பழமைகந் தாகப் பசைந்த வழியே கிழமைதான் யாதானுஞ் செய்க - நாலடியார் 310
நேரிசை வெண்பா
பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானுஞ் செய்க: - கிழமை
பொறாஅர் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்(து)
அறாஅச் சுடுவதோர் தீ 310
- இரவச்சம், நாலடியார்
பொருளுரை:
பழமையாகிய நட்பே பற்றுக் கோடாக நண்பரிடம் ஒன்று பெறுதற்கு உள்ளம் விரும்பியவிடத்து உரிமையால் அவ்வாறு ஏதேனுஞ் செய்து கொள்க;
ஆனால், அங்ஙனம் செய்யும் உரிமைச் செயலை அந் நண்பர் பொறாரென்றால், தமது நெஞ்சத்தில் மூட்டப்பட்டு அம் மானக் குறைவால் உண்டான வேதனை யென்னும் ஒரு தீ என்றும் நீங்காது சுடுவதாகும்;. ஆதலால், உரிமை கருதியும் இரத்தல் அஞ்சப்படும்!
கருத்து:
பழமை கருதியவிடத்தும் இரத்தலுக்கு அஞ்சுக.
விளக்கம்:
தடுக்கும் அறிவைப் பிற்படுத்தி உள்ளம் இரத்தற்கு மீதூர்ந்து விழைந்தவழி யென்றற்குப், பசைந்த வழியே யெனப்பட்டது.
இரத்தல் செய்க என்றற்கு உள்ளங் கூசுதலின், ‘யாதானுஞ் செய்க' என்று வேண்டா வகையாய்க் கூறினார்;
அங்ஙனம் மனம் பொறுத்து அது செய்தும் அதனை அந்நண்பர் கருதாது கைவிடுவர் என்றால், பின்பு, நினைய நினையக் கனைந்தெழும் வேதனைத் தீ உள்ளத்தே அறாது மூண்டு விடுமாகலின், அந்நிலையினும் இரத்தல் பெரிதஞ்சப்படும் என்பது பின் வரிகளால் உணர்த்தப்பட்டது.