அக்னி பரிட்சை
அடிவயிற்றில் இருந்து கிளம்பிய பெருமூச்சுடன் ஒருக்களித்து படுத்தவாறு தலையை மட்டும் தூக்கி ரோட்டோரத்தில் புதிதாக முளைத்திருந்த பிரியாணி கடையைப் பார்த்தாள் கோமளவள்ளி .
இளசுகள் பெருசுகள் நடுத்தர வயது பெண்கள் என்று பாகுபாடின்றி கூட்டம் குவிந்திருந்தனர். ஆச்சரியம் தான் இந்த நடு ராத்திரியில் பிரியாணி தின்னா செரிக்குமா என்ற சந்தேகம் கோமளத்தின் மனதில். செரிக்கவில்லை எனில் அதுக்கும் ரெண்டு மாத்திரையை போட்டா போச்சு என்று நினைத்து கொண்டாள்.
நீண்ட வரிசையில் நின்று அடித்து பிடித்துக் கொண்டு பிரியாணியை வாங்கி இங்கேயே கெக்கே பிக்கே என்று பேசி சிரித்தவாறு தின்னும் இந்தக் கூட்டம் களைந்து கடை அடைப்பதற்கு இந்தா அந்தா என்று விடியற்காலை நான்கு மணி அடித்து விடும்.
மனதில் ஓடும் எண்ணத்திற்கு ஏற்ப, ஆறு மாதங்கள் கூலி வேலை செய்து அரை வயிறு கஞ்சி குடித்து மிச்சம் பிடித்து செகண்ட் ஹேண்டில் வாங்கிய நோக்கியாவில் மணி பார்க்க அது பன்னிரெண்டு என்று காட்டியது.
இன்னும் நாலு மணி நேரம் இருக்கு கடை அடைக்க என்ற எண்ணம் மனதில் ஓடியது.
இவன் கடையை மூடிட்டு போனால் நாலரை மணிக்கு டான்னு பக்கத்தில் ஒரு டீக்கடை முளைத்து விடும்.
வாக்கிங் வருவோர், போவோர், லாரி ஓட்டுனர் இரவு பணியில் இருந்த காவலாளி என்று நினைத்து நினைத்து ஒவ்வொருவராக வந்து டீக் குடித்த படி இருப்பார்கள்.
அந்த டீக்கடையில் தான் கோமளத்தின் காலை தொடங்கும், டீக் கிளாஸ் கழுவ ஆரம்பித்தால் ஆறு மணி முதல் டிபன் கடையாக அவதாரம் எடுக்கும் அதே கடையில் தட்டு கழுவ ஆரம்பித்து காலை பத்து மணி வரை நீடிக்கும். அதன் பிறகு மூன்று வீட்டில் பத்து பாத்திரம் கழுவுவதுமாக அவள் வேலை நீளும்.
நித்தம் நடக்கும் அக்னி குளியல் அவள் வரையில் ஆரம்பிக்கும் நேரம் இது தான். ரோட்டு கடையில் சலசலப்பு கூடக் கூட இவளுக்கான நெருக்கடி அதிகரிக்கும். போதை தலைக்கேற கடித்துக் குதற காத்திருக்கும் வெறி நாய்களின் பார்வையில் இருந்து தப்பி மறையவும் இடம் இல்லாது இவள் தவிக்கும் தவிப்பு சொல்லிமாளாது.
ரோட்டோர தட்டி வைத்து அடைத்த தடுப்பு தான் கோமளத்தின் குடியிருப்பு. அதிலும் இரவில் தடுப்புக்கு வெளியில் தான் அவளின் படுக்கை. தடுப்புக்கு உள்ளே மகனும் மருமகளும் அவர்களுக்கான தனிமையை நாடி. ஒரு பிளாஸ்டிக் பையும் பழம் புடவை சுருளும் தான் அவளின் படுக்கை.
