கசையடி
அந்த அரசனுக்கு சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அரண்மனை சோதிடரும் இந்த நம்பிக்கையை வைத்து அரசரிடம் ஏதாவது சொல்லி பரிசைப் பெற்றுக் கொள்வார்.
சோதிடர் ஒரு நாள், “அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் அந்த நாள் சிறக்கும்” என்று நம்பிக்கை ஊட்டினார்.
உடனே மன்னன் சேவகனை அழைத்து, “காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டான்.
அந்த சேவகனும் தினமும் பொழுது விடியும் முன்பே இரண்டு காக்கைகளைத் தேடித் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.
ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். “அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார்” என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் தகவலைச் சொன்னான்.
இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்கையைக் காணோம். இரண்டில் ஒன்று பறந்து போய் விட்டிருந்தது.
மன்னனுக்கு கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து, “இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு” என்று உத்தரவிட்டான்.
சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். மன்னனுக்கு ஆத்திரம் இன்னும் அதிகமானது. “நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் மேலும் பத்து கசையடி கொடுக்கப்படும்” என்று கத்தினான்.
உடனே சேவகன், “மகாராஜா, இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். எனக்குக் கசையடி கிடைக்கப் போகிறது... இரட்டைக் காக்கைகளைப் பார்த்தால் நல்ல சகுனம் என்பதை நினைத்துப் பார்த்தேன். சிரித்தேன்.” என்றான்.
அவன் சொன்னது மன்னருக்கு கசையடி கொடுத்தது போலிருந்தது.

