என்னைக் கவர்ந்த திரைப்படங்கள் - சுப்ரமணியபுரம்

இந்த நவீன யுகத்தில், கணிணிகளும்,டி-ஷர்ட் யுவதிகளும் அன்றாடக்காட்சியாகிவிட்ட இந்த யுகத்தில் 1980களில் நடந்த கதையைத் திரைப்படமாக எடுத்தால் வெற்றி பெற முடியுமா? முடியும் என்று நிரூபித்தார் இயக்குநர் சசிகுமார். காதல், நட்பு, துரோகம் என்கிற விஷயங்களைச் சுற்றி சுழல்கிறது கதை.
தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிற மதுரையின் இரவு நேரக் காட்சிகளுடன் படம் துவங்குகிறது. சமகாலத்தில் நடந்த ஒரு கொலைக்குப் பின்னால் இருக்கும் சம்பவங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக இருபத்தெட்டு வருடங்களுக்குப் பின்னால் அழைத்துச் செல்கிறார் சசிகுமார். அந்தக் கால காட்சிகளைக் காண்பிக்க இயக்குநர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.
அழகரையும், பரமனையும் கனகு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அழைத்து வருவதோடு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் துவங்குகிறது. வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கண்களாலேயே ஒரு காதல் காட்சியை, மன்னிக்கவும், கவிதையை அரங்கேற்றுவதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார். "நாங்களும் கலராத்தானடா இருக்கோம், எங்கள ஒருத்தியும் பாக்க மாட்றாளுக" என்று பரமன் சொல்லும் போது, பெண் மனதைப் பற்றி காலங்காலமாக நமக்கு இருக்கும் தெளிவின்மை வெளிப்படுகிறது. அதிகார வர்க்கத்தின் அந்தக் கால அரசியலை இயக்குநர் தெளிவாகக் காட்டியிருக்கிறார். படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. ஆனால் விஜய் பறந்து பறந்து சண்டை போடுவதைப் போன்றோ, சூர்யா ஹெலிகாப்டர் உயரத்துக்குக் குதிப்பதைப் போன்றோ நகைச்சுவையான கார்ட்டூன் சண்டைக் காட்சிகள் அல்ல அவை. அன்றாடம் நாம் பார்க்கக் கூடிய தெருச்சண்டைகள் தான். இவரைப் போன்ற இயக்குநர்களுக்கு சுவிட்சர்லாந்தின் பனிமலைகளோ, ஏழு அதிசயங்களோ தேவையில்லை. மதுரையின் தெருக்கள் போதும். அரையாடைக் கதாநாயகிகளும், நாய்க்குட்டி போல் அவர்களைச் சுற்றி வந்து முகர்ந்து பார்க்கும் கதாநாயகன்களும், கதைக்குச் சம்பந்தமில்லாத பாடல்களும் தேவையில்லை. கண்களில் காதலை வெளிப்படுத்தும் ஒரு இளைஞனும், இளைஞியும் போதும்.
ஊர் பெரிய மனுஷனின் அயோக்கியத்தனங்கள், பூட்டின வீட்டுக்கு முன் சவுண்டு கொடுக்கும் காசி என கதையோடு சேர்த்து பின்னப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள், திருவிழாக் காட்சிகள் போன்றவை அற்புதமாக அமைந்துள்ளன. வீட்டுப் பெண்கள் மதிக்கவில்லை என்று வருத்தப்படும் கனகு, அழகரையும், பரமனையும் கொலை செய்யத் தூண்டுகிறார். உணர்ச்சி வேகத்தில் ஒரு கொலை நிகழ்ந்து விடுகிறது. அது அவர்கள் வாழ்க்கையில் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிறையில் கிடைத்த தொடர்பு, அதன்மூலமாக நிகழ்ந்த கொலைகள் என அவர்கள் தொழில்முறைக் கொலைகாரர்களாகப் பரிணமிக்கிறார்கள்.
ஒரு பெண்ணுக்குத தேவையான உணர்வுப் பாதுகாப்பை வழங்க அழகரால் முடியவில்லை. எந்தப் பெண்ணும் தான் நேசிப்பவன் திரு.சிறந்தவர் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புவது கிடையாது. அவனில் உள்ள சில குறைபாடுகளே அவளை அவன் பால் ஈர்க்கிறது. சில நேரங்களில் அவளை ஈர்த்த குறைபாடுகள் அளவிலும், தன்மையிலும் மிகும் போது அக்காதலுறவு தோல்வியை நோக்கிச் செல்கிறது. குடும்பத்தின் கட்டாயத்தினால் அழகரை அந்தப் பெண் கொலைக்குக் கொடுக்கிறாள். அந்தப் பெண் இறுதியில் அழுவதற்கான காரணம் இன்னவென்பதை பார்வையாளர்களின் ஊகத்துக்கே விட்டு விடுகிறார் இயக்குநர்.
இந்தக் காட்சி பெண்களைத் துரோகிகளாக உருவகப்படுத்துகிறது என்று சிலர் கூறலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. கட்டாயங்களாலும், கடமைகளாலும் பிய்த்தெறியப்பட்ட பெண்களின் உணர்வுகளை இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இறுதியாக காசி செய்யும் துரோகம். ஒரு பொருளாளரைப் போல் அழகரையும், பரமனையும் சுற்றி வரும் காசி பொருளுக்காக பரமனைக் காட்டிக் கொடுக்கிறான். இறுதியாக டோப்பனும், டும்கானும் காசியை அவனது துரோகத்திற்காகப் பழி வாங்குகின்றனர் என்பதோடு கதை முடிவடைகிறது. கதை மிகச் சாதாரணமானது தான். ஆனால் பார்வையாளனைக் கவரும் விதத்தில் சசிகுமாரால் அமைக்க முடிந்திருக்கிறது.
இருந்தாலும், இயக்குநரிடம் கேட்க வேண்டிய கேள்வியொன்று எனக்கு இருக்கிறது. அந்தப் பெண் என்னவானாள்? பதிலையும் நானே ஊகித்துச் சொல்கிறேன். தனது பெரியப்பனைப் போன்ற ஒரு அரசாங்க உத்தியோகஸ்தனையோ, தனது அப்பனைப் போன்ற அரசியல்வாதியையோ, தனது சித்தப்பனைப் போன்ற ஒரு அரசியல் வர்க்க குண்டனையோ திருமணம் செய்து கொண்டு நான்கைந்து குழந்தைகளைப் பெற்றுப் போட்டிருப்பாள். அழகரை நிச்சயமாக மறந்திருப்பாள். அவளது குழந்தைகள் இன்னும் மதுரையின் வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்கலாம். ஜாக்கிரதை!