அலகிலா உலகில் பூத்த ஒற்றைப் பூ நான்.
அம்மா!
உனது முந்நூறு நாள்
தவத்தின் வரம் நான்.
வரமாய் நான் வந்ததாலா
வாழ்க்கை உனக்கு சாபமானது.
ஒரு பாதிப் பயணத்தில்-
உன்னைத் தாங்கிய வேர்கள்
இற்றுக்கொள்ள-
அழகிய பூ நீ...
சகதியில் விழுந்தாய்.
எனக்காகத்தான்
நீ
வீதிக்கு வந்தாய்.
வாழ்ந்த கனவுகள்
தொலைந்துவிட....
நீ கனவுகளற்றவள் ஆனாய்.
அலகிலா உலகில்
நீ
ஒற்றை மரமானாய்.
நான்
அதில் பூத்த ஒற்றைப் பூவானேன்.
நான் கனி ஆவதற்காக
நீ கல்லடி வாங்கினாய்.
மனசு நசுங்கியவர்களின்
பேச்சுக்களில்
நீ ஒடிந்து போனாய்.
காலத்தின்
நீள் ......வட்டப்பாதையில்
இன்றைய இரவு நீங்கி
நாளை
நமக்கும் வெளிச்சம் வரலாம்.
அன்று முதல்
பூக்கத் துவங்கலாம்
நீ இருக்கும் தோட்டத்தில்
புதுப்புதுக் கனவுகள்.