வசைபிறர்நேர் வைதாலும் புன்கொலை யாகும் புலை - கொலை, தருமதீபிகை 706

நேரிசை வெண்பா

உள்ளம் பதற உயிர்துடிக்க வெவ்வுதிர
வெள்ளம் பெருக விளித்தல்தான் - எள்ளலுறும்
வன்கொலைஎன்(று) எண்ணல் வசைபிறர்நேர் வைதாலும்
புன்கொலை யாகும் புலை. 706

- கொலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிராணிகள் உள்ளம் பதறி உயிர்துடித்து அலற இரத்த வெள்ளம் சிந்தும்படி கொல்லுதல்தான் கொலை என்று எண்ணாதே; பிறர் அல்லலுறும்படி அவலமாக் கடிது சொல்லினும் அதுவும் கொடிய கொலையாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கொலை என்னும் சொல் தலைமையாக உயிர் வதையைக் குறித்து வருகிறது. உயிர்களின் துயரங்களை நோக்கியே பாவம், பழி என்னும் பயங்கர நாமங்கள் வந்துள்ளன. எங்கே இமிசை தோன்றுகிறதோ அங்கே பாவம் தோன்றுகிறது. பாவம் என்பது பவநோயைத் தருவது என்னும் ஏதுவான் வந்தது.

சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் இடர்கள் விளைகின்றன. இந்த மூன்றையும் நல்ல வழிகளில் செலுத்தினால் நன்மைகள் பல உளவாகின்றன. அந்த மனிதன் நல்ல தருமவான் ஆகின்றான். தீயவழிகளில் செலுத்தினால் தீங்குகள் விளைந்து, அவன் தீயவனாயிழிகின்றான். மனம், மொழி, மெய்களைப் பழுதுபடுத்தாமல் வாழ்பவனே நல்ல பாக்கியவான்; அல்லாதவன் பொல்லாதவனாய்ப் புலையுறுகின்றான்.

கட்டளைக் கலித்துறை

சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனை யால்வருந் தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுஞ் தீங்குக ளாயவுமற்று
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே. 28 திருஏகம்ப மாலை, பட்டினத்தார்

அல்லலான பிழைகள் சொல் முதலியவற்றால் விளையும் என இதனால் அறிந்து கொள்கிறோம். எந்த வகையிலும் யாதொரு பிழையும் நேராமல் தன்னைப் பாதுகாத்து ஒழுகி வருகிற நீதிமானே தீது நீங்கிய திவ்விய புருடன் ஆகின்றான்.

ஒரு பிராணியைப் பிடித்து மனிதன் கொல்லும் பொழுது அதன் உயிர் துடிக்கிறது; வெருவி அலறுகிறது; உதிரம் வழிகிறது; அந்த அல்லல் நிலைகளை விழி எதிரே கண்டும் உள்ளம் இரங்காமல் மனிதன் கொல்வது அவனது கொடுமையையும் மடமையையும் தீய பழக்கத்தையும் விளக்கி நிற்கிறது.

ஊனை உண்டுவருகிற ஈனப்பழக்கத்தால் பிறவுயிர்கள் படும் துயரங்களை உணர முடியாமல் குருடுபட்டுக் கொடுமைகளைச் செய்ய நேர்கின்றான். தனது சுகத்தையும் நலத்தையுமே எவ்வழியும் ஆவலாய் நாடி உழல்கின்றவன் பிறருடைய சுக துக்கங்களை ஒரு சிறிதும் கருதாமல் அறிவழிந்து போகின்றான். சுய நலத்தால் மனம் மழுங்கி மதிமருண்டு போதலால் அந்த மனிதன் பழி பாவங்களுக்கு அஞ்சாமல் எதையும் துணிந்து செய்து தனக்கு ஊதியத்தையே விழைந்து கொள்கிறான்.

Familiarity with exploitation is benumbin. - Kirby

’தன்னலமே கருதிவரும் பழக்கம் மனத்தைத் திமிர் ஆக்கி விடுகிறது’ என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு அரியவுரியது. சுயநலமுடையவன் சுரணை கெட்டு அயலார் நிலைகளை அறியாமல் அவலக் கேடுகளைச் செய்கிறான். பிறர்க்குச் செய்கிற கேடு தனக்கே கொடிய துயரமாய் வருதலை அவன் அறியாமல் அழிகிறான்.

தன்னைப்போல் பிறரை எண்ணி ஒழுகுபவன் பெரியவன்; அவ்வாறு எண்ணாது இழிபவன் சிறியவன். பெருமையும் சிறுமையும் அருளிலும் மருளிலும் முறையே மருவியுள்ளன. சிறிய பிராணிகளிடமும் கருணை புரிந்து ஒழுகிவரின் அவ்வரவு பெரிய மேன்மைகளை அருளி வருகிறது. சீவ தயையால் மனிதன் மாதவன் ஆகின்றான். பரிவு பெரிய தவமாகிறது.

