எங்கே என் உலகம் நான் - கலிலியோ உலகம்...
எங்கே என் உலகம்
நான் -
கலிலியோ
உலகம் உருண்டையென்று சொன்னவன்.
மீண்டும் ஒருமுறை கழுவேற்றுங்கள்.
குருட்டு நம்பிக்கையின்
நாட்டாமையில்
திருவாளர் விஞ்ஞானம்
முட்டாளானார்.
நியாயமில்லையென்று தெரிந்தும்
நீதிமான்கள்
தலைகுனிந்து நின்றார்கள்
துகில் உரிந்தது
துரியோதனன் என்பதற்காக....
தலையாவது தப்பட்டுமென்று
திக்கற்று ஓடியவர்களில்
நானும் ஒருவன்.
இந்த சதுரங்க கோட்டையில்
கபாலங்களை வெறுமையாக்கி
மரத்துப் போனவர்கள்
மறுபடியும் பார்வைக்கு வந்தார்கள்
ஒன்றும் புரியாமல்
ஒவ்வொருவராய்
நிர்வாணம் ஆக
நிர்மாணித்தவர் மட்டும்
நெடிதுயர்ந்து நின்றார்.
அப்போதைய மந்திரி
பாடம் படிக்க
எல்லோரும் ஒரே குரலில்
பாடினார்கள் -
``புல்லாகி....பூண்டாகி ...
கல்லாகி ......களியாகி...
எல்லாகி..... எலியாகி
புள்ளாகி.......புலியாகி ...''
சுசீந்திரன்.