தண்ணளியான் மன்பதை ஓம்பாதார்க் கென்னாம் - நீதிநெறி விளக்கம் 28
நேரிசை வெண்பா
கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி
புண்ணியத்தின் பாலதே யாயினுந் - தண்ணளியான்
மன்பதை ஓம்பாதார்க் கென்னாம் வயப்படைமற்
றென்பயக்கும் ஆணல் லவர்க்கு. 28
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
கண் பார்வையால் கருத்து அறிவித்து நேரிற் பார்ப்பது போலக் காதினால் செய்திகளை அறியும் அரசனுடைய பெருமையான செய்கை நல்வினையோடு சேர்ந்ததே ஆனாலும்,
குளிர்ந்த அருள்நெஞ்சத்தால் குடிமக்களை ஆளாத அரசர்க்கு கண்ணிற் சொல்லிச் செவியில் நோக்கும் அரசாட்சி முறை என்ன பயனாம்?
பேடிகளுக்கு வெற்றி தரத்தக்க வில், வாள், வேல் முதலிய போர்க் கருவிகள் என்ன பயனைத் தரும்?
விளக்கம்:
தன்கீழ் வேலை செய்வோர்க்கும் குடி மக்களுக்கும் ஏனையோர்க்கும் காரியங்களை வாயாற் சொல்லாமல் அக்கருத்தை அவர்கள் தம் பார்வையினாலேயே அறிந்து கொண்டு செயற்படுமாறு பார்த்தலைக் ‘கண்ணிற் சொலி’ என்றார்:
வாயின் வேலையைக் கண் செய்தலால், கண்ணுக்குச் சொல்லுந் தொழிலை ஏற்றினார்.
நேரிற் போய் ஒரு செய்தியை அறிந்தது போலவே தக்க ஒற்றர்கள் வாயிலாக அதைக் கேட்டு அறிந்து கொள்ளுதலால், `செவியின் நோக்கி’ என்றார்.
இவ்வகையான திறமை எல்லாராலும் இயல்வதன்றாதலால் அதனை `மாட்சி’ என்று கூறினார்.
அரசாட்சி செய்ய வேண்டுவோர் இவ்வாறு செய்ய வேண்டுமாதலால், இங்ஙனம் செய்யும் ஆட்சித் திறமையில்லாதவர்கள் அரசராய்ப் பிறந்து விடுவதனால் மட்டும் ஏதும் பயனில்லை யென்பதாம்.
அது போர் செய்யும் ஆற்றலில்லாதவன் கையில் வாளிருந்தும் பயனில்லையாதல் போல என்றார்.
ஆணல்லவர்க்கு: ஆண்மைத் தன்மையில்லாத பேடிகளை உணர்த்திற்று.
கருத்து:
ஆளுந்திறனும் அன்பும் இல்லாத அரசாட்சி பயனின்று.