எண்குணத்தான் இறைவன்
”கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.”
– திருக்குறள் 9, அதிகாரம் – கடவுள் வாழ்த்து
எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள், ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி போன்ற உறுப்புகள் இருந்தும், அவைகளுக்கு உண்டான, குறிப்பிட்ட புலன்களான உணர்வு இயக்கம், பேசும் திறன், பார்வை, சுவாசம், கேட்கும் திறன் அவ்ற்றை இழந்து, எந்தவிதமான பயனும் அற்றதற்கு இணையாகும்.
அத்தன்மையவர்க்கு தலை இருந்தும் அது பயனற்றதாம்.
இத்திருக்குறளில் ’எண்குணத்தான்’ என்பதற்குப் பரிமேழகர், சைவாகமத்துள் கூறப்பட்ட,
1.தன்வயத்தன் ஆதல்,
2.தூய உடம்பினன் ஆதல்,
3.இயற்கை உணர்வினன் ஆதல்,
4.முற்றும் உணர்தல்,
5.இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல், 6.பேரருள் உடைமை,
7.முடிவிலா ஆற்றல் உடைமை,
8.வரம்பில் இன்பம் உடைமை
என்ற இறைக்குணங்களை இறைவனின் எண்குணங்களாக மேற்கோள் காட்டுகிறார்.