காலக்கண்ணாடி-அசோகமித்திரன் எழுதிய நூலிலிருந்து
“காலக்கண்ணாடி” –அசோகமித்திரனின் எழுதிய புத்தகத்திலிருந்து சில நிகழ்ச்சி குறிப்புகள் !
டால்ஸ்டாய் பற்றி ! சில வரிகள்
டால்ஸ்டாய் எந்த நாவலையும் முழு மூச்சோடு உட்கார்ந்து எழுதியதில்லை. பல முறை தடைபட்டு, ஒத்தி போட்டு, அநேக திருத்தங்கள் செய்த பிறகே தன் படைப்புகளை அவர் ஒருவாறு பிரசுரத்திற்கு அனுப்புவார். அவருடைய “போரும் சமாதானமும்” வெளி வர ஆறு வருடங்கள் எடுத்துக்கொண்டது. “அன்னா கரினீனா” முடிய நான்கு வருடங்கள் ஆனது-
“ரிஸரக்ஷன்” நாவலை அப்பொழுது ரஷ்யாவில் வாழ்ந்து சொல்லொண்ணா கொடுமைகளை சந்தித்த “டுகோபர்ஸ்” இன மக்களின் நிவாரண நிதிக்காக 1898 ம் ஆண்டில் எழுத தீர்மானித்தார். அவர் அதை தொடராக எழுத உலகம் முழுக்க (பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, இந்த மொழிகளில் வெளியாக ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் தொடர் வெளியாக, வெளியாக, குழப்பமும், அவர் பெயரை சொல்லி பல தொடர்களை உள் நுழைத்த பல்வேறு பதிப்பகத்தார்கள், வாசகர்களை குழப்பமான மனநிலைக்கு கொண்டு சென்றனர். முடிவில் அவர் வெளியிட்ட தொகுப்பு என்று உறுதி செய்யப்பட்டு வெளியிட்ட ஆண்டு 1936 (கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள்)
டிசம்பர் 1965
ஒரே மொழியால் பிரிக்கப்பட்ட நாடுகள் !
1945-52 ல் அமெரிக்க படங்கள் இங்கிலாந்தில் பிரமாதமாய் ஓடும். பிரிட்டிஷ் படங்கள் அமெரிகாவில் சாதாரண அளவில் கூட ஓடாது (ஒரு சில படங்கள் தவிர). இதனால் திரைப்பட துறையை சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் (கதாபாத்திர கேரக்டர்கள் முதல் தொழில் நுட்ப பணியாளர்கள்) வரை அமெரிக்காவுக்கு செல்வதை விரும்பினார்கள். அங்கு திரப்பட்த்துறையில் கோலோச்ச விரும்பினார்கள். இதனால் இங்கிலாந்தில் பெரும் புகைச்சல் கிளம்பியது.
எழுத்து துறையை பொறுத்த மட்டில் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட அமெரிக்க எழுத்தாளர்கள் தங்கள் நாட்டிலேயே பெரும் பெயரும், செல்வமும் அடைந்தாலும், இங்கிலாந்தில் கிடைக்கும் பெரும் வரவேற்பையே விரும்பினார்கள். ஆனால் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தின் போதிலிருந்தே சிறிது சிறிதாக வளர தொடங்கிய தன்னம்பிக்கையும் சுயேச்சையாக ஒரு புது பாராம்பர்யத்தை உண்டு பண்ண வேண்டுமென்ற ஆர்வமும் இன்று பெருமளவுக்கு நிறைவேற்றி விட்டனர். மொழி ஆங்கிலமேயாயினும், அமெரிக்க இலக்கியம் ஒரு தனித்துவமும் விரிவும் கொண்டதாக இருந்து வருகிறது.
இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஒரே மொழியால் பிரிக்கப்பட்ட இரு நாடுகள் என்று பெர்னாட்ஷா கூறியதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டு.
ஜூலை 1969.
நாடகங்கள் காலம் !
இது நாடகங்கள் காலம், எல்லா எழுத்தாளர்களும் நாடகம் எழுதி வருகிறார்கள், நான்கு திசைகளிலிருந்தும் எழுத்தாளர்களிடம் இருந்து நாடகங்கள் வந்து குவிகின்றன.. பம்பாயில் நடந்த நாடகப்போட்டியில் “சூடாமணி” நாடகம் எழுதி பரிசு பெற்றார். இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் எழுதி பெரும் வெற்றி பெற்றார். முத்துச்சாமி நாடகம் எழுதி அச்சில் வந்துள்ளது. அம்பையின் நாடகம் அச்சில் வந்துள்ளது.
