முதுமொழிக் காஞ்சி 99
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஏமம் வேண்டுவோன் முறைசெய றண்டான். 9
- தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், குடிகளைப் பாதுகாத்தலை விரும்பிய அரசன் நீதிமுறைமைப்படி அரசுசெய்தல் தவிரான்!
பொழிப்புரை: குடிகளைக் காக்க விரும்பிய அரசன் முறைமைப்படி நடத்த லொழியான்.
குடிகளை ரக்ஷிக்க விரும்பிய அரசன்நீதிமுறை தவறாமல் நடப்பான்.
'ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்(து) யார்மாட்டும்,
தேர்ந்துசெய் வஃதே முறை' 541 செங்கோன்மை (திருக்குறள்) என்பதனால் முறையின் இலக்கணம் விளங்கும்.