அமானுஷ்யமாய்....
அமானுஷ்யமாய்....
========================================ருத்ரா
கோடை தான்.
கொக்கு கூட
தண்ணீரில் தன் முகம் மட்டுமே
பார்த்து ஏமாந்து போகிறது.
மீன்கள் இல்லை.
மணல் விரித்த பாயில்
நோயாளியாய்
தாமிரபரணி.
துணி ஆலைக்காரன்
துவக்கத்திலேயே
அசிங்கப்படுத்தினான்.
அப்புறம் சேர்மாதேவியில்
காகித ஆலைக்கழிவு
கற்பழித்தது போக
குறுக்குத்துறையில்
குறுக்கு ஒடிந்து விட்டது.
அப்பால் எல்லாம்
சீமைக்கருவேலங்கள்
முள்ளால் குத்தி
மூக்கு சிந்தி போட்டது போக
ஆறுமுகநேரியில்
நாறு முகமாகி
வாழையிலைக்கந்தல்களின் ஊடே
வருகிறாள் பொருநை மகள்.
பொங்கல் வைத்து
குலவைஇட குரலும் இல்லை..
குரலில் உயிரும் இல்லை.
சொள்ளமாடன் முண்டைக்கண் துருத்தி
ஆற்றங்கரை
சுடுகாட்டுப்புகையில்
அமானுஷ்யமாய்
சுருட்டுப்பிடித்து
விறைத்து நிற்கிறான்.
======================================ருத்ரா