை எனப்பட்டது. இந் நூலைச் இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்.


1. குறிஞ்சி


வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல்
நிகரில் மடமான் எரியும் அமர் சாரல்
கானக நாடன் கலந்தான் இவன் என்று
மேனி சிதையும் பசந்து. 1


தினைக்கதிரைத் தின்பதற்காகத் தினைத்தாளின் மேல் ஏறுங் கிளிகளை யோட்டுகின்ற தினைப்புனத்தின்கண் ஒப்பில்லாத இளமையான மான்கள் நெருங்கித் திரியும் விரும்புகின்ற மலைச்சாரலில் காட்டிற்கு உள்ளாகிய நாட்டையுடையவன் என்னைப் புணர்ந்தான் அவ்வாறு புணர்ந்த தலைவன் இஞ்ஞான்று அருகில் இல்லாது பிரிந்தான் என்பதையறிந்து என் உடல் பசலை நிறமாகி எழிலழிந்தது, (என்று தலைவி தோழிக்குக் கூறினாள்.)

வரைவு நீட்டித்த வழி ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்

வெந்த புனத்துக்கு வாச முடைத்தாகச்
சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலைநாடன் வாரான்கொல் தோழிஎன்
நெஞ்சம் நடுங்கி வரும். 2


என்பாங்கியே! நெருப்பால் வெந்து கருகிய காட்டிற்கு மணம் உண்டாகும்படி மலையினின்று வரும் அருவியானது சந்தனக் கட்டைகளை ஏந்திக்கொண்டு வந்து போடுகின்ற வஞ்சகமுள்ள மலைநாட்டுத் தலைவன் இனிவாரானோ, வருவனோ யான் அறியேன் என் நெஞ்சம் நடுங்கிவரும். எனது மனம் அது குறித்து நடுங்கி வருகின்றது, (என்று கூறினள் தலைவி).

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர்
காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும்
பாசம்பட் டோடும் படுகல் மலைநாடற்கு
ஆசையின் தேம்பும் என் நெஞ்சு. 3


பாசம் படர்ந்த பசுமையான நீர்ச் சுனையின் பக்கத்தில் வழியும் பழமையான நீரில் மிகுந்த சினமுடைய மந்திகள் பழகி அந்நீரில் வருங் கனிகளை யெடுத்துத் தின்று சுவைத்திருக்கும் இயல்புடைய பாசமுண்டாக நீரோடுகின்ற உயர்ந்த கற்களையுடைய மலைநாட்டுத் தலைவன் பொருட்டு, என் நெஞ்சு ஆசையில் தேம்பும் என் நெஞ்சமானது காதலால் வருந்துகின்றது, (என்று தோழியினிடம் கூறினள்).

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

ஓங்கல் விழுப்பலவின் இன்பம் கொளீஇய
தீங்கனி மாவின் முசுப்பாய் மலைநாடன்
தான்கலந்து உள்ளாத் தகையானோ நேரிழாய்
தேங்கலந்த சொல்லின் தெளித்து. 4


என்தோழீ! உயர்ந்த சிறந்த பலா மரத்திற் பழுத்த இன்பத்தைத் தருகின்ற இனிய கனியை மாமரத்திலிருந்து கருங் குரங்குகள் பாய்ந்து கவரும் மலைநாடன் ஆகிய தலைவன் இனிமை பொருந்திய சொற்களால் சூளுரை கூறித் தெளிவித்து முன் தானே வந்து கூடிப் புணர்ந்து பின்பு அதனை நினையாது மறக்குந் தன்மையுடையவனோ, (கூறுக என்றாள்).

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

இரசங்கொண்டு இன்தேன் இரைக்கும் குரலைப்
பிரசை இரும்பிடி பேணி வரூஉம்
முரசருவி ஆர்க்கும் மலைநாடற்கு என்தோள்
நிரையம்எனக் கிடந்த வாறு. 5


கரிய பெண் யானைகளானவை இனிய வண்டுகள் இன்பத்தைக் கொண்டு பாடுகின்ற ஒலியைக் கேட்டு தேன் கூட்டினை விரும்பி வருகின்ற முரசு முழங்குவது போல அருவி யாரவாரஞ் செய்கின்ற மலை நாட்டையுடைய என் தலைவனுக்கு எனது தோளிற் கூடும் இன்பமானது நரகம்போல நினைக்குமாறு இருக்கும் இயல்பு, (என்ன காரணம் என்று கூறினள்).



களவழி நாற்பது (Kalavazhinarpadhu)

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும்.களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர்.
நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர்
வாள் மாய் குருதி களிறு உழக்க, தாள் மாய்ந்து,
முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி, பிற்பகல்
துப்புத் துகளின் கெழூஉம் - புனல் நாடன்
தப்பியார் அட்ட களத்து. 1


சோழன் குற்றங்கள் செய்த பகைவரை வீழ்த்திய போர்க்களத்தில் சூரியன் தோன்றிய இளங்காலையில் பகைவர் மீது வாள் ஆழமாகப் பதிந்தது. அதனால் வழிந்த இரத்தத்தைப் போர்க்கள யானைகளின் கால்கள் கலக்கின. முற்பகலில் குழம்பைப் போன்ற சேறாக மாறியது. பிற்பகலில் வெயில் காய்ந்து யானைகளால் தூளாகிப் பிறகு பவளப் புழுதி போல் எங்கும் பறந்தும், பரவியும் இருக்கும்.

ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானைக் கீழ்ப்
போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி,
கார்ப்பெயல் பெய்த பின், செங் குளக் கோட்டுக் கீழ்
நீர்த் தூம்பு நீர் உமிழ்வ போன்ற - புனல் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து. 2


சோழன் ஆராவாரித்துப் போரிட்ட போர்க்களத்தில் தரை மீது கிடந்த யானையின் கீழே, மூடுதுணியும் இல்லாத போர்முரசு சிக்கிக் கொண்டது. அந்த முரசின் உள்ளே புகுந்த யானையின் இரத்தம் வெளியே வருகிறது. அவை மழைநீர் நிரம்பிய நீர்க்குளத்தின் கரையின் கீழே உள்ள மதகுகள் சிறிது சிறிதாகத் தண்ணீரை உமிழ்ந்து வெளிப்படுத்துவன போல் இருந்தது.

ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்,
இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்-
மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து. 3


இடிபோன்ற போர் முரசினை முழங்கி வெற்றி பெற்ற சோழனின் போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்தத்தைத் தங்கள் நடையால் சேறாக்கிச் சோர்ந்த வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்கள்.

உருவக் கடுந் தேர் முருக்கி, மற்று அத் தேர்ப்
பருதி சுமந்து எழுந்த யானை, இரு விசும்பில்
செல் சுடர் சேர்ந்த மலை போன்ற - செங் கண் மால்
புல்லாரை அட்ட களத்து. 4


திருமால் போன்று சிவந்த கண்களை உடைய சோழன் பகைவர்களை அழித்த போர்க்களத்தில் தேரின் சக்கரத்தைத் துதிக்கையில் தூக்கி நிற்கிறது யானை. அது, விரிந்த வானத்தில் செல்லும் சூரியன் மாலையில் ஒரு மலையைச் சேர்ந்தது போல் இருந்தது.

தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்
குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,
குக்கில் புறத்த; சிரல் வாய - செங் கண் மால்
தப்பியார் அட்ட களத்து. 5


சிறந்த அம்புகளாலும், பிற கருவிகளாலும் புண்ணாக்கப்பெற்ற உடலிலிருந்து வழியும் இரத்தத்தைக் குடித்த கரிய காகங்கள் நிறம் மாறின. செம்போத்துப் பறவைகள் போல் உடல் மாறின. மீன்கொத்திப் பறவையின் சிவந்த அலகைப் போல் மூக்குகளையும் பெற்றவைகளாயின.






இன்னிலை (Innilai)

இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இந் நூலைச் செய்தவர் பொய்கையார்.

கடவுள் வாழ்த்து


வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத்து அமரிய கொழுவேல்
கூற்றம் கதழ்ந்தெறி கொன்றையன்
கூட்டா உலகம் கெழீஇய மலிந்தே.
- பாரதம் பாடிய பெருந்தேவனார்.


நூல்


1. அறப்பால்


அன்று அமரில் சொற்ற அறவுரை வீழ் தீக்கழுது
மன்றுயர்ந்து போந்த வகை தேர்மின் - பொன்றா
அறம் அறிந்தோன் கண்ட அறம் பொருள் கேட்டல்லல்
மறமொறுக்க வாய்த்த வழக்கு. 1

பொருள் விழைவார் போற்றார் உடல்நலம் நம்மை
அருள் விழைவார் அதே முழுஎவ்வம் பாய்நீல்
இருள் இழையார் வீழ்வார் மேல் பால் ஆக்கார் ஆமாறு
அருள்இழையார் தாமும் அது. 2

கோலப் புறவில் குரல்கூவிப் புள்சிமிழ்த்தோன்
காலில் தளைபரப்பச் சீர்ஒலிக்கும் - மாலின்
விரிநிழல் தாம் எய்தார் தீப்பழுவத்து உய்ப்பர்
உரிமை இவண்ஓரா தார். 3

கழிவிரக்கம் கொள்ளார் கதழ் வாளார் வேர்த்துப்
பழிமுறுகக் கோடார் பயன் பேர்த்து - அழிமுதலை
இல்லம் கொண்டு ஆக்கார் இடும்பைத் தளை தணப்பர்
நல்லறனை நாளணி கொள்வார். 4

திரைத்த விரிக்கின் திரைப்பின் நாவாய்போல்
உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த
பயன்தவா செய்வார் சிலர்ஏதம் நெஞ்சத்து
இயன்றவா செய்வார் பலர்.

எழுதியவர் : கவிராஜா (12-Mar-18, 2:31 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 16773

மேலே