376 உலகோர் புகழிகழ் உள்ளவா றாகா - புகழும் இகழும் மதியாமை 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா மா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
தன்றுணை யிலானே யுள்ளத்
= தன்மையை யறிவான் பூமி
இன்றொரு வனைத்து திக்கும்
= ஏசிடு மவனைப் பின்னும்
நன்றினைத் தீதென் றுன்னுந்
= தீதைநன் றென்ன வுன்னும்
பொன்றுமா னிடர்பு கழ்ச்சி
= புனலின்மேல் எழுத்துக் கொப்பே. 1
- புகழும் இகழும் மதியாமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”தனக்கு ஒப்பிலாத முழுமுதல் இறைவனே ஒருவனின் மனப்பாங்கை அறிவான்.
உலகோர் இன்று ஒருவனை மட்டின்றிப் புகழ்வர். அதன்பின் அவனையே திட்டுவர்.
மேலும் நன்மையைத் தீமை என்றும், தீமையை நன்மை என்றும் கருதுவர்.
நிலையில்லா மக்கள் செய்யும் புகழ்ச்சி நீர் மேல் எழுதும் எழுத்திற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
துணை - ஒப்பு. புனல் - நீர்.