நெய்பயந்த பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா மேலுலகம் எய்து பவர் – அறநெறிச்சாரம் 194
பல விகற்ப பஃறொடை வெண்பா
இருளே உலகத் தியற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை - கைவிளக்கின்
நெய்யேதன் நெஞ்சத்(து) அருளுடைமை - நெய்பயந்த
பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா
மேலுலகம் எய்து பவர் 194
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
இவ்வுலகம் அறியாமை என்னும் இருளால் நிறைந்ததேயாகும்,
ஞான நூல்களை கற்றதனலாய அறிவுடைமை அவ்விருளைப் போக்கும் கைவிளக்கே ஆகும்;
மனத்திலுள்ள அருள் அவ்விளக்கெரித்தற்குக் காரணமாகிய நெய்யேயாகும்,
நெய்க்குக் காரணமாகிய பால்போன்ற தூய ஒழுக்கமுடையவரே துன்பமற்ற வீட்டுலகத்தினை யடைபவராவர்.
குறிப்பு:
ஒருவன் கல்வியறிவு ஒளியாலும் நெஞ்சதது அருளாலும், தூய ஒழுக்காலும் மேலுலகம் எய்துவன் என்பது கருத்து.

