வழுக்கும் பாறை மர்ம முடிச்சுகளில் நமது பயணம் மவுனத்தை...
வழுக்கும் பாறை
மர்ம முடிச்சுகளில் நமது பயணம்
மவுனத்தை சுவீகரித்து
தத்திச் செல்கிறது.
இருட்டுப் பிரதேச வவ்வால்களின்
இங்குமங்குமான ஆர்ப்பாட்டம்
இங்குள்ள மாண்புமிகுகளின்
நாசகார பயணத்தை
நகலெடுத்து காட்டும்.
ஆசுவாசம் பண்ணக்கூட நேரமில்லாமல்
அடுத்தவனை யோசித்தே
அரைபாதிக்கு மேல் அறிவிழந்து போயின
பொட்டல் காடுகள்.
அவைகள் அவைகளை
சிவப்புத் தேள்களென்றும்
செந்நாக்கு ஓநாயென்றும்
அழைத்துக் கொண்டன.
அழிந்து போன மொழிகளுமில்லாமல்
ஆட்சி செய்யும் மொழிகளுமில்லாமல்
அவைகளுக்கென்று புது மொழியில்
அழுக்கை படைத்தன.
பெருமைமிக்க பாவலர் கூட்டம்
பரவலான பழமொழி ஒன்று சொல்லி
கண்ணியத்தைக் காத்தது.
நாயின் குரைச்சல் தாளாமல்
பவுர்ணமிகள்
சீக்கிரமே அமாவாசையாகின.
சுசீந்திரன்.