எழுதவரும் புதிய கவிஞர்களுக்கு

விலை ஏறிவிட்டது வெங்காயம்
வாங்குவோருக்கெல்லாம் பெரும் காயம்
............................................................
...............................................................
இது என் முதல் கவிதை(?)
பள்ளியில் படிக்கும்போது எழுதி
அம்மாவிடம் வாசித்தேன்
அடிதான் விழுந்தது முதுகில்
விட்டுவிட்டேன் எழுதுவதை.
கல்லூரியில் படிக்கும்போது
அம்மா காலமாகிவிட்டாள்
அழுகையுடன் கவிதையும் வந்தது
நிறைய எழுதிவைத்தேன்
வேலைதேடி சென்னை வந்தேன்
வீதி வீதியாக அலைந்தேன்
வேலைகிடைக்கவில்லை
சலனம் என்று ஒருகவிதை எழுதி
கணையாழிக்கு அனுப்பினேன்
பிரசுரமானது பத்திரிகையில்
பத்திரிக்கையும் வந்தது பரிசாக.
“வேடிக்கை” என்று ஒரு கவிதை....
-பிச்சை எடுத்தது B.A. பட்டம்
அதையும்
பறித்துக்கொண்டது M.A. பட்டம்
காருக்குள்ளிருந்து
வேடிக்கை பார்த்தது M.L.A. பட்டம்-
இது ‘தீபம்’ பத்திரிகையில் வந்தது.
அய்யா பார்த்தசாரதியின் அழைப்புடன்.
“உனக்கு வேலையில்லை என்பது
உன் எழுத்தில் தெரிகிறது
முதலில் வேலையைத்தேடு
வாழ்க்கையை வளமாக்கு
அப்புறம் எழுது” என்று சொன்னார்
வேலையும் கிடைத்தது
படிப்புக்கு ஏற்ற வேலையில்லை
கிடைத்த வேலையை பிடித்துக்கொண்டேன்
உழைத்தேன் உயர்ந்தேன் வளர்ந்தேன்
அன்றைய முதல்வர் தலைமையில் திருமணம்
உழைப்பின் பலனாக லண்டன்-பாரிஸ் பயணம்
முப்பது வருடங்கள் எழுதாதவைகளை
இன்று எழுதுகிறேன்.இனியும் எழுதுவேன்.
உன் கதை எனக்கு எதற்கு
என்று கேட்க்கும் தோழரே!
இதுவும் ஒரு பார்த்தசாரதியின் கீதையே!
இது எனக்கு மட்டுமல்ல
எழுதவரும் புதிய கவிஞர்களுக்கும்தான்.
கவிஞர்களே! கவிஞர்களே!
கற்பனைக்கடலில் வாழ்க்கையை
தொலைத்துவிடாதீர்கள்
(நண்பர்களே! மன்னிப்பீர்களாக
இதை எழுதியது தவறு எனில்)