“வெல்கம் எகெய்ன்” என்றொரு புது தமிழ் நாடகம், நல்ல நடிப்பு கொண்ட நாடகம். பூரணம் விசுவநாதனால் நன்றாக நடிக்காமல் இருக்க முடியாது. கெளசல்யா என்னும் நடிகை.அவர் தோற்றம்-பேச்சு, நடை- பாவனையில் இப்படியும் உருமாறி ஒரு பெர்மான்பன்ஸ் தர முடியுமா என்று வியக்க வைக்கும் நடிப்பு.
சென்னையில் இலக்கிய கூட்டம் நடந்தால்தான் அது இலக்கிய கூட்டமா? நாங்களும் நடத்துகிறோம் என்று கோவை மக்கள் கிளம்புகிறார்கள்..சென்னை இலக்கிய சிந்தனை மாதத்திற்கொரு சிறுகதைக்கு பரிசு தருவது போல (தில்லை நகர், கோவை-26) மாதத்தில் சிறந்த கவிதைக்கு பரிசு தர போகிறது. கு.அழகிரிசாமி இலக்கிய வட்டம்” 20ம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்தில் அமரர் அழகிரிசாமியின் சுவடுகள் பற்றி திறனாய்வு கட்டுரைகளை வரவேற்கிறது. மூன்று பரிசுகள் உண்டு. அனுப்ப வேண்டிய முகவரி சு.அரங்கராசன், முத்து நகர், கோவை-26
செப்டம்பர் 1972.
செல்லப்பாவுக்கு மணி விழா
இந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் சில எழுத்தாளர்கள் மணி விழாவை காண நேர்ந்தது. ந.பிச்சமூர்த்தி, பின்னர். கி.வ.ஜ., பின்னர், ம.பொ.சி. இவர்கள் இருவருக்கும் விமரிசையாக நடந்தது. இப்பொழுது செல்லப்பாவுக்கு. மணிவிழா. மக்கள் எழுத்தாளர் சங்கம், சென்னை மத்திய நூலக கட்டிடத்தில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தது.
செல்லப்பாவின் இலக்கிய வாழ்க்கையில் பல காயங்கள் உண்டு. இலட்சிய ஆர்வம் கொண்ட இளமைக்காலம், காந்தி நடத்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபாடு. நாடு விடுதலை பெற்று, காந்தியும் மறைந்த பின்னர் இப்பொழுது முழு மூச்சாய் இலக்கிய ஈடுபாடு. அதன் விளைவாக “வாடி வாசல்” ஜீவனாம்சம்” என்ற இரு நாவல்கள். “எழுத்து” பத்திரிக்கை.
அக்டோபட் 1972
அயல் நாட்டு இலக்கிய எழுத்தாளர்களும், அவர்களின் இலக்கிய விமர்சனமும்
1970க்கு பிறகு தமிழ்நாட்டில் சில மாதங்கள் தங்கி அதிக கவனத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளானவர் “டாக்டர் ஆல்பர்ட் பிராங்க்ளின்” மத்திய கால பிரெஞ்சு இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பின், அமெரிக்க இலக்கியத்தையும், தமிழ் மொழி இலக்கியத்தையும் ஆராய முற்பட்டிருக்கிறார்.
1971 ம் ஆண்டு இலக்கிய சிந்தனை தமிழ்ப்புத்தாண்டு தின விழாவில் இவர் படித்த ஆய்வு கட்டுரை மீது தமிழ்நாடெங்கும் காரசாரமான விவாதம் நடந்து வந்திருக்கிறது. டாக்டர் பிராக்ளின் கான்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் கழக் கிழக்காசிய கேந்திரத்தில் அமெரிக்க மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கிறார்..
அடுத்து ரஷ்யர் ஒருவர். திருமதி.ஸ்வெத்லானா துருப்னிகோவா, இள வயதினர், பதினான்கு வயது சிறுவனுக்கு தாய். கீழ்த்திசை மொழியியலில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றவர். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து தங்கி ”இன்றைய இந்தி கவிதை” பற்றிய ஆய்வுகளை சமர்ப்பித்து டாக்டர் பெற்றவர். தமிழ் மீதும் ஆர்வம் கொண்டு, அதை திறம் பட பயின்று இன்றைய மாஸ்கோ சர்வதேச உறவு கல்லூரியில் ரஷ்ய மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கிறார்..
தற்சமயம் இந்தியா வந்து அவர் எழுதிய தமிழ் புத்தகத்தை செழுமை படுத்தவும், போதிய ஆதாரங்களை திரட்டவும், தகவல்கள் சேகரித்து வருகிறார். எழுத்தாளர்களையும் சந்திக்கிறார். அவர் சந்தித்த ஒரு சில எழுத்தாளர்கள், அகிலன், ரகுநாதன், ஜெயகாந்தன், எழில் முதல்வன், சரஸ்வதி ராம்நாத், சுந்தா, சி,ராஜேந்திரன், இளவேனில் (கார்க்கி ஆசிரியர்) எம்.கே.ராமசாமி (தாமரை) இராம கண்ணப்பன், ஞானக்கூத்தன், “இன்குலாப்” இதிலிருந்து திருமதி துருப்னிகோவின் பார்வை வீச்சு புலப்படும்
ஜூன் 1973
கு.பா.ரா.
மதுரையிலிருந்து வெளி வரும் “வைகை” பத்திரிக்கையின் ஆகஸ்டு செப்டம்பர் 1979 இதழ் கு.ப.ரா.நினைவு மலராக வெளியிட்டிருக்கிறது. கு.பா.ராவின் கட்டுரைகளுடன் ந..பிச்ச மூர்த்தி, இலங்கையர்கோன், தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், எம்.எஸ்.வி குமார், என் சிவராமன் ஆகியோருடைய கட்டுரைகளும் உள்ளன. இவை கு.பா.ரா என்னும் மனிதர் பற்றியும், அவருடைய எழுத்துக்கள் பற்றியும் செய்திகள் கொண்டதாயுள்ளன.
கு.பா.ரா.எழுத்தின் முத்திரை. அவர் பெரிய சோகங்களை சிறு சிறு கதைகளாக எழுதினார். காலம் அவரை செயலாற்ற இன்னும் சில ஆண்டுகள் வைத்திருந்தால் அவர் இன்னும் விரிவான தளத்தில் மனித சோகத்தை, குறிப்பாக நடுத்தர சமூகத்தில் பெண்ணாக உதிப்பதினாலேயே கவ்விக்கொண்டுள்ள சோகத்தை வடித்து தந்திருக்க கூடும்.
வழக்கம்போல தமிழ் புத்தாண்டு தினத்தன்று சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இலக்கிய சிந்தனையின் ஆண்டு விழா சிறப்பாக நடந்தன.
1979ம் ஆண்டுக்கான நூல் விருதை “கரிப்பு மணிகள்” ராஜம் கிருஷ்ணன் அவர்களும் “பிறகு” எழுதிய பூமணி அவர்களும் பெற்றார்கள். பி. எஸ்..ராமையா அவர்கள் 1979ம் ஆண்டு சிறந்த சிறுகதையாக மலர் மன்னன் எழுதி கணையாழியில் வெளியான “அற்ப ஜீவிகள்” சிறு கதையை தேர்ந்தெடுத்தார்.
விழாவுக்கு வந்திருந்த ஏராளமான எழுத்தாளர்களும் வாசகர்களும் தகழி சிவசங்கரன்பிள்ளை, மீ.ப. சோமு, ஆகியோருடைய சொற்பொழிவுகளையும், அப்துல் ரகுமான் பாடிய கவிதைகளையும் கேட்கும் வாய்ப்பை பெற்றார்கள். வரவேற்பு ப.லெட்சுமணன், நிகழ்ச்சிக்கு கவியரங்க சாயல் தந்தார்.
மே 1980
முடிவுரைக்காக அசோகமித்திரனின் முன்னுரையில் இருந்து
கணையாழி பத்திரிக்கையோடு அதன் தொடக்க இதழிலிருந்து 1988 வரை நான் தொடர்பு கொண்டிருந்த 23 ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரை,மற்றும் குறிப்புகளீலிருந்த தொகுப்பு ‘காலக்கண்ணாடி” ஒரு பத்திரிக்கை அது இயங்கும் சமூகத்தின் சம கால நடப்புகளின் இயக்கத்தையும் விளைவுகளையும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டவை. இவை.
இன்றைய கால இளம் வாசகர்களுக்கு இந்த “காலக்கண்ணாடியில்” இருந்து சிறிதளவு எடுத்து கொடுத்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் (ஏற்படுத்திக்கொண்டு) இந்த நூலை வாசகர்கள் வாசிக்க வேண்டும். நல்ல இலக்கிய சிந்தனை கண்டிப்பாய் உங்களுக்கு கிடைக்கும் என்று பரிபூரணமாய் நம்புகிறேன்.