உடலும் பொருளும் பிறர்க்குதவவே உண்டாயின - அறநெறிச்சாரம் 169

நேரிசை வெண்பா
(’ப்’ ‘ட்’ ’க்’ வல்லின எதுகை)

உப்புக் குவட்டின் மிசையிருந்(து) உண்ணினும்
இட்டுணாக் காலத்துக் கூராதாம் தொக்க
உடம்பும் பொருளும் உடையானோர் நன்மை
தொடங்காக்கால் என்ன பயன். 169

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

குன்று போன்ற உப்புக் குவியலின் மீது ஒருவன் அமர்ந்து உணவினை உண்டாலும், அந்த உணவில் உப்பினை இடாது உண்பானானால் அதன் சுவை உணவில் பொருந்தி சுவைக்காது,

அதுபோல, எழுவகைத் தாதுக்களும் கூடிய உடம்பினையும், செல்வத்தினையும் உடைய ஒருவன் தன் வாழ்நாளில் ஒப்பற்ற அறச் செயல்களைத் தொடங்கிச் செய்யவில்லை என்றால் உடலாலும், செல்வத்தாலும் ஒரு பயனும் அவன் பெற்றதாகக் கருதப்பட மாட்டான்..

எழுவகைத் தாது:

இரதம் குருதி எலும்பு தோல் இறைச்சி மூளை சுக்கிலம் உடம்பில் உள்ள எழுவகைப் பொருள்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-22, 1:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே