இன்சொல் பேசுவோம் நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்...
இன்சொல் பேசுவோம்
நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை, வய வேந்தே!
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!
உரை: பகைவர்கள் பாதுகாத்துவந்த அரண்களை ஒருபொருட்டாக சிறிதும் மதியாது, அவையனைத்தையும் அழித்து, பகைவர்தம் முடியில் சூடிய பொன்மகுடங்களை உருக்கி அவைகளை உன் கால்களில் வீரக் கழல்களாக அணிந்த வலிய ஆண்மையுடைய வேந்தே! ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில் ஏழு யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே! தலைவனே! நீ இன்சொல் உடையவனாகவும் காட்சிக்கு எளியவனாகவும் இருப்பாயாக. உன்னை இகழ்ந்து பாடுவோர் தலைகுனியவும், உன்னைப் புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் தலை நிமிர்ந்து நிற்கவும், இன்று கண்டதுபோன்றே என்றும் காண்போமாக.