231 தீமையை நன்மையெனத் திரிப்பது கள்ளே – மது அருந்துவதன் விளைவு 6
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
மலந்தனை யமுதென மாந்தச் செய்திடும்
மலர்ந்தபூ வெனவன லள்ளச் செய்யும்வெஞ்
சலந்தரும் பகைவர்கை தனக்குள் ளாக்குநல்
நலந்தனை யழித்திடு நறவு நெஞ்சமே. 6
– மது அருந்துவதன் விளைவு
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நெஞ்சமே! கள்ளானது, மலத்தை அமுதென்று நினைத்து உண்ணச் செய்யும்;
நெருப்பை விரிந்த பூவென அள்ளச்செய்யும்;
மிக்க சினத்துடன் கொடிய செயல்களைச் செய்யும் பகைவர்களைத் தனக்குத் துணையாகச் சேர்க்கும்;
நல்ல செயல்களையும், உடல் நலத்தையும் அழித்திடும்” என மனம் திரிந்து துன்பம் விளைப்பது கள்ளே என்று இப்பாடலாசிரியர் எச்சரிக்கிறார்.
.
மாந்த - உண்ண. அனல் - தணல். சலம் - சினம். நறவு - கள்.