230 யாரையும் மருவச்செய் கள் மிக இழிவே – மது அருந்துவதன் விளைவு 5
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
சீயென இகழ்தரு தேனுண் போர்களை
நாயெனக் கோகென வாக்கு நாடொறும்
ஆயினை மகளையில் லாக்குந் தான்கொண்ட
சேயிழை யையு(ம்)விலை செய்யச் செய்யுமால் 5
– மது அருந்துவதன் விளைவு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நல்லோரால் `சீ என்று இகழப்படும் கள்ளை உண்போர்களை நாயென்றும், கழுதை யென்றும் சொல்லி அனைவராலும் இகழ்ந்து தண்டிக்கப் படுவார்கள். பெற்ற தாயினையும், மகளையும் முறையிலாது மருவ மனம் விரும்பும்.
தான் மணந்த மனைவியையும் விலைப் படுத்தி மது அருந்தச் செய்யும்” என மதி மயங்கி முறையின்றி யாரையும் மருவச் செய்யும் கள் அருந்துவது மிக இழிவானது என்று இப்பாடலாசிரியர் எச்சரிக்கிறார்.
ஆயினை-தாயை. கோகு-கழுதை.

