தளர்வில்லா தமிழ்மல்லன்
தமிழ்மல்லன் என்றபெயர் கேட்டால் போதும்
------தன்மானம் தசையெங்கும் தளிர்விட் டெழுமே
நிமிர்ந்திடுமே நரம்பெல்லாம் புதிய தெம்பால்
------நினைவிலெழும் செய்தபல நற்செய லெல்லாம்
அமிழ்தினிய தமிழ்வளர அவரின் பணிகள்
------அளவிடவே இயலாது இன்றும் என்றும்
இமியளவும் பழுதில்லா பண்பில் வாழ்வை
-------இவ்வுலகம் போற்றிடவே இசைந்து வாழ்ந்தார்
அயராமல் பலவகையில் அல்லல் பட்டே
--------அரசுடனே தனியாரின் பதாகை எல்லாம்
பெயரனைத்தும் தமிழினிலே இருக்க வேண்டி
---------பெருமுயற்சி மேற்கொண்டே வென்ற வீரர்
துயர்தந்த பிறமொழிகள் அனைத்தும் நீக்கி
---------தூயதமிழ் ஆட்சிமொழி ஆக்கி வைத்தார்
தயவற்ற பலபேரை தனியாய்ப் பார்த்து
----------தமிழுயர தனிமுயற்சி செய்த மாந்தன்
பிணிபோன்ற பலதடையை விலக்கி ஓட்டி
----------பண்தமிழ்வழி கல்விவர வேண்டும் என்று
துணிவாக பட்டினிப்போர் பலநாள் இருந்து
----------தன்னெதிர்ப்பை தெரிவித்தத் தூயத் தனயன்
மணித்தமிழுக் குழைத்திட்ட பாவா ணர்க்கே
----------மங்கலமாய் விழாவெடுக்க வைத்த வேந்தன்
பணிவேனுனை நீர்செய்த அறப்பணி எண்ணி
---------பாருள்ள வரையுந்தன் புகழும் வாழும்.
சொ. பாஸ்கரன்