அன்புள்ள அப்பா
தவறுகளை மன்னித்து
தப்பினைக் கண்டித்து
உப்பிட்டு வளர்த்த
அப்பாவிற்கு வணக்கம்...
தந்தை எனும் தலை சிறந்த
கவிதைக்கு என் இதய
நந்தவனத்தில் உதித்த
இனிய கவிதை... இது
சொல்லும் அப்பாவின் அருமை..
எண்ணத்தில் உதிப்பது அதிகம்..
எழுத்தில் சொல்வது கொஞ்சமே...
எங்கள் ராஜாங்கத்தின்
அன்புத் தலைவரே...
எங்கள் பெருமைகளின்
கொள்கை பரப்புச் செயலாளரே...
எங்கள் இளமைக் காலங்களின்
இனிய பொருளாளரே...
எங்கள் இனிய தந்தையே...
உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த
அன்பு வணக்கங்கள்...
கல்வி பொருளாதாரம் ஆரோக்கியம்
போன்றவற்றில் உங்களைவிட
எங்களை உயர வைக்க
உங்கள் ஒவ்வொரு விநாடியும்
செலவழிகிறதே அந்த
உயர்ந்த உள்ளம் எங்கள்
அப்பாவிற்கு இனிய வணக்கம்...
வாழ்வின் அர்த்தங்களைச்
சொல்லிக் கொடுத்த
எங்கள் வாழ்வின் அர்த்தமே...
எண்ணிய எண்ணியாங்கு
எய்தும் வியூகம் தெரிந்த
எங்கள் பொக்கிஷமே...
எங்கள் அன்புத் தந்தையே
வாழ்த்துக்கள் உங்களுக்கு...
ஒண்ணாம் வகுப்பில்
சிம்னி விளக்கின் ஒளியில்
பாடங்கள் சொல்லிக் கொடுப்பீர்கள்..
அம்மா... ஆடு.. இலை.. ஈ...
எழுதிக் காட்டச் சொல்வீர்கள்...
புத்தகம் பார்த்தே எழுதுவேன்
எனத் தெரிந்தும் எழுதவைத்து
என்னைப் பாராட்டி மகிழ்வீர்கள்..
அந்தப் பாராட்டின் இனிமையைத்
தக்க வைத்துக் கொள்ள
பார்க்காமலேயே எழுதிப்பார்க்கக்
கற்றுக் கொண்டேன்..
சாலைகளில் நடந்து சென்றால்
மோட்டார் வாகனங்கள்
மனிதர்களை அதன்பால் இழுக்கும்..
என நீங்கள் சொன்னது கேட்டு
இன்றும் வாகனங்களைக் கண்டால்
மிகவும் ஒதுங்கிச் செல்வது
எனக்கு அனிச்சைச் செயல் ஆனது...
பையன் எப்படிப் படிக்கிறான்
என யாரும் கேட்டால்
வகுப்பில் முதலாவதாய் வருவான்
எனச் சொல்வீர்கள்...
அதற்காகவே நான் முதலாவதாய்
வருவதற்கு படிக்க வேண்டி இருந்தது...
பிள்ளைகளை வளர்க்கும்
சூட்சுமம் தெரிந்தவர் நீங்கள்...
பெரியோரிடம் மரியாதையாய்
எப்படிப் பழக வேண்டும் என்பதை
அழகாகச் சொல்லிக் கொடுப்பீர்கள்...
தாத்தா மீது கால் பட்டு விடாமல்
நடந்து போ என ராணுவக்
கட்டுப்பாடு காட்டி வளர்த்ததால்
எந்த மனிதரின் அருகிலும்
இன்றும் என் கால்கள் கூசும்...
பிள்ளைகள் நாங்கள் வளர்ந்த பிறகு
எதையும் என் பிள்ளைகளைக்
கேட்டுத்தான் சொல்ல முடியும்
என்று சொல்லிச் சொல்லி
எங்கள் ஆளுமை வளர்த்தீர்கள்...
விட்டுக் கொடுத்து வாழ்ந்து காட்டி
எங்களை விட்டுக் கொடுத்து
வாழ வழி காட்டினீர்கள்...
படித்த அத்தனை புத்தகங்களும்
சொல்லிக் கொடுத்ததை விட
அப்பா உங்கள் வாழ்வியல்
சொல்லிக் கொடுத்தது அதிகமானது...
காவியங்களில் கற்றதை விடவும்
உங்கள் காலடிகளில் கற்றது
மிகவும் வீரியமானது...
நீங்கள் கண்டித்துக் கூறி
கசந்த வார்த்தைகள் யாவும்
தேனென இனிக்கிறது இப்போது..
கடினமான அறிவுரைகள் யாவும்
பலாவெனச் சுவைக்கிறது இப்போது..
தந்தை சொல்மிக்க மந்திரம்
எதுவும் இல்லை எப்போதும்...
எங்கள் இனிய தந்தையே...
வாழ்க்கைப் பந்தயத்தில்
நீங்களும் எங்களோடு ஓடுவீர்கள்...
நீங்கள் ஜெயிக்க அல்ல...
எங்களை ஜெயிக்க வைக்க...
தங்கள் நிழலென்னும்
சொர்க்கத்தில் வாழ்ந்திருக்கும்
எங்களுக்கு இன்னொரு
சொர்க்கமும் வேண்டுமோ...
உங்கள் சிரிப்புச் சத்தம்
இதுவரை கேட்ட இசைகள்
யாவையும் விட இனிமையாய்
இதயம் நுழைந்து நிறையும்...
தந்தையே.. தங்களின் அன்பில்
மனசு நிறைந்து ததும்புகிறது...
தங்களை நினைக்கையில்
உள்ளம் இனிக்கிறது...
தந்தையாய் மட்டுமின்றி
ஆசானாய்... தோழராய்
இருந்து வழிகாட்டும்... எங்கள்
வாழ்வின் கலங்கரைவிளக்கம்
உங்களுக்கு பணிவான வணக்கங்கள்..
அன்பான வாழ்த்துக்கள்...
அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
🌹💐🙏👍😃