கோடையின் கொடையா தென்றலின் நடையா மரம்

என் மேனி சிலிர்க்க
தன் மேனி யாட்டி
தென்றலிசை மீட்டி
பூமகள் குடையாய் நீட்டி
நின்ற மரமே எங்குள்ளாய்?
வெந்தழல் பாயுது தேகத்தில் - மனம்
நின்நிழல் தேடுது ஞாலத்தில்
நின்தலை கொய்த சினத்தில்
நின் மென்தலை ஆடாதேனோ?
மரமே நீ மாளும் சோகமோ
கார்மேகம் கூடா வானமோ
காலையும் புலர்ந்திடா பறவை கீதமோ
நாளைசந்ததிக்கு இயற்கை காணொலி காட்சியாகுமோ!
மரமே நீ உயிர்த்தெழு!
பொங்கியே பாயும் நதியெல்லாம்
மங்கியே சாகும் மெய்சிதறல் போல்
முத்துக்கள் மிளிரும் மாந்தன்தேக வியர்வை
வறள் வெடிப்புகள் வெடித்திடும் நதியோடை!
அருமருந்தே நீ எங்குள்ளாய்?
தென்றல் மெட்டுக்கள் போடும் இனியோசை - வழியெங்கும்
எம்தேகங்கள் பேசிடும் ஆனந்ந பாஷை
பறவை சிட்டுக்கள் பாடிடும் பாடல்
எம்தேக களைப்புக ளோடிடும் வான்மேசை
கீதமே நீ எங்குள்ளாய்?
கோடைக்கு நீ கொடையா!
இயற்கைக்கு சேனை படையா!
மாந்தன் வாழ்வுக்கு நீ தடையா
பூமகள ழிவுக்கு நீ விடையா?
ஓர் விதை விதைத்தேன் என்வலிகளை உதைத்தேன் இதோ
சின்னஞ் சிறுகிளையே நற்சேற்றினில்
விதைத்தேன் உனையே
எழில் வண்ணமிகு கலையே காணத்தூறிடும் நீரிடையே
நின் சின்னஞ்சிறுத் தென்றல் எம்சேய்களாடிடும் ஊஞ்சல்
பசுமையெழில் நகையோ விழிகள் பருகிடுமமிர்தம்!
மரங்கள் நடுவோம்! வசந்த தென்றலை வாழ்வினில் சேர்ப்போம்!
இயற்கையோடு வாழ்வினை பிணைப்போம்! இன்பத்தின் விலாசங்களாய் நாம் இருப்போம்!
அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
குறைந்தது ஒரு மரத்தை நம் வீடுகளில் வளர்ப்போம்!
இடமில்லாதோர் ஒரு பூந்தொட்டியாவது வைப்போம்!
என்றும் அன்புடன் உங்கள் நண்பன்
ச. செந்தில் குமார்