மூச்சு விட நேரம் இல்லாமல் உழைத்த உழைப்பின் பயனாக உருவிவிட்டது போன்ற தேகம் மட்டுமே அவளுக்கு ஆதாயம் அதுவேதான் ரோட்டோரம் கொத்திப் பிடுங்க காத்திருக்கும் கழுகுகளின் விருந்து.
கணவனைப் பறிகொடுத்து விட்டு கைக் குழந்தையுடன் நின்று இந்த வெறி நாய்களின் மத்தியில் கடி வாங்காமல் வாழ்ந்தது என்பது நித்தம் ஒரு அக்னி பரிட்சை தான் அவள் வரையில்.
முதுமையின் வாயிலை தொட்ட இவளின் கதியே இப்படி எனில் இவளுடைய குலம் தழைக்க வந்திருக்கும் மருமகளை காப்பது என்பது சிம்ம சொப்பனம் என்றால் மிகையாகாது.
காலைக்கடன் கழிப்பதில் இருந்து இரவில் கொண்டவன் நெஞ்சில் முகம் மறைப்பது வரை அனைத்துமே ஒரு போராட்டம் தான் இந்த ரோட்டு ஓரத்தில்.
கோமளமோ அல்லது அவள் மகனோ ஒருவர் மாற்றி ஒருவர் மருமகளுக்கு காவல் இருக்கும் நிலை.
இந்த நிலை மாற கோமளம் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள், தன் ஜாகையை மாற்றுவது என்று.
நாளை முதல் இந்த ரோட்டு ஓரத்தில் இருந்து அவதிப்பட வேண்டாம் என்ற எண்ணத்தில் அவள் முகத்தில் ஒரு நிம்மதி பரவியது.
அவள் வேலை பார்க்கும் இடத்தில் முதலாளியின் கையில் காலில் விழுந்து கெஞ்சி அவருடைய தோட்டத்தில் குடிசை போட்டு தங்கிக் கொள்ள அனுமதி வாங்கி இருந்தாள்.
ஆச்சு நாளை முதல் அங்கு சென்று விடலாம்.
அப்ப நாளையில் இருந்து இங்க வேலைக்கு வர மாட்டியா என்ற டீக் கடைகாரரின் கேள்விக்கு,
அவ்வளவு தொலவுல இருந்து வர முடியாது அய்யா அதுதான் பார்க்குறேன் இல்லன்னா வராம இருப்பனா என்று வெள்ளந்தியாக சிரிக்கிறாள் கோமளம்.
இரண்டு நாட்கள் ஆகின்றன புது இடத்தில் குடியேறி. மருமகளுக்கு ஒருவர் மாற்றி ஒருவர் காவல் இருக்க வேண்டிய அவசியமில்லை இங்கு.
இழுத்து மூச்சு விடுகிறாள் நிம்மதி பரவிய மனதுடன்.
இரவு உணவை முடித்துக் கொண்டு அழகாக பத்து மணிக்கு டான்னு என்று படுத்து உறங்கும் புது அனுபவம் மனதில் நிம்மதியை விதைத்திருந்தது.
சாப்பாட்டு வேலை முடிச்சாச்சு இனி படுகைய எடுத்துப் போட்டு கால நீட்டி படுக்க வேண்டியது தான் என்று எழுந்தாள்,
டொக் டொக்......
கதவு தட்டும் சத்தம்
இந்த நேரத்தில் யாரா இருக்கும்.
யாருன்னு பாருடா மவனே....
விரிய திறந்த கதவிற்க்கு வெளியே விகாரமான இளிப்புடன் முழு போதையில் புது முதலாளி.
ஹீ...ஹீ... வீடு வசதியா இருக்கான்னு கேட்டு போகலாம்னு வந்தேன் என்றபடி உள்ளே நுழைந்தான்.
மனக் கண்ணில் எழுந்த பிணம் தின்னிக் கழுகின் காட்சியில் உடல் சிலிர்க்க எழுந்தாள் கோமளம்......
அக்னி பரிட்சை தொடரும்.......
கவிபாரதீ ✍️