இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னாகக் கொளல்வேண்டும் – நாலடியார் 225
நேரிசை வெண்பா
இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் - பொன்னொடு
நல்இல் சிதைத்ததீ நாள்தொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால் 225
- நட்பிற் பிழைபொறுத்தல், நாலடியார்
பொருளுரை:
பொன் முதலிய பொருள்களோடு சிறந்த வீட்டையும் எரித்து அழிக்கும் இயல்பு வாய்ந்த தீயை நாள்தோறும் விரும்பித் நமது இல்லத்தில் சமைப்பதற்கு வளர்ப்பது போல,
தீயன செய்தாலும் நட்பு விடும் தன்மையர் அல்லாரைப் பொன்னைப் போல் மதித்துக் காத்துக் கொள்ள வேண்டும்.
கருத்து:
நண்பர் குறைகளைத் தமது பெருங்குணத்தால் தணிவாக வைத்துக் கொண்டு அவரைப் போற்றி யொழுகல் வேண்டும்.