உயிர்க்கு உறுகண் செய்யாமை தவம். (குறள், 261) என்றது பொருள் பொதிந்த அருள்மொழி. கொடி செடிகள் வாடுவதைக் கண்டாலும் அருளாளர் உளம் அனுதாபமாய் வாடுகின்றது. பரிந்து இரங்குவது பரம நீர்மையாயுள்ளது.

உயிர் நீங்கிய ஒரு பிரேதத்தை எடுத்துக்கொண்டு போய்ச் சுடுகாட்டில் வைத்துச் சிலர் சுட்டனர். அப்பொழுது அவ்வழியே சென்ற இராமலிங்க சுவாமிகள் அதனைக் கண்டார். உள்ளம் உருகி மறுகியது.. ஓர் உயிர் நெடுநாள் வாழ இடமாயிருந்த இவ்வுடலை மண்ணில் மரியாதையோடு புதைக்கக் கூடாதா? இப்படித் தீயிலிட்டுச் சுட்டெரித்துச் சாம்பலாக்க வேண்டுமா?’ என்று துடித்துச் சென்றார். புலையும், கொலையும் நீங்கி உலகம் என்று நலம் அடையுமோ? என்று பரிந்து வருந்தினார். அந்தப் பரிதாப நிலையில் நெடிது மறுகி நெஞ்சம் உருகினார்; அவர் பாடிய பாடல்கள் சில அயலே வருகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த் திடுகின்றீர்
..பேய ரேநீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம் மதித்தீரோ
..இரவில் தூங்கி
மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால் நும்மனத்தை
..வயிரம் ஆன
சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர் ஏன்பிறந்து
..திரிகின் றீரே. 5

அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை பொங்கக்கோ
..ரணிகொண் டந்தோ
பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர் இனிச்சாகும்
..பிணங்க ளேநீர்
கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே என்னபயன்
..கண்டீர் சுட்டே
எணங்கெழுசாம் பலைக்கண்டீர் அதுபுன்செய் எருவுக்கும்
..இயலா தன்றே. 6

குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட் டாலதுதான்
..கொலையாம் என்றே
வணம்புதைக்க வேண்டுமென வாய்தடிக்கச் சொல்கின்றேன்
..வார்த்தை கேட்டும்
பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச் சம்மதிக்கும்
..பேய ரேநீர்
எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற் கஞ்சுவரே
..இழுதை யீரே. 7

கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேயுலகீர்
..கலைசோர்ந் தாரைப்
பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச் சுடுகின்றீர்
..புதைக்க நேரீர்
சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு துடியாதென்
..சொல்லீர் நும்மைத்
தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் கதியிலைமேல்
..சூழ்வீர் அன்றே. 8

புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக் கருங்கடலில்
..போக விட்டீர்
கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச் சுடுகின்ற
..கொடுமை நோக்கிக்
கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினரக் கலக்கமெலாம்
..கடவுள் நீக்கித்
தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப் புரிகுவதித்
..தருணம் தானே. 10

108. சமாதி வற்புறுத்தல், ஆறாம் திருமுறை

கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க எனக்கழறிக்
..களிக்கா நின்ற
சுடுகாட்டுப் பிணங்காளிச் சுகமனைத்தும் கணச்சுகமே
..சொல்லக் கேண்மின்
முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால் சாவதற்கு
..முன்னே நீவிர்
இடுகாட்டுப் பிணங்கண்டால் ஏத்துமினோ எமையுமிவ்வா
..றிடுக என்றே. 37

- 125. தனித் திருவலங்கல், ஆறாம் திருமுறை, திருஅருட்பா

இராமலிங்கருடைய மனநிலையும் சீவ தயையும் இந்தப் பாசுரங்களால் வெளியாகியுள்ளன. உயிர் நீங்கிய சவத்தினிடமும் அவர் மனம் உருகி மறுகி இரங்கியிருப்பது கருதியுணர வுரியது.

அசரப் பொருள்கள் மீதும் அருள்நிலை பரவியெழின் அங்கே ஓர் உயரிய பரநிலை ஒளி வீசுகின்றது. மலர்ந்த பூவைப் பறிக்கவும் மாதவரது மனம் கூசுகின்றது. அந்த அழகும் பசுமையும் அழிந்து போமே! என்று அவர் இரங்கி அயர்கின்றனர்.

உயிரைக் கொல்லுதல்தான் கொலை என்று கருதலாகாது; பிறர் உள்ளம் அல்லலுறும்படி சொல்லினும் அதுவும் ஓர் கொலையாம். வசையாகப் பேசினலும், வைதாலும் வெய்ய துயரமாகுமாதலால் அவ்வாறு எவரையும் யாதும் பேசலாகாது.

சொல்லாலும் அல்லல் நேராமல் நல்ல அருளோடு நாடி ஒழுகி வருக என்றும், அது அரிய பல மேன்மைகளை அருளும் என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Dec-20, 7:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே