பெருநடை பெற்றக் கடைத்தும் வற்றாம் ஒருநடை கீழ் – நாலடியார் 343
நேரிசை வெண்பா
பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ் 343
- கீழ்மை, நாலடியார்
பொருளுரை:
விளங்குகின்ற அருவிகளையுடைய சிறந்த மலைநாடனே!
உலகிற் பெருமித நிலையைத் தாம் பெற்றாலும் தம்பெருந்தன்மையாகிய இயல்பு வழுவாது என்றும் ஒருதன்மையாராய் விளங்குவர் மேலோர்;
பெருமித நிலையைப் பெற்றவிடத்தும், கீழ் மகனும் என்றுந் தனது கீழ்மையியல்பு தோன்ற ஒரு நடையாய் ஒழுகவல்லவனாவன்.
கருத்து: செல்வ நிலையிலும் கீழோர் கீழோராகவேயிருப்பர்.
விளக்கம்:
நடை - செல்வப்போக்கு; பெறினுமென்னும் உம்மை பெறாதிருந்த காலத்துமென இறந்தது தழீஇயது. பெற்றக்கடைத்து மென்னும் உம்மையும் அற்று; கீழுமென எச்சவும்மை கொள்க;
வல்லதென்னுங் குறிப்பானும் ஒரு நடையென்னுங் குறிப்பானும் கீழுஞ் சான்றோரொப்ப ஒரு நடைய ராகுவர் என்றுரைக்கப்பட்டது
செல்வாக்குக்கேற்ற பெரும்போக்கைப் பெறாமல் தமது கீழ்மையியல்பையே கீழோர் மேற்கொண்டிருப்பர் என்